search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Cadres"

    தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளதாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க, நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

    22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை கழகம் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 பாராளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது.

    சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

    இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.


    தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    மத்திய - மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரசாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.

    மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப்பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன் பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!

    எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கை தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும் ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

    மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.க. வின் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கிஞ்சிற்றும் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து மே 23-ந் தேதிக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்.

    அயராத உழைப்பிற்கும், அதற்கு மக்கள் தந்த ஆதரவிற்கும், முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளது.

    ஆட்சிக்காலத்தின் கடைசி நாட்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளோருக்கு இது தெரியும். அதனால்தான், தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட பல தகிடுதத்தங்களைச் செய்தனர்.

    பணத்தால் வாக்குகளை விலை பேசும் வேலைகளில் தீவிரமாக இறங்கினர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல, தங்கள் செயலை மறைக்க தி.மு.க.வின் மீது பழியைப் போட்டு வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தினர். மக்களிடம் உண்மை அம்பலப்பட்ட நிலையில், மதரீதியாக சாதிரீதியாக வன்முறைகளைத் தூண்டும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கினர்.

    கனன்று கொண்டிருக்கும் வன்முறை நெருப்பை சுயலாப நோக்கில் விசிறி விடும் வேலையை வாக்குப் பதிவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுடைய தோல்வி பயத்தின் காரணமாக வெளிப்படும் மனப்பதற்றத்தின் விளைவுகள். இவற்றைத் தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்; வெறுத்து விலக்கி வைப்பார்கள்.

    வன்முறையைத் தூண்டி விட்டு, நம் கவனத்தைத் திசை திருப்பி, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை விதைத்து, மிச்ச மிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களின் இயல்பான மோசடிகளால் கழகத்தின் வெற்றியைத் தட்டிப் பறித்து, தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என மாநிலத்தில் ஆளுகின்ற அடிமை அ.தி. மு.க. ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து, கணக்குப் போடுகிறார்கள்.

    அது தப்புக் கணக்கு, பிற்போக்குத்தனமான பிழைக் கணக்கு என்பதை மக்கள் சந்தேகத்திற்கு இடமே இன்றி நிரூபிக்கத் தயாராகிவிட்ட நிலையில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க. வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது.

    மக்கள் அளித்த தீர்ப்பை மாற்றும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய முடியுமா என்ற திட்டத்துடன்தான் மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஒரு பெண் அதிகாரியை நுழையச் செய்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்குள்ள ஆவணங்களைக் கைப்பற்றி மோசடி செய்ய முயற்சித்த மோசமான நடவடிக்கை அம்பலமாகிவிட்டது.

    கடல் போன்ற மக்களவைத் தேர்தல் களத்தையும், ஆறு போன்ற 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தையும் எதிர்கொண்டு கடந்தது போலவே, வாய்க் கால் போன்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நாம் செயலாற்றிட வேண்டும்.

    கடலிலும் ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர்கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழி மறித்து திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பார்கள்.

    திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மாநில அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார்கள். அதனை முறியடித்திடும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

    ஆட்சி மாற்றத்திற்கு நம்மைவிட அதிக ஆர்வமாக உள்ள வாக்காளர்களின் மனதில், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற உண்மையையும் நம்பிக்கையையும் நன்கு விதைத்திடும் வகையில் இடைத்தேர்தல் களப் பணிகள் அமையட்டும். அது முழுமையான வெற்றியாக மலரட்டும்.

    ஏப்ரல் 18-ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே19-ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் உழைப்பின் வியர்வை, மக்களின் வாக்குகளாக மாறி, உறுதியாகட்டும் வெற்றி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார். #DMK #MKStalin
    தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாம் போற்றி வரும் நல்லுறவின் தொடர்ச்சியாக, தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு நடைபெற்ற ஊடகத்தினருடனான சந்திப்பின் போது, “உங்கள் பிறந்த நாளில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகுமா?” என கேட்டார்கள். அப்போதே, “என் பிறந்த நாளைக் கொண்டாடும் மன உணர்வில் நான் இல்லை” என்பதைத் தெரிவித்தேன்.

    மார்ச் 1-ந்தேதி என்னுடைய பிறந்தநாள் என்ற போதும், நம்மை ஆளாக்கி நெறிப்படுத்தி பொது வாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தலைவர் கலைஞர் நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம்.



    ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் முதல் நிகழ்வாக, தலைவரும் தந்தையுமான கலைஞரிடமும், அன்னையார் தயாளு அம்மையாரிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர் கலைஞரின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்தநாள் நிகழ்வுகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு.

    வழக்கமாக மார்ச் 1 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தும் கழகத்தின் மாநில -மாவட்ட - ஒன்றிய - பேரூர் - சிற்றூர் - துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இந்த முறை அதனைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிறந்த நாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை கைவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்ற வரை வழங்கிட வேண்டுகிறேன்.

    தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள வலிமையான கூட்டணி, எதிர்வரும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், மாற்றாரும் மலைத்திடும் வண்ணம், இப்போதிருந்தே கண்ணயராமல் களப்பணியாற்றுவதே கழக உடன்பிறப்புகள் எனக்கு பிறந்தநாளில் உவந்து அளித்திடும் உயர்வான பரிசாகும். உன்னதமான அந்த உழைப்பு தரப்போகும் “நாற்பதுக்கு நாற்பது” என்ற வெற்றிக்கனியை, என்றும் நம் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் உயிர்த்துடிப்பான நினைவுகளுக்கு பணிவோடு காணிக்கையாக்குவோம்!.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
    சென்னை:

    தமிழகம் முழுவதும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


    பேனருக்கு தடை வரவேற்கத்தக்க ஒன்று. பொது மக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது என நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

    ஆனாலும் சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன். அதனை தி.மு.க. வினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
    அண்ணா அறிவாலயத்தில் 16-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவையடுத்து, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென திரண்டு வரும்படி தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என கலைஞரின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

    அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது.

    கழகத்தின் தொண்டர்களாம் கலைஞரின் உடன் பிறப்புகள் யாவரும் ஆர்வ மிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    கலைஞர் நமக்கு வகுத்தளித்த கட்டுப்பாட்டு உணர்வினைக் காத்திட வேண்டும்.

    இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம்.

    அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.

    சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.

    அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது.

    அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு காட்டுகின்ற நன்றி செலுத்துகின்ற காணிக்கை!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KarunanidhiStatue
    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை தி.மு.க.வினர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இயற்கைப் பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடிமுடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின் வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. குடிசைகளை இழந்தவர்கள் பரிதவிக்கிறார்கள். தென்னை, வாழை, நெற்பயிர் எல்லாம் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வைச் சாய்த்துப் பறித்திருக்கிறது.

    நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டத்தின் மக்கள் நடுவீதியில் நின்று, தங்கள் உணவுக்காக உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலத்தைப் பார்க்கும் மனதிடம் இதயமுள்ள எவருக்கும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகால வாழ்வையும் சேமிப்பையும் சூறையாடி விட்டது கஜா புயல். முழுமையாக மீண்டு வருவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் என்றாலும், பேரிடரை எதிர் கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது.

    தி.மு.க.வின் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. கழக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற் கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 11 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைக் கொடியசைத்து அனுப்பும்போது, அவற்றில் இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஆவண செய்துள்ளேன்.

    இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்க்ரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக் கூடாது என்ற உறுதிமொழியையும்தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது.

    ஒரு மரத்துக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவதுடன், புதிய தென்னங்கன்றுகளையும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பே சரிவர நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்த காலநீட்டிப்பு வேண்டும், கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் டெல்டா மக்கள். நியாய விலைக் கடைகளில் டிசம்பர் மாதத்திற்கான மண் எண்ணையை நவம்பரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

    ஆனால், இருமாத காலத்திற்கான மண்எண்ணையை விலை கொடுத்து வாங்கும் சக்தி, புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இல்லை. நியாய விலைக் கடைகள் மூலமாக அவர்களுக்கு இயன்றவரை இலவசமாகப் பொருட்கள் கிடைக்க வழி கண்டிட வேண்டும்.

    மத்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். அவர்களின் காலில் விழுந்து பெண்கள் கதறிய காட்சிகளும் செய்திகளும் மனதை உலுக்குகின்றன. எத்தகைய இழப்புகள் ஏற்பட்டிருந்தால், இப்படி உதவி கேட்டு அழுதிருப்பார்கள்!


    இரண்டு வாரங்கள் கடந்தும் இயல்பு நிலை திரும்பாமல் இருட்டிலும் சேற்றிலும் சகதியிலும் வானமே கூரையாக கட்டாந்தரையே பாயாக வாழவேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் சுற்றும் பிரதமருக்கு இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டின் பாதிப்புகளை விமானத்தில் பறந்து பார்க்கக்கூட நேரமில்லை, விருப்பமில்லை. மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமான செயல்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவில்லை.

    தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடியபோது அவற்றை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும் அளவுக்கு வேகம் காட்டிய மத்திய அரசும் அதற்குத் துணை நின்ற மாநிலஅரசும், தற்போது இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித மீட்புக் குழுவும் வரவில்லையே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எங்களை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு கஜா பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனவா என்பது தான் மக்களின் சந்தேகமும் அச்சமாகவும் இருக்கிறது.

    மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.

    சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகைதான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

    காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் கழகத்தின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். கழக உடன்பிறப்புகளின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்!.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
    நாளை மறுநாள் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin

    சென்னை, அக். 12-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண் டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

    ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள் தான் இந்நாட்டை ஆள்கிறார் களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலை யில், பொதுமக்களின் இறுதி யானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான். அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய இடமாகும்.

    ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும் சூழ்ச்சி களையும் செய்து வருகி றார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக் களை வதில் உரிய வேகமும் போதிய அக் கறையும் காட்டப்படவில்லை.

    கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன.

    அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக் குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்“ என வலியுறுத்தப்பட்டது.

    இதனை கழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின வாக்கா ளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக் குடி வந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை; ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்.

    இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கி விடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சேர்த்து, வாக் காளர் அடையாள அட்டை களையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்பு மேற்கொள்கிறது.

    இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட் டோரின் பெயர்கள் நீக்கப் படுவதில் அலட்சியமும், கழகத்தினர்,சிறுபான்மையினர், தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக் காளர்கள் பெயர் களை நீக்குவதில் அதிதீவிர அக்க றையும் காட்டி ஆளுங்கட் சியினர் செயல்பட்டு வரு கின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14-ந்தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும்.

    புதிய இளம் வாக்கா ளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளை ஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புக்கான கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14 காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் சிறிதும் சோர் வின்றிச் செயல் பட்டால் தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத் தடுத்திட முடியும். வாக்காளர் பட்டிய லில் உள்ள களைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர் தல் கள அரசியலும் கழகத்தின் இரு கண்கள்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதி யில் கழக வேட்பாளர் மலைக் கண்ணன் ஒரேயொரு வாக் கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை கலைஞர் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தி யிருக்கிறார். அந்த விழிப்புணர் வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும்.

    இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு, வெற்றியினை உறுதி செய்வீர்!

    எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே தி.மு.க.வின் இலக்கு என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். ஆம் நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம்.

    உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் தகுதி வாய்ந்த நிழலில்- அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்ளவரை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

    காலத்திற்கேற்ற அணுகு முறைகள்-மக்களின் மனநிலையை உணர்ந்த மாற்றங்கள் லட்சியத்தை வென்றடைவதற்கான வியூகங்கள் இவற்றுடன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதை நமது; பயணம் புதிது.

    நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள், இரண்டு.

    ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத-ஊழல் கறை படிந்த-அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது. மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்திக் காட்டுவது.

    இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.


    மத்தியில் ஆள்கின்ற நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக, பொருளதார, கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் செய்து வருகிறது. இவற்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்கின்ற அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தை எதிர்கொள்கின்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து செல்வதில், மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்காக அயராது உழைக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் இருக்கும்.

    சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அ.தி.மு.க. அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்துகூட வரலாம்.

    எப்படி வந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் இலக்கு. நாம் என்ற உணர்வுடன் என்றும் இணைந்து பயணிப்போம். இனப் பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம். அதனை நம் உயிருக்கு மேலான தலைவர் கலைஞருக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதால் தொண்டர்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#MKStalin #DMKCadres #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு உடன் பிறப்பின் உயிர் மூச்சாகத் திகழும் கழகத் தலைவர் கலைஞர் உடல்நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 கழகத் தோழர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து மனஅழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன். தலைவர் கலைஞரின் உடல் நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன், உடன் பிறப்புகள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த உடன் பிறப்புகளின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், தலைவர் கலைஞரின் உடல் நிலை சீராகி வருகிறது. தலைவர் கலைஞருக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து காவேரி மருத்துமனையில் சிகிச்சை அளித்து, தலைவர் அவர்களது உடல் நிலையை கண் அயராது கண்காணித்து வருகிறது. கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே “தலைவா வா” என்று எழுப்பிய அந்த உயிர்த்துடிப்பான உணர்ச்சி மிகு முழக்கங்கள் சிறிதும் வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக, தலைவர் கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நல்ல செய்தியை வெளியிட்டு, நமக்கெல்லாம் காவேரி மருத்துவமனை நன் நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.


    தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஏராளமான தியாகத் தழும்புகளை இன்முகத்தோடு ஏற்ற, தடந்தோள் கொண்ட உடன்பிறப்புகளால் தாங்கி நிற்கும் அசைக்க முடியாத கோட்டை. அந்த உடன்பிறப்புகளில் ஒருவரை இழந்தால் கூட அந்தச் செய்தி, என் மனதை இடிபோல் வந்து தாக்குகிறது என்பதை தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் உணர வேண்டும் என்று பெரிதும் கேட்டுக் கொள்கிறேன்.

    பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்து, தலைவர் கலைஞரால் இன்றுவரை எந்த நிலையிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வரும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி அறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி, கழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres #Karunanidhi
    ×