search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய யூனியன் ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பதில்
    X

    ஐரோப்பிய யூனியன் ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பதில்

    கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனின் அபராத நடவடிக்கைக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதில் அளித்திருக்கிறார். #Google



    உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமாக கூகுள் இருக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள், ஆன்ட்ராய்டு உற்பத்தியாளர்களிடம் தனது செயலிகளை வலுக்கட்டாயமாக புகுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஐரோப்பிய யூனியனில் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. 

    விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 500 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்பட்டது.



    இத்துடன் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கூறியது.

    ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது:-

    ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை இலவச-ஆன்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். பயனர்கள் சராசரியாக 50 செயலிகளை தாங்களாகவே இன்ஸ்டால் செய்கின்றனர். மேலும், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அன்-இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.



    மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் எங்களது செயலிகளை தங்களது சாதனங்களில் அனுமதிக்காத போது, ஆன்ட்ராய்டு தளத்தை இது பெரிதும் பாதிக்கும். இதுவரை எங்களின் வியாபார யுக்தியானது, மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் எங்களது தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தவோ அல்லது கடினமான விநியோக முறையை பின்பற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தவில்லை.

    இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    கூகுள் தனது செயலிகளை சாதனங்களில் வழங்குவதை எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஒருவேளை, மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தாங்களாகவே பிரவுசரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தால், கூகுளின் மொபைல் விளம்பர வருவாயினை அதிகம் பாதிக்கும். கூகுளின் டிஜிட்டல் வருவாயில் விளம்பரங்களில் இருந்து மட்டும் 50% அதிகம் ஆகும்.

    ஆன்ட்ராய்டு வியாபார யுக்தி மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூகுள் எச்சரித்துள்ளது. இதன் மூலம் மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உரிமம் அடிப்படையில் வழங்க துவங்கும். கூகுள் க்ரோம் பிரவுசர் மொபைல் போன்களின் டீஃபால்ட் பிரவுசர் பகுதியில் இருந்து நீக்கப்பட்டாலும், பயனர்கள் இதனை அவர்களாகவே பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்வர் என்றே கூறலாம்.
    Next Story
    ×