search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக எம்பிக்கள் கூட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
    • அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.

    அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேல்-சபையில் 3-ல் 2 பங்கு ஆதரவு பா.ஜ.க. அரசுக்கு இல்லை என்பதால் மசோதாவை அங்கேயே தோற்கடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.
    • நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும்.

    சென்னை:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.

    சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற, மேல்-சபை எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளில்-தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க "கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை" துவக்கி வைத்து-ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய-தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நன்றியை-பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

    காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும்.

    ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல்-இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரெயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதலமைச்சர், பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்றுவரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

    பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும்-ஒன்றிய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும்.

    பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி-"கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை" பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மறைந்த முதலமைச்சர் கலைஞர், இன்று அவர் வழியில் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் மசோதாவை நிறைவேற்றக்கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. எனவே இந்த சிறப்பு கூட்டத்தில் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

    இந்தியாவிற்கே முன்னோடியாக சமூக நீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், "மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்", "அரசு துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்", "தனியார் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்", "பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள கிரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்", "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளோடு "இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்" மசோதாவையும் இந்த சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட "விஸ்வகர்மா யோஜானா" திட்டம், குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்லவிடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.

    எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, தற்போது "இந்தியா" கூட்டணிக்கு அஞ்சி "பாரத்" என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்-முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, பாராளுமன்றத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    • அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
    • கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    செப்டம்பர் 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×