search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் பக்தர்கள் எச்சரிகையாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சன்னிதான பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 21-ந்தேதி வரை, அதிகாலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டு, அதற்கு அடுத்த நாளில் (15-ந்தேதி) பிரசித்தி பெற்ற நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. சன்னிதானத்தில் நடைபெறும் இந்த பூஜையானது, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×