search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    • வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
    • சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. 13ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

    காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ எதிரிநாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார்.
    • காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி காட்பாடி கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.26 கோடி மதிப்பில் புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றம் பணி நடைபெற்று வருகிறது.

    பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார். நானும் எத்தனையோ கவர்னர்களை பார்த்து விட்டேன்.

    இவரை போல் யாரையும் பார்த்தது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்.

    தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வு இன்றி நடைபெற்று வருகிறது. காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    அந்த கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    450 பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. விசாரணை குழுவினர் தெரிவித்தாக கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.

    • தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.
    • பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.

    சென்னை:

    வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாடு கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசும்போது, தந்தை பெரியார், மணியம்மையார் பற்றி பேசிய கருத்து சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில், தி.மு.க.வுக்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கும் இருந்த தொடர்புகளை பற்றி நான் பேசிக்கொண்டு வரும்போது, தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.

    வேலூருக்கு பிரசாரத்துக்கு வந்த தந்தை பெரியார், மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணிகளை பார்த்த பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். எதிர்காலத்தில் கட்சியை காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். இது பொருந்தா திருமணம் என்று திராவிட கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார்.

    இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், 'பெரியார் மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்' என்று சொல்லவேண்டிய இடத்தில், 'பெரியார் மணியம்மையாரை கூட்டிக்கொண்டு போய்விட்டார்' என்று பேசிவிட்டேன். 'அழைத்துக்கொண்டு போனார்' என்பதற்கும், 'கூட்டிக்கொண்டு போனார்' என்பதற்கும் பலத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

    என்னுடைய இந்த பேச்சு, அண்ணன் வீரமணிக்கும், பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில், அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள்
    • காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று கோட்டூர்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம்.

    தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள்.

    அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்த பிரச்சினை இல்லை. கண்ணை மூடி திறந்து விடுவார்கள்.

    தற்போதைய நிலையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், தமிழகத்திற்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அருமையாக தெரிவித்து இருக்கிறது.

    மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை. எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். பேச்சுவார்த்தை என்பது இனிமேல் இல்லை. பேச்சுவார்தைக்கு போனால் நமது கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவார்கள். இனிமேல் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை.

    • கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.
    • தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர்.

    ஆனால் மத்திய மந்திரி தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் காவிரிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் என்னென்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அலுவலகத்துக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    சுமார் 1 மணிநேரம் முகுல் ரோஹத்கியுடன் ஆலோசனை நடத்திய துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.

    கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.

    எனவே உச்சநீதிமன்றம் தான் நமக்கு ஒரே தீர்வு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் கை கொடுத்து உள்ளது. தொடக்கம் முதல் சுப்ரீம் கோர்ட்டு தான் தமிழகத்துக்கு தீர்வை பெற்று தந்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துரைத்து உரிய நீரை திறக்க கோருவோம்.

    தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை.
    • காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

    ஆலந்தூர்:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

    இதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக அரசை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக 5,000 கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசுதான் அமைத்தது.

    எனவே இப்போது மத்திய அரசிடம் முறையிட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு டெல்லி செல்கிறது. இன்று மாலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடக் கோரி வலியுறுத்த இருக்கிறோம்.

    காவிரி தண்ணீர் விவகாரத்தில், கர்நாடகா மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் தயவை நாடிதான், கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. இது நியாயமானது அல்ல என்பது என் கருத்து.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறது. நாம் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விட்டு, அங்கு தண்ணீர் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும்படி கூறியிருக்கிறார்கள். எனவே கர்நாடகா தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்று பொய்யான காரணத்தை கூறுகிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதே விமானத்தில் இந்தக் குழுவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் சென்றார். இந்தகுழுவில் உள்ள மற்ற எம்பிக்கள் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.

    • தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
    • கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலையில் நடைபெற உள்ளது.

    மத்திய மந்திரியை சந்திப்பதற்காக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை (அ.தி.மு.க.), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.கே.வாசன் (த.மா.கா.), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஏ.கே.பி.சின்னராஜ் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    அமைச்சர் துரை முருகனும் இன்று காலையில் டெல்லி சென்றார்.

    மத்திய மந்திரியை சந்திக்கும் போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

    • உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம்
    • கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்

    சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    கே: உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளாரே?

    ப: உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதுதான் உச்சநீதிமன்றம். சென்னைக்கு இந்த பிரச்சினை ஆரம்பித்ததோ, என்றைக்கு இதே பிரச்சினைதான். அவங்க முதலில் நடுவர் மன்றத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடுவர் மன்றத்துக்கு வாதாடி அதை பெற்றோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்க கூடாது என்று கர்நாடகா முட்டுக்கட்டை போட்டது.

    அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதற்கும் தீர்வு கண்டோம். அதன் பிறகு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்றனர். அப்போதும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்துள்ளோம். இனியும் பெறுவோம்.

    கே: சேப்பாக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அமலாக்கத்துறை சோதனை நடத்துள்ளதே?

    ப: அதெல்லாம் எனக்கு தெரியாது.

    கே: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்-அமைச்சர் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். அங்குள்ள கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே?

    ப: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.

    கே: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே?

    ப: எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இதில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் டெல்டா மற்றும் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 24-ந்தேதி காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறி வாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பி னர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழ கத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரி பார்க்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் டெல்டா மற்றும் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    இப்போது மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்(பி.எல்.ஏ.-2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

    மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டு உள்ள 14 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரிமாவட்டங்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
    • கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    செப்டம்பர் 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர்.
    • போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க. செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகியோர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் துரைமுருகன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    • குறுவை சாகுபடி ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.
    • நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டால் போதும்.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடும் நிலையில் சென்னையில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்து விடும்படி அந்த கமிட்டி சிபாரிசு செய்திருக்கிறது. ஆனால் அது போதாது என்று நாம் சொல்லி உள்ளோம். எனவே இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது.

    அதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நம்முடைய கோரிக்கையை வற்புறுத்தி கேட்கும்படி கூறி இருக்கிறேன்.

    24000 கன அடி தண்ணீர் இருந்தால்தான் பயிர்கள் காயாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லுமாறு கேட்டி ருக்கிறேன். ஆகவே இந்த கோரிக்கையை தமிழக அரசின் சார்பாக வைப்பார்கள்.

    கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறாரே? ஆணையம் சொல்லியும் கேட்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

    பதில்:- அதனால்தான் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறோம். வெள்ளிக்கிழமை வழக்கு வருகிறது. குறுவை சாகுபடி ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.

    கேள்வி:- மேட்டூர் அணையில் தண்ணீரும் குறைந்து கொண்டே வருகிறது. மாற்று ஏற்பாடு என்ன செய்யப் போகிறீர்கள்?

    பதில்:- மாற்று ஏற்பாடு என்ன பண்ண முடியும்?

    கேள்வி:- போதிய தண்ணீர் கிடைக்காததால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படுமா?

    பதில்:- வழக்கமாக இன்சூரன்ஸ் இருக்கிறது. அதை கொடுப்பார்கள்.

    கேள்வி:- கர்நாடகா 45 டி.எம்.சி. தண்ணீர் தராமல் நிலுவையில் வைத்துள்ளனர். அதை கேட்டு வலியுறுத்துவீர்களா?

    பதில்:- நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டால் போதும். தண்ணீர் வரத்து அதிகமான பிறகு அதை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

    கேள்வி:- செப்டம்பர் 17-ந்தேதி ஒழுங்காற்று குழு காரைக்காலில் ஆய்வு நடத்த உள்ளதாக கூறி உள்ளனர். அதில் தமிழக அதிகாரிகள் கலந்து கொள்வார்களா?

    பதில்:- ஆமாம். நாம் இல்லாமல் எப்படி ஆய்வு நடக்கும். கமிட்டியில்தான் நாம் இருக்கிறோமே?

    கேள்வி:- ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பெறுவதில் பெரிய பிரச்சினையாக இருக்கிறதே?

    பதில்:- நான் சொல்வது என்னவென்றால் தண்ணீர் சில நேரங்களில் குறைந்து போவது உண்டு. பருவ மழை பொய்த்து போனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் குறைந்து விடும்.

    தண்ணீர் நிறைய இருக்கிற போது நமக்கு மாதாந்திரம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று ஒரு கணக்கு உள்ளது. தண்ணீர் குறைந்து விட்டால், இருக்கிற தண்ணீரை எப்படி பங்கிடுவது என்பதை கணக்கிட்டு வழங்க வேண்டும். அதை காவிரி மேலாண்மை ஆணையம்தான் செய்ய வேண்டும். அதில் அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் மறு படியும் கோர்ட்டில் சொல்லி உள்ளோம். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஆணையம் செய்யவில்லை என்று கூறி உள்ளோம். இது எங்களது குற்றச்சாட்டில் ஒன்றாகும்.

    இப்போது நமக்கு வேண்டியது உயிர் தண்ணீராக காவிரியில் தினமும் நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் கன அடி திறக்க கேட்கிறோம். அவர்கள் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. 49 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். பயிரை காப்பாற்ற வேண்டும். குடிநீரை பற்றி அப்புறம் பேசலாம்.

    நீர் பற்றாக்குறை காலத்தில் இருக்கிற நீரை எப்படி பங்கீட்டு கொள்வது என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. அதில் பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால் அவர்கள் இன்னும் அந்த வேலையை செய்யவில்லை. அதையும் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×