search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 Note"

    • தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
    • 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

    அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.

    முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

    தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

    ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.

    சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.

    பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.

    மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.

    பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது.

    அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது. அந்த பத்திரிகை முழுக்க, முழுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் உள்ளது.

    ரூபாய் நோட்டில் அதன் முகமதிப்பு அச்சிடப்பட்டு இருப்பது போலவே திருமணம் நடைபெற்ற ஆண்டு, ரூபாய் நோட்டுக்கான எண் வடிவில் திருமண தேதி, ரிசர்வ் வங்கியின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும் இடத்தில் 'லவ் பேங் ஆப் லைப்' என்றும், ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கும் பிற அம்சங்களைப் போல் திருமண தகவல்களை அச்சிட்டு இருந்தனர்.

    மேலும் காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன. மேலும் அதில் ஒரு கியூ-ஆர் கோடையும் அச்சிட்டு இருந்தனர். அதை ஸ்கேன் செய்தால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.

    தேஜு இந்த அழைப்பிதழை உடுப்பியில் உள்ள தனது நண்பர் மூலமாக டிசைன் செய்து அச்சிட்டு இருக்கிறார். தற்போது அதை பலரும் பார்த்து ரசிப்பது டிரண்ட் ஆகி உள்ளது.

    • பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.
    • சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது.

    செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிரடியாக வெளியிட்டது. அதன்படி ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், அதனை வைத்திருப்போர் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் பதற்றத்தின் காரணமாக தற்போதே ரூ.2 ஆயிரம் நோட்டை கண்ணில்படும் இடங்களுக்கெல்லாம் சென்று மாற்ற தொடங்கி வருகிறார்கள். இதில் முன்னணியில் இருப்பது பெட்ரோல் பங்குகள் தான். ஆனால் இப்போது பெட்ரோல் பங்குகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டை கண்டால் கோபப்பட தொடங்கிவிட்டார்கள். ஏன்? என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விளக்கம் சொல்லியும் தவிக்கிறார்கள்.

    இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-

    பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டை நீட்டுகிறார். அவருக்கு பாக்கி ரூ.1,900 தர வேண்டியதுள்ளது. இப்படி ஒரு நாளில் 50 பேர் வந்தால் சில்லரைக்கு நாங்கள் எங்கே போவது?

    சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் - பெட்ரோல் பங்க் ஊழியர்களிடையே வாக்குவாதமே ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களை தவிப்புக்குள்ளாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.

    இப்போதைய சூழலில் இந்த நடைமுறை சிக்கல்களை போக்க வங்கிகளுக்கு நாங்கள் பணத்தை டெபாசிட் செய்ய போகும்போது, நாங்கள் கேட்கும் தொகைக்கு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று அவர்கள் சில்லரையாகவும் தர வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இதை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
    • உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை.

    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 20-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவது, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்தி மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இது பண நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறை தான். எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை. நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி சுத்தமான ரூபாய் நோட்டு கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

    ஒரு குறிப்பிட்ட தொடரின் நோட்டுகளை திரும்பபெற்று புதிய நோட்டுகளை வெளியிடுகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுகிறோம்.

    ஆனால் அவை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக தொடர்கின்றன. அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். எனவே வணிகர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டபோது பணத்தின் மதிப்பை விரைவாக நிரப்பும் நோக்கில்தான் ரூ.2000 நோட்டுகள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.

    இன்று போதுமான அளவு மற்ற வகை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் கூட அதன் உச்சமான 6 லட்சத்து 73 ஆயிரம் கோடியில் இருந்து சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

    அந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அவற்றின் வாழ்க்கை சுழற்சியை முடித்துவிட்டன. வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 30-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்.

    இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர் உரிய இடவசதியை ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். போதுமான அளவு அச்சிடப்பட்ட நோட்டுகள் உள்ளன. ரூபாய் நோட்டை மாற்ற 4 மாத காலம் அவகாசம் உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். அனைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என்று நம்புகிறோம்.

    வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை.

    ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ரிசர்வ் வங்கி உணரும். 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வணிகர்களிடையே தயக்கம் முன்பும் இருந்தது. தற்போது திரும்ப பெறப்படுவதால் அது அதிகரித்திருக்கலாம்.

    வங்கி கணக்குகளில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு பான் எண் தேவை. இது தற்போது ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கும் பொருந்தும். இந்திய நாணய மேலாண்மை அமைப்பு மிகவும் வலுவானது.

    2 ஆயிரம் ரூபாய் பணபரிமாற்றம் தொடர்பாக நடந்துவரும் செயல்பாடுகளை வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம் போல் கண்காணிப்பார்கள். வங்கிகள் தினமும் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும்.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக மிக குறைவாக இருக்கும். புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் வெறும் 10.8 சதவீதம் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
    • ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளதுடன் அதை வங்கிகளில் கொடுத்து மாற்ற செப்டம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    இதையடுத்து நாளை (23-ந்தேதி) முதல் பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    • சமூக வலைதளங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் போஸ்டர்கள் உலாவி வருகிறது.
    • போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் அதாவது ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் சமூக வலைதளங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் போஸ்டர்கள் உலாவி வருகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் மலர்ந்தது 8-11- 2016. உதிர்ந்தது 19-5- 2023-என்றும் 2 ஆயிரம் நோட்டு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்ற வாசகத்தையும் அதில் அச்சடிக்கப்பட்டு கண்ணீர் சிந்துவது போல் படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
    • கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தபோதே இது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்போதே கூறினேன். சாதாரண சில்லறை வியாபாரத்துக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் பலனளிக்காததால் அப்போது மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர்.

    சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.

    இப்போது கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    ஆனால் ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்ற அடையாள சான்று தேவையில்லை, ஆதாரம் தேவையில்லை எனக்கூறியுள்ளது. அப்படி என்றால் இந்த நோட்டை பதுக்கி வைத்துள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய கருத்தும் தவறாகிவிட்டதே?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சனை.
    • டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு தகுந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பது இல்லை. குறிப்பாக கிரேட்-2 பதவியில் இருக்கும் காவல் துறையினருக்கு பதவி உயர்வு வராதது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரின் பதவி உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சரிடம் டி.ஜி.பி. பேச வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவதில் பாதி தான் உண்மை. பாதி உண்மை இல்லை. புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் நாம் பயனடைந்து வருகிறோம். இது மத்திய அரசின் கனவு.

    இதை தமிழக அரசு சரியாக உபயோகப்படுத்துவதில்லை. காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். வீடுகளில் சோலார் பேனல் வைத்து இருப்பவர்களுக்கு மானியம் கொடுப்போம் என்று தி.மு.க. அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் சாராயம் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட வேண்டும்.

    மேலும் கள் விற்பனையை தொடங்க வேண்டும். இதில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கள் மூலம் வருமானத்தை எப்படி ஈட்டி கொடுக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் வெள்ளை அறிக்கையில் உள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கிவைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சினை. டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாரதிய ஜனதாவுக்கு வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தொண்டனாக வேலை செய்வேன். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
    • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

    வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

    ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை, அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

    ×