search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWC 2019"

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கடைசி பயிற்சி போட்டி வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றுது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 36 ரன்னும், லிவிஸ் 50 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 47 ரன்னும், அந்த்ரே ரசல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.



    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் பிளெண்டல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். பிளெண்டல் 106 ரன்னும், கேன் வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    லண்டன்:

    10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    சவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இலங்கை அணியை எதிர்கொண்டது.

    டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.



    ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 
    முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை, இதில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. 
    பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் பீதி அடைய தேவையில்லை என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா 179 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும், உலகக்கோப்பையை வெல்லுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் பீதி அடைய தேவையில்லை என்று கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியை நான் மதிப்பீடு செய்யமாட்டேன். இது ஒரு நீண்ட தொடர். இதுபோன்று சம்பவம் கிரிக்கெட்டில் நடைபெறலாம்.

    முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். என்ன மாதிரியான ஆடுகளம் என்பதை புரிந்து கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் பயன்படும். அதற்குள் பீதி அடைய தேவையில்லை.

    பெரும்பாலான அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் லெவனை (11 வீரர்களை) முடிவு செய்ய விரும்பாது. பந்து வீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்திக் கொள்ள பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.



    ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும வகையில் விளையாடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஏனென்றால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அபாரமாக உள்ளது. மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது. அந்த அணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெண்டுல்கர் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால், அந்த அணி சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
    இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதுவரை உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கும் இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பைக்குப்பின் அணியை வலுவாக கட்டமைத்தது. கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது.

    அந்த அணி ஏராளமான ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஜாப்ரா ஆர்சர், மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக பீல்டிங் பயிற்சி மேற்கொண்டபோது அந்த அணியின் கேப்டன் மோர்கனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

    நேற்றைய போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்த ஜாப்ரா ஆர்சர் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்குப்பின் மீண்டும் களம் இறங்கினார். இருவரும் தொடர்ச்சியாக 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் இங்கிலாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



    அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலின் தோல் கிழிந்தது. நேற்று ஒரேநாளில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    மார்க் வுட்டுக்கு முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இலேசான காயமாக இருந்தால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆர்சருக்கு லேசான காயம்தான். அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மருத்துக்குழு தெரிவித்துள்ளது. 15 பேரில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
    சவுதாம்ப்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது.
    சவுதாம்ப்டன்:

    சவுதாம்ப்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது.

    காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ரன்னும், உஸ்மான் கவாஜா 31 ரன்னும் எடுத்தனர்.

    ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்டீவன் சுமித் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 116 ரன் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது.



    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களும் எடுத்தனர்.

    கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
    லண்டன்:

    10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் அவுட்டானார்.

    ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், டோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

    இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது.



    நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர். 

    இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.

    நேற்றைய ஆட்டத்தில் டோனிக்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
    ஆஷஸ் தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் நல்லவிதமாக நடத்தப்படுவார்கள் என நம்புகிறேன் என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். தற்போது தடை முடிந்துள்ளதால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆஷஸ் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். மேலும், இங்கிலாந்து ரசிகர்களும் கேலி கிண்டல் செய்வார்கள்.

    ஆஷஸ் தொடரின்போது பால் டேம்பரிங் விவகாரத்தை வைத்து இருவரையும் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருவரும் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘அவர்களை மிகுந்த அளிவில் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தொடரை சந்தோசமாக விளையாட வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், அது வேடிக்கையாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள். நாம் மனிதர்கள். நமக்கு உணர்வுகள் இருக்கிறது.

    அவர்கள் சிறந்த மக்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் நல்லவிதமாக நடத்துவார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை பற்றி பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்றார்.
    இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரரான பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஜெப் தாம்சன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடர் குறித்து நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெப் தாம்சன் கூறியதாவது:-

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் தனது வேகத்தின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

    மேலும் விதவிதமான பந்துவீச்சை மாற்றி வீசுகிறார். அவரது பந்துவீசும் முறை கணிக்க முடியாத அளவில் உள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எந்த பேட்ஸ்மேனும் சரியாக கவனித்தனர் என்று நான் பார்க்கவில்லை.

