search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappa Temple"

    கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) கோவில்.
    கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) ஆலயம்.

    தல வரலாறு :

    சாம்பரன் எனும் முனிவர் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில், நிலா (பாரதப்புழா) ஆற்றின் நடுவில் இருந்த சிறிய தீவு தென்பட்டது. அந்தத் தீவுக்குச் சென்ற முனிவருக்கு, அதன் அழகும், அமைதியும் பிடித்துப் போனது. முனிவர் அந்த இடத்திலேயே தியானத்தில் அமர்ந்தார்.

    நீண்ட கால தியானத்தில் இருந்த அவரின் முன்பு ஒரு ஒளி வட்டம் தோன்றியது. உடனே அவர், இறைவன் விஷ்ணு தனக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று நினைத்து, இறைவன் விஷ்ணுவை நினைத்துத் தியானத்தில் ஆழ்ந்தார். ஆனால், அவர் நினைத்தது போல், அவருக்கு விஷ்ணு காட்சியளிக்கவில்லை. அவ்விடத்தில் ஒளி வட்டம் அப்படியே இருந்து கொண்டிருந்தது.

    அதன் பிறகு, இறைவன் சிவபெருமான் தமக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று முனிவர் நினைத்தார். அதனால் சிவபெருமானை நினைத்துத் தியானித்தார். ஆனால் சிவபெருமானும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. அதே நேரம் ஒளி வட்டமும் மறையாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், துர்க்கா என்று முனிவர், ஒவ்வொரு தெய்வமாகத் தியானித்தார். அவர் தியானித்த எவரும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ஒளி வட்டம் மட்டும் அப்படியே இருந்தது.

    தன் முன்னேத் தோன்றிய ஒளி வட்டத்தை, முனிவர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அந்த ஒளி வட்டத்தினுள் சாஸ்தா, அவரது மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட முனிவர், சாஸ்தாவை வணங்கினார். அதன் பின்னர் சிறிது நேரத்தில், அந்த ஒளி வட்டம் மறைந்து போனது.

    பின்னர் முனிவர், ஆற்றங்கரையில் இருந்த குட்டிசேரி மணாவைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவரிடம், தான் ஆற்றின் நடுவில் இருந்த தீவில் கண்ட காட்சியைச் சொன்னார். அவ்விடத்தில் சாஸ்தாவுக்குக் கோவில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யும்படிச் சொல்லி, சாஸ்தா வழிபாட்டுக்கான விதிமுறைகளையும் அவருக்குச் சொல்லிச் சென்றார். இதையடுத்து நிலா ஆற்றின் நடுவிலிருந்த தீவில் ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    ஆலய அமைப்பு :

    ஆற்றிற்குள் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில், சுயம்புவாக இருக்கும் சாஸ்தா தவிர்த்து, விஷ்ணு, கணபதி, சிவா, பிரபா, துர்க்கா, சத்யகன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, சத்யகன், துர்க்கா, பத்ரகாளி மற்றும் சிவபெருமான் ஆகியோருக்கான சன்னிதியும் உள்ளது. சாஸ்தாவிற்கு வழிபாடு செய்யப்படும் போது, இங்கிருக்கும் அனைத்துத் தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யப்படுகின்றன.

    இங்குள்ள இறைவனுக்கு சத்தச்சாதம், பனப் பாயசம், நெய் பாயசம் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இத்தல இறைவனுக்கு தூபம், தீபம் காட்டப்படுவதில்லை. வழிபாட்டு நேரத்தில் மணியும் அடிப்பதும் இல்லை.

    ஆலயத்திற்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைக் காலம் மற்றும் வெள்ளக் காலங்களில், இக்கோவிலைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து விடுகிறது. இக்காலங்களில் பூைஜ செய்பவர் மட்டும் படகில் சென்று வழிபாடு செய்து திரும்புகிறார்.

    இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும், தீராத நோயுடையவர்கள் வந்து வழிபட்டால், அவர்களது நோய் நீங்கி, நீண்ட வாழ்வைப் பெறுவர் என்பதும் இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்கு, சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.

