search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியூஆர் கோடு"

    • ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
    • கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.

    சென்னிமலை:

    ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.

    மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

    இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார். 

    • சமீபகாலமாக திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
    • பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடப்படும்.

    இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என்று பெருமையோடு சொல்கிறோம். இதில் எல்லோரும் அவரவர் பங்குக்கு ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பது தப்பில்லை.

    ரோட்டோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வரை டிஜிட்டல் மயத்துக்கு மாறி விட்டது என்னவோ ஆச்சரியம்தான். இதை விழிப்புணர்வு என்று எடுத்துக்கொண்டாலும் சரி. புதுமையின் மீதான ஈர்ப்பு என்றாலும் சரி.

    அதே நேரம் சதாசர்வ காலமும் ஒவ்வொருவரும் நாமும் டிஜிட்டலில் புதுமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி யோசித்து யோசித்து ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு புதுமையை செய்து கொண்டே வருகிறார்கள்.

    சமீபகாலமாக திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணத்திற்கு வர முடியாதவர்களும் அந்த அழைப்பிதழில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து மொய்யை அனுப்பி விடுவதற்கு அப்படி ஒரு புதிய வசதியை கொண்டு வந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அதையும் தாண்டி விட்டார்கள் ஒரு புதுமண தம்பதி. பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடப்படும். அப்படி மெஹந்தி போட்டதில் அந்தப் பெண்ணின் கையில் கியூஆர் கோர்டு வடிவை பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்த்துச் சொல்ல போகும்போது மணப்பெண் கையை குலுக்கி கவரில் இருக்கும் பணத்தையும் கையில் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் கை குலுக்கி விட்டு கையில் இருக்கும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து மொய்யை செலுத்தி விடலாமே என்ற புதுமையான ஐடியாவை வெளியிட்டுள்ளார்கள். அந்த பெண்ணின் கையில் வரையப்பட்டிருந்த கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்து பலர் மொய்யை அனுப்பியது பலரையும் வியக்க வைத்தது.

    இப்படி எல்லாமா யோசிப்பாய்ங்க என்றுதான் நினைக்கத் தோன்றும். புதுமைக்கு ஒரு அளவே இல்லையா என்று சொல்லும் அளவுக்கு டிஜிட்டல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்படுத்துகிறது.

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியாறு, வடவள்ளி-கவுண்டம்புதூர் கூட்டு குடிநீர்த்திட்டம் ஆகியவற்றின் மூலம் ராட்சத குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர மாநகர அளவில் போக்குவரத்து பாலங்கள், தார்சாலை, சாக்கடை கால்வாய், அங்கன் வாடிமையம், பள்ளி வகுப்பறைகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்கு ஏதுவாக தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர், வரிவிதிப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து செல்போன் மூலம் கருத்துக்களை பெறுவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீடு-வீடாக சென்று ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    மாநகர அளவில் குடிநீர் விநியோகம், சொத்து வரிவிதிப்பு உள்ளிட்ட சேவைகள் மற்றும் திட்டப்ப ணிகள் குறித்து பொது மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக கியூஆர்கோடு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இது மாநகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்படும். எனவே பொதுமக்கள் ஆன்டிராய்டு செல்போனில் கியூஆர்கோடை ஸ்கேன் செய்து, அதன்மூலம் மாந கராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்க ளின் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
    • ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது.

    ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவை போன்று ஊட்டி பூங்காவை அமைக்க விரும்பி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று, செடிகளை நடவு செய்தார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஜலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரக்கன்றுகளை கொண்டுவந்து நடவு செய்தார்.

    தற்போது, இந்த நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர்.

    இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

    இதில், அந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எப்போது நடவு செய்யப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தது. அவற்றின் மூலிகைத் தன்மை என்ன என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

    இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறியதாவது-

    தாவரவியல் பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தாவரங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறாமரம், ருத்ராட்சை மரங்களில் கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பெயர் பலகை வைக்கப்படும், பின்னர் அனைத்து மரங்களுக்கும் கியூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர் :

    ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அந்த ஒப்பந்தத்தின் கீழ் வணிக பயன்பாட்டிற்காக புவனேஸ்வர் நிதி தொழில்நுட்ப நிறுவனம், நொய்டா நிறுவனத்துக்கு யூபிஐ (பண பரிமாற்றத்துக்கான அடையான எண்) விவரங்களை வழங்கியது.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களான கரண் சிங் குமார் மற்றும் அவரது சகோதரர் லாலு சிங் ஆகியோர் புவனேஸ்வர் நிதி நிறுவனத்தின் கியூ.ஆர். கோடுக்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.