    பும்ராவுடன் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவும் கவனிக்கப்படக் கூடியவர். அவரும் சிறப்பான நிலையில் உள்ளார்.



    அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    அவர் மட்டும் நன்றாக பந்துவீச ஆரம்பித்துவிட்டால் அவர்தான் உலகிலேயே மற்றவர்களைவிட சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார். அதற்கு அவர் வேகத்தை கூட்ட வேண்டும். அதேவேளையில் சரியான அளவிலும் பந்துவீச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இங்கிலாந்தில் நடைபெற இருப்பது ஆல்-ரவுண்டர்களுக்கான உலகக்கோப்பை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிளைவ் லாய்டு தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் சாதிக்க ஒவ்வொரு அணியும் தீவிரமாக உள்ளன. இதற்கிடையே உலகக்கோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்டு கூறியதாவது:-

    உலகக்கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இது பந்து வீச்சாளர்களுக்கு சிறிய போராட்டத்தை அளிக்கும். இந்த உலக கோப்பை ஆல்-ரவுண்டர்களுக்கான போட்டி தொடராக இருக்கும் என்று கருதுகிறேன்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணியிலும் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இதனால்தான் ஆல்-ரவுண்டருக்கான உலகக்கோப்பை போட்டி என்று நம்புகிறேன்.

    இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடும் என்று நானும் நம்புகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீசின் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் சிறந்த வீரர்கள் பலரை இழந்து இருக்கிறோம். தற்போது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.



    கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த அணி சம பலத்துடன் இருக்கிறது. அவர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிளைவ் லாய்ட்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 1975, 1979-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றது. 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதாகும் இவர் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடியுள்ள இவருக்கு, இங்கிலாந்தில் நடைபெற்ற இருக்கும் உலகக்கோப்பை ஐந்தாவது தொடராகும்.

    பொதுவாக கிறிஸ் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்கள் எடுக்க வேகமாக ஓடமாட்டார். மேலும் அவரால் தொடர்ந்து பீல்டிங் செய்ய இயலாது.



    கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் கெய்ல் ஜிம்மை தவிர்த்து யோகா மற்றும் மசாஜ் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்.

    ஜம்மை தவிர்ப்பதாலும், போட்டிகளுக்கு இடையில் அதிக அளவில் ஓய்வு எடுப்பதாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்று கெய்ல் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.



    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.

    இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
    இந்திய அணியின் 4-வது வீரர் வரிசைக்கு இவர் தான் பொருத்தமானவராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று கூறுவது கடினம். ஏனென்றால் போட்டி முறை சுவாரசியமாக இருக்கிறது. அனைத்து அணிகளும் ஒன்றோடு ஒன்று மோதுகிறது. இதுதான் உண்மையான சாம்பியனை நிர்ணயம் செய்யும்.

    தொடக்கத்தில் சிறப்பாக ஆடாவிட்டால் அதில் இருந்து மீண்டு முன்னேறி வருவது சவாலானது. இந்திய அணியை பொறுத்தவரை அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    கேப்டன் விராட்கோலி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீரர் பும்ரா ஆகியோர் உலக கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

    4-வது வீரர் வரிசைக்கு லோகேஷ் ராகுல் தான் பொறுத்தமானவர். ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் தினேஷ் கார்த்திக் சிறந்தவர். ஆனாலும் அவர் 6 அல்லது 7-வது வரிசைக்குத்தான் தகுதியானவர்.

    லோகேஷ் ராகுல்

    பும்ரா, முகமது சமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் மேலும் பக்கபலமாக இன்னொரு வேகப்பந்து வீரர் தேவை என்றே கருதுகிறேன்.

    ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் பந்து வீசுவார்கள் என்றாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை.

    இவ்வாறு காம்பிர் கூறினார்.
    ×