    ஆலயம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற நாட்களில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை வேளையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், திரிப்பிரங்கோடு ஊராட்சியில் சாம்ராவட்டம் என்ற இடத்தில் ஆலயம் உள்ளது. திரூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்ல, திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. #Ssabarimalai #AyyappaTemple #Makaravilakku
    சபரிமலை:

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். பிரசித்திப்பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.



    இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
        
    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பம்பை, சபரிமலை, எருமேலி, நிலக்கல் உள்பட பக்தர்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #Ssabarimalai #AyyappaTemple #Makaravilakku
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.

    வழி காட்டிய வாள் :

    பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் ஐந்து சாஸ்தா (ஐயப்பன்) கோவில்களில் ஒன்றான அச்சன்கோவில் திருத்தலத்தில் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவிகளுடன் ஐயப்ப அரசர் தோற்றத்தில் அழகாகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதற்காக, மரபுவழிக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    முன்பொரு காலத்தில், இக்கோவிலில் இருக்கும் ஐயப்பனை வழிபடுவதற்காக முதியவர் ஒருவர், தனது ஊரிலிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பகல் கடந்து இரவு நேரமாகி விட்டது. இரவு வேளையில், அவருக்குப் பாதை சரியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு, ‘வழி தவறி வேறு பாதையில் சென்று, ஏதாவது ஆபத்து வந்து விடுமோ?’ என்கிற அச்சமும் ஏற்பட்டது.

    உடனே அவர், ஐயப்பனை மனதில் நினைத்து, அச்சத்தை நீக்கிச் சரியான பாதையைக் காட்டியருள வேண்டினார். அப்போது, “பக்தனே! உன் முன்பாக தோன்றும் என் வாள், உன்னை என் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும். அச்சன்கோவிலை அடைந்ததும், அந்த வாளை என் சன்னிதியில் சேர்த்துவிடு” என்று ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது.

    சிறிது நேரத்தில், ஒளி மிகுந்த வாள் ஒன்று அங்கே தோன்றியது. அந்த வாள் முன்னோக்கிச் செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சென்றார், முதியவர். மறுநாள் அதிகாலையில் கோவிலை அடைந்த முதியவர், கோவில் அர்ச்சகரைச் சந்தித்து, இரவில் காட்டுக்குள் நடந்ததைச் சொல்லி அந்த வாளை அவரிடம் ஒப்படைத்தார்.

    அப்போது கருவறையில் இருந்து, “என் வாளைக் கருவறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். நான் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்” என்று ஒரு குரல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் அதனைக் கேட்டனர். அன்று முதல் அந்த வாள், அச்சன்கோவில் ஐயப்பனின் கருவறையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்று அச்சம் நீக்கிய ஐயப்பனின் வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா - புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் ‘கல்யாண சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை ‘பெரும் மருத்துவர்’ (மகாவைத்யா) என்றும் அழைக்கின்றனர்.

    ஆலய வளாகத்தில், சிவன், பார்வதி, கணபதி, சுப்பிரமணியர், நாகராஜா, நாகயட்சி, மாளிகப்புறத்தம்மாள், சப்பானி மாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர்.

    வழிபாடும்.. பலன்களும்.. :

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மேலும் ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை பெருவிழா (மகோத்ஸவம்) நடைபெறுகிறது.

    இவ்விழா நாட்களில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் வாள் போன்றவை புனலூர் கருவூலத்தில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்கப்படுகின்றன. இந்த திருவாபரண ஊர்வலம் செல்லும் பாதையானது, கேரளாவிலுள்ள புனலூர், ஆரியங்காவு, தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட நகரங்களின் வழியாக அமைந்திருக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடத்தப் பெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் பூச்சொறிதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. மேலும் இத்தல ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும். பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம் என்கின்றனர்.

