search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை- அண்ணாமலை
    X

    தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை- அண்ணாமலை

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சனை.
    • டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு தகுந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பது இல்லை. குறிப்பாக கிரேட்-2 பதவியில் இருக்கும் காவல் துறையினருக்கு பதவி உயர்வு வராதது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரின் பதவி உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சரிடம் டி.ஜி.பி. பேச வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவதில் பாதி தான் உண்மை. பாதி உண்மை இல்லை. புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் நாம் பயனடைந்து வருகிறோம். இது மத்திய அரசின் கனவு.

    இதை தமிழக அரசு சரியாக உபயோகப்படுத்துவதில்லை. காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். வீடுகளில் சோலார் பேனல் வைத்து இருப்பவர்களுக்கு மானியம் கொடுப்போம் என்று தி.மு.க. அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் சாராயம் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட வேண்டும்.

    மேலும் கள் விற்பனையை தொடங்க வேண்டும். இதில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கள் மூலம் வருமானத்தை எப்படி ஈட்டி கொடுக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் வெள்ளை அறிக்கையில் உள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கிவைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சினை. டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாரதிய ஜனதாவுக்கு வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தொண்டனாக வேலை செய்வேன். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×