    இந்த மோசடியின் மூலம் புவனேஸ்வர் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.14 கோடியை நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் சுருட்டினர்.

    புவனேஸ்வர் நிறுவனம் தங்களது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதித்தபோது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் உடனடியாக இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது.

    அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கியூ.ஆர். கோடை பயன்படுத்தி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது.

    கோவை:

    சில பல வருடங்களுக்கு முன்பு வரை கடைகள், ஓட்டல்கள், பெரிய அங்காடிகள் ஆகியவற்றிற்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

    வங்கி கணக்கு வைத்திருக்கும் பலரும், வங்கிகளுக்கு சென்றே பணம் எடுப்பதும், பணம் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நாகரீகம் வளர, வளர அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வங்கிகளில் பணம் போடுவது மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றை செய்து விடுகின்றனர்.

    அதுபோன்று தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது.

    கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர். அனைத்து கடைகளிலும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்களுக்கு சில்லரை மீதி கொடுப்பது போன்ற பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.

    இதுவரை கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது. அப்படி கொடுப்பவர்களுக்கு, சில கண்டக்டர்கள் மீதி சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலர் சரியான சில்லறை எடுத்து வர வேண்டியதானே என கடிந்து கொள்வதும் உண்டு. கடிந்து கொண்டாலும் சில்லறையை கொடுத்து விடுவார்கள்.

    இதனால் அனைத்து பஸ்களிலும் சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருக்கும். இதன் காரணமாக பல நேரங்களில் பெரிய அளவிலான தகராறுகள் கூட ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    அதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணும் விதமாக கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பஸ்களை இயக்கி வருகிறது.

    இந்த 5 பஸ்களிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

    3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

    இதுகுறித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளரான கார்த்திக் பாபு கூறியதாவது:-

    பஸ்களில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பஸ்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

    உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பஸ்களிலும் ஒட்டினோம்.

    இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது.

    மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் முதல் முறையாக தனியார் டவுன் பஸ்சில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், இதுபோன்ற மற்ற பஸ்களிலும் செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது.

    அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது. அந்த பத்திரிகை முழுக்க, முழுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் உள்ளது.

    ரூபாய் நோட்டில் அதன் முகமதிப்பு அச்சிடப்பட்டு இருப்பது போலவே திருமணம் நடைபெற்ற ஆண்டு, ரூபாய் நோட்டுக்கான எண் வடிவில் திருமண தேதி, ரிசர்வ் வங்கியின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும் இடத்தில் 'லவ் பேங் ஆப் லைப்' என்றும், ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கும் பிற அம்சங்களைப் போல் திருமண தகவல்களை அச்சிட்டு இருந்தனர்.

    மேலும் காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன. மேலும் அதில் ஒரு கியூ-ஆர் கோடையும் அச்சிட்டு இருந்தனர். அதை ஸ்கேன் செய்தால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.

    தேஜு இந்த அழைப்பிதழை உடுப்பியில் உள்ள தனது நண்பர் மூலமாக டிசைன் செய்து அச்சிட்டு இருக்கிறார். தற்போது அதை பலரும் பார்த்து ரசிப்பது டிரண்ட் ஆகி உள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன.

    இந்த தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.

    தரமான சேவை வழங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெற தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதன்படி தொழிலின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் பாதுகாப்பு மேலாண்மை வினியோகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான ஐ.எஸ்.ஓ. 28000 என 2 வகையான தரச்சான்று பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கேஷ் பஜார், மினி சூப்பர் மார்க்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூரில் 2 கடைகள், ஓட்டுப்பட்டறை, வசம்பள்ளம், வெலிங்டன், ஜெயந்தி நகர், கூர்க்கா கேம்ப், ஊட்டி மார்க்கெட் போஸ்-1, காந்தல்-2, பிங்கர் போஸ்ட் பகுதிகளில் இயங்கும் ரேஷன் கடைகள் என மொத்தம் 60 கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

    முத்ததோரை, தாய்சோலை, தூனேரி, எல்லக்கண்டி ஆகிய 4 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 28000:2022 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    கியூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதி நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×