    பூர்ணா- புஷ்கலை சமேத ஐயப்பன்

    ஆலயத்தின் சிறப்புகள் :

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஐயப்பன் ஆலயங்களில் இருக்கும் ஐயப்பன் சிலைகள், நெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்து பின்னர் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அச்சன் கோவிலில் இருக்கும் ஐயப்பன் சிலை மட்டும் பழைய சிலையாக அப்படியே இருக்கிறது.

    இக்கோவிலில் ஐயப்பன் பூர்ணா, புஷ்கலை ஆகிய இரு தேவியர்களுடன் முழுமையான குடும்பத்தினராக இருந்து அரசாட்சி செய்கிறார்.

    ஐயப்பன் கோவில்களில், சபரிமலை ஆலயத்துக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற கோவிலாக அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திகழ்கிறது.

    ஐயப்பன் கோவில்களில் சபரிமலை, அச்சன் கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. பிற ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் இல்லை.

    அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், இங்கிருக்கும் அம்மன் சன்னிதியில் பட்டுத்துணி, வளையல் போன்றவற்றுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மாய, மந்திரச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இக்கோவிலில் நடைபெறும் ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழாவில் கலந்து கொண்டு, கருப்பசாமியை வழிபட்டால், தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வளம் பெறுவர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், புனலூர் நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் அச்சன்கோவில் இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் விளம்பரத்துக்காக பெண்கள் செல்வதாக குற்றம்சாட்டி அவர்களை அனுமதிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #SabarimalaTemple
    சென்னை:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டக்காரகள் மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றனர்.



    இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண்களில் கருப்புத்துணிகளை கட்டியபடி, ‘10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் விளம்பரத்துக்காக சபரிமலைக்கு செல்வதாகவும், அவர்கள் பக்தர்கள் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தூய்மையாக இல்லை எனவும், அவர்கள் கோவிலுக்குள் சென்றால் ஐயப்பனின் புனிதம் மற்றும் பிரம்மச்சரியம் வீணாகிவிடும் எனவும் இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple
    சபரிமலை கோயிலில் வழிபாடு செய்ய அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.
     
    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.


    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சுமார் 500 பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், கேரள காவல்துறையில் பணியாற்றும் 40 பெண் போலீசார் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரையில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TDBreviewpetition #entryofwomen #LordAyyappatemple #Sabarimala #SabrimalaVerdict
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி வருகிற 3-ந்தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை நடத்த உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். எனவே இக்கோவிலுக்குள் நுழைய ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

    பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இக்கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று இளம் வக்கீல்கள் சங்கம் உள்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்திய இளம் வக்கீல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரிவான மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு, மகளிர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.


    இதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று வழங்கியது. இதில், இடம் பெற்ற 4 நீதிபதிகள் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு கூறினர்.

    பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியதால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வெளியானதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமையும் என்று கூறினர். கோவிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு, பந்தளம் ராஜ குடும்பத்தினரும் தீர்ப்பு ஆகம விதிகளுக்கு முரணானது என்றனர்.

    அதே நேரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

    மண்டல பூஜைக்கான விழா தொடங்க இன்னும் 45 நாட்கள் உள்ளன. அதற்கு முன்பு வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி ஆலோசிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 3-ந்தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் அங்கு பெண்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை. சபரிமலை வரும் பெண்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுவார்கள்.

    பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை பெண்களுக்கான கழிப்பறைகளோ, தங்கும் அறைகளோ, தரிசன கியூவரிசையோ கிடையாது. இனி சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் அனைத்தையும் புதியதாக உருவாக்க வேண்டும்.

    முதலில் தனி கழிப்பறைகள், கியூ வசதி, தங்கும் அறைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களில் விரதம் இருந்து இருமுடி கட்டி வருபவர்களே 18 படிகள் ஏற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.


    இந்த நிலையில் 18-ம் படி ஏற ஆண், பெண் இருவரையும் எப்படி அனுமதிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். 18-ம் படியின் அகலம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த படியில் ஒரு நிமிடத்திற்கு 36 முதல் 50 பக்தர்கள் ஏறிச் செல்வார்கள்.

    மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில் இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு அதிகபட்சம் 92 பேராக உயர்த்தப்படும். அதற்கு மேல் பக்தர்களை அனுமதிக்க முடியாது. இனி பெண்களும் 18-ம் படி ஏற வரும்போது, அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை அளிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    சபரிமலை கோவில் தற்போது 59 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இனி பெண்களும் வந்தால் இப்போது இருக்கும் இட வசதியை அதிகரிக்க வேண்டும். குடிநீர் வசதி, பம்பை ஆற்றில் பெண்கள் குளிக்க தனி ஏற்பாடு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    இதற்கு இப்போது இருக்கும் இடத்தை காட்டிலும் கூடுதலாக 250 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று தேவசம் போர்டு கருதுகிறது. இந்த நிலத்தை சபரிமலை வனப்பகுதியில் இருந்துதான் எடுக்க வேண்டும்.

    இந்த மலைப்பகுதி பெரியார் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்களிடம் இருந்து வனப்பகுதியை பெற அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு முன்னால் உள்ள இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்பே பெண்கள் சபரிமலைக்கு சுதந்திரமாக வந்து செல்ல முடியும்.

    இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியவரும். #Sabarimala #SabarimalaVerdict #SC
    புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சபரிமலையில் ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடியது. அதைத்தொடர்ந்து நடந்த தேவ பிரசன்னத்தில் கூறப்பட்ட அருள்வாக்குப்படி பரிகார பூஜைகள் நடந்தது. இந்த பரிகார பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடந்தது.

    நேற்று முன் தினம் இரவு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.

    மீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 22- ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    இந்நாட்களில், தேவ பிரசன்ன பரிகாரத்தின் படி கூவி அழைத்து பிராயசித்தம் செய்யும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.


    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. புதிய தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.
    கேரளாவில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பம்பை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை ஆறு திசை மாறி ஓடும் சூழ்நிலை உருவானது.

    இதனால் சபரிமலை செல்ல பம்பை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த 3 பாலங்கள் இருந்த இடம் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் முற்றிலுமாக சிதைந்து விட்டது. மேலும் பெரிய பெரிய பாறைகளும், மரங்களும் ஆங்காங்கே பாதைகளை அடைத்தபடி கிடக்கிறது. இதனால் ஆவணி மாத பூஜையின் போது பக்தர்கள் யாரும் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள்.

    தற்போது சபரிமலையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. புதிய தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.

    சபரிமலையில் நேற்றும் லேசான மழை பெய்தது. கொட்டும் மழையிலும் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட குறைவான அளவு பக்தர்களே சபரிமலைக்கு வந்திருந்தனர். பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதால் ஆங்காங்கே தற்காலிக டெண்டுகள் அமைத்து பக்தர்கள் தங்கி இருந்தனர். மின் வசதி இல்லாததால் பேட்டரி லைட்டுகளை பக்தர்கள் கொண்டு சென்றிருந்தனர். வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    நவம்பர் மாதம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை சபரி மலையில் நடைபெற உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள் என்பதால் மண்டல பூஜைக்கு முன்பு சபரிமலையில் சீரமைப்பு பணிகளை விரை வுப்படுத்தி முடிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.
    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் பக்தர்கள் எச்சரிகையாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சன்னிதான பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 21-ந்தேதி வரை, அதிகாலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டு, அதற்கு அடுத்த நாளில் (15-ந்தேதி) பிரசித்தி பெற்ற நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. சன்னிதானத்தில் நடைபெறும் இந்த பூஜையானது, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

    அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.



    நடை திறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

    15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    19-ந் தேதியன்று அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.முன்னதாக 17-ந் தேதி சன்னிதானத்தில் ஜோதிட பண்டிதர்கள் தலைமையில், ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு பள்ளத்தில் விழுந்த சம்பவம் தொடர்பாக அருள் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×