என் மலர்
உலகம்
- இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு மிகச்சரியான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
தனது நாட்டின் உள்நாட்டுச் சவால்கள் மற்றும் பாதுகாப்புத் தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது.
ஆனால், இத்தகைய வான்வழித் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டுக் குறைகளை ஒருபோதும் மறைக்க முடியாது.
நாட்டின் நிலப்பரப்பையும் மக்களின் பாதுகாப்பையும் காப்பது எங்களின் சட்டப்பூர்வமான மற்றும் தேசியப் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளது.
- டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் இறக்குமதி வரி கொள்கைகளை ரத்து செய்வதற்கு முன்னதாக இந்தச் சர்வே நடத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அரசு குறித்து அந்நாட்டு மக்களிடம் அண்மையில் சர்வே நடத்தப்பட்டது.
ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதன்படி, 65% அமெரிக்கர்கள் டிரம்ப் பணவீக்கத்தைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளதாக கருதுகின்றனர்.
டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 34% பேர் மட்டுமே இதை ஆதரிக்கின்றனர்.
டிரம்பