சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தான் ஒரே தீர்வு: டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த அமைச்சர் துரைமுருகன் பேட்டி

கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தான் ஒரே தீர்வு: டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர்.

ஆனால் மத்திய மந்திரி தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் என்னென்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அலுவலகத்துக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

சுமார் 1 மணிநேரம் முகுல் ரோஹத்கியுடன் ஆலோசனை நடத்திய துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.

கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.

எனவே உச்சநீதிமன்றம் தான் நமக்கு ஒரே தீர்வு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் கை கொடுத்து உள்ளது. தொடக்கம் முதல் சுப்ரீம் கோர்ட்டு தான் தமிழகத்துக்கு தீர்வை பெற்று தந்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துரைத்து உரிய நீரை திறக்க கோருவோம்.

தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com