search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gajendra Singh Shekhawat"

    • ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கலந்துகொண்டார்.
    • பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராய்பூரில் உள்ள ராமர் கோவிலில் தூய்மை இயக்கத்தில் இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டதாகவும், வடகிழக்கு இந்தியாவை பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கும் சதிகள் நடைபெற்றதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

    ராய்பூரில் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின்னர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிவிடிஜி கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பிரதான் மந்திரி ஜன்மம்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நயா ராய்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    • ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    • மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.

    என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.
    • தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர்.

    ஆனால் மத்திய மந்திரி தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் காவிரிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் என்னென்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அலுவலகத்துக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    சுமார் 1 மணிநேரம் முகுல் ரோஹத்கியுடன் ஆலோசனை நடத்திய துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.

    கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.

    எனவே உச்சநீதிமன்றம் தான் நமக்கு ஒரே தீர்வு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் கை கொடுத்து உள்ளது. தொடக்கம் முதல் சுப்ரீம் கோர்ட்டு தான் தமிழகத்துக்கு தீர்வை பெற்று தந்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துரைத்து உரிய நீரை திறக்க கோருவோம்.

    தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும்.
    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் நிலையான அரசியல் செய்ய முடியாது.

    தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு கண்டக்குரல் ஓங்கி ஒலித்தது.

    இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்தார்.

     

    இவரது கருத்துக்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது..,

    "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் பொதுவாக ஹிம்சையை எதிர்த்து, அஹிம்சையின் பக்கம் இருப்பவர்கள். யாரும் அப்படி பேசுவதற்கு உரிமை இல்லை, யாராவது உணர்ச்சியில் அப்படி பேசினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரும் பேசக் கூடாது."

    "இந்த மதம் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரையும் அரவணைத்ததால், தான் இந்தியா இன்று இப்படிப்பட்ட நாடாக இருக்கிறது. யார் சொல்லி இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது," என்று தெரிவித்து உள்ளார்.

    • தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்றிரவு டெல்லி சென்றிருந்தார்.

    இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார். காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சாகுபடி பிரச்சினை மிக மோசமாகி விடும்.

    எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடியாக குறைந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்நாடகாவில் உள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ். ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சி.யில் 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக துணை முதல் மந்திரி சிவக்குமார் கூறி வருவதையும் மத்திய மந்திரியின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார்.

    எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். இதை மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி சொல்லி உள்ளேன். 22.54 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    • ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை.
    • கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன.

    காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.

    அது மட்டுமின்றி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார்.

    அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள்.

    கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

    • சூரத் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு எல்லா வாய்ப்புகளும் அளித்துள்ளது.
    • சட்டம் தனது கடமையை செய்துள்ளது.

    புதுடெல்லி :

    மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது, கோர்ட்டு எடுத்த நடவடிக்கை. சட்டப்படி, அவரது எம்.பி. பதவியை மக்களவை பறித்துள்ளது. இந்த நீதித்துறை சார்ந்த, சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்கள் சோனியாகாந்தி குடும்பத்தை நீதித்துறையை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.

    சூரத் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு எல்லா வாய்ப்புகளும் அளித்துள்ளது. மன்னிப்பு கேட்கக்கூட வாய்ப்பு அளித்தது. ஆனால், தனது குடும்பத்துக்கு எதிராக தீர்ப்பு அளிக்க கோர்ட்டுக்கு துணிச்சல் இருக்காது என்று கருதி, அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.

    சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதில் மத்திய அரசுக்கோ, பா.ஜனதாவுக்கோ தொடர்பில்லை. சோனியாகாந்தி குடும்பம், தன்னை உயர்தர வர்க்கம் என்றும், அரசியல் சட்டத்தை விட உயர்ந்தது என்றும் கருதுகிறது. ஒரு எம்.பி.யின் பதவி பறிப்பு பிரச்சினையில், மக்களவைக்கு விருப்ப உரிமை அதிகாரம் எதுவும் கிடையாது. ஜனநாயகம், அச்சுறுத்தலில் இருப்பதாக கூறுபவர்கள்தான், நீதித்துறை நடவடிக்கைக்கு எதிராக தெருமுனை போராட்டம் நடத்துவதன் மூலம், ஜனநாயகத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

    நாட்டை இழிவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் ராகுல்காந்தி விட்டுவிடுவது இல்லை. ஜனநாயகத்தின் பல்வேறு தூண்களுக்கு சவால் விட்டு வருகிறார். கோர்ட்டு மன்னிப்பு கேட்க வாய்ப்பு அளித்தும் அதை பயன்படுத்தாமல் அவர் ஆணவமாக நடந்து கொண்டார். ஜனநாயக நடைமுறையை விட தன்னை உயர்வாக கருதுவதால், அவர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.

    தேசபக்தரும், சுதந்திர போராட்ட வீரருமான வீர சாவர்க்கரை ராகுல்காந்தி இழிவுபடுத்தி வருகிறார். தான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

    சாவர்க்கரை பற்றி அவர் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்பினால், அந்தமான் ஜெயிலுக்கு சென்று, சாவர்க்கர் யார்? அவர் செய்த தியாகங்கள் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரம் அடுத்த மாதம் கிடைக்கும் என மத்திய மந்திரி கஜேந்திர செகாவாத் தெரிவித்துள்ளார். #GajendraShekhawat
    புதுடெல்லி:

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    இதில் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை இப்போதைய நிதியாண்டிலேயே (2018-19) முன்தேதியிட்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

    இந்த தொகை அடுத்த மாதமே (மார்ச்) அனைத்து விவசாயிகள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய விவசாயத்துறை மந்திரி கஜேந்திரசெகாவாத் கூறியுள்ளார்.

    நாட்டில் மொத்தம் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 12 கோடியே 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக உத்தரபிர தேசத்தில் 2 கோடியே 21 லட்சம் பேர் உள்ளனர்.

    டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை 4 மாதத்திற்கான தொகை ரூ.2 ஆயிரம் ஆகும். இந்த தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் அடுத்த மாதம் செலுத்தப்படும். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த நிதியாண்டில் (2019-20) இந்த திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்குகளை இணைத்திருந்தால் அதன் அடிப்படையில் பணத்தை செலுத்த உள்ளனர். ஆனால் பல விவசாயிகள் இவ்வாறு இணைக்காமல் உள்ளதாகவும் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் யார் என்பதை கணக்கிடுவதில் சிக்கல் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பல மாநிலங்களில் டிஜிட்டல் ரீதியாக நிலப்பதிவேடுகள் செய்யப்படவில்லை. எனவே யார், யாருக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை வழங்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    ஆனால் இதுபற்றி மத்திய மந்திரி கஜேந்திர செகாவாத் கூறும்போது, நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு பெரும்பாலான விவசாயிகளுக்கு நில சுகாதார அட்டை வழங்கி இருக்கிறது. அவர்கள் பற்றிய பட்டியல் முழுமையாக எங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் பணத்தை வழங்கி விடுவோம்.

    முதல் தடவை சற்று சிரமமாக இருக்கலாம். அடுத்த தடவை அது எல்லாம் சரியாகி விடும். குறைந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் பட்டியலை மாநில அரசிடம் கேட்க இருக்கிறோம். எனவே எல்லா விவரங்களும் கிடைத்துவிடும். பணம் வழங்குவதில் பிரச்சினை இருக்காது என்று கூறினார். #GajendraShekhawat
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெற்பயிருக்கும் கோதுமை பயிருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர் என மத்திய வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். #RahulGandhi #GajendraSinghShekhawat
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்றார்.

    அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் விவசாயிகள் மிகுந்த வேதனைப்பட்டு வருவதாகவும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்துவரும் பரப்புரை தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த ஷெகாவத், நெற்பயிருக்கும் கோதுமை பயிருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டார்.


    நான் ஒரு விவசாயி, விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், மத்திய அரசில் விவசாயிகளின் பிரதிநிதியாகவும் அங்கம்வகித்து வருகிறேன். அதனால், வேளாண்மைத்துறையைப் பற்றி மற்றவர்களை விட எனக்கு அதிகமாக தெரியும்.

    விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக வேளாண்மைத்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, வெள்ளாட்டின் குட்டிக்கும், செம்மறியாட்டின் குட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்,  நெற்பயிருக்கும் கோதுமை பயிருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எல்லாம் நான் பதில் அளித்து கொண்டிருப்பது பொருத்தமாக இருக்காது என்றும் ஷெகாவத் தெரிவித்துள்ளார். #RahulGandhi #differencebetweenpaddyandwheat #GajendraSinghShekhawat
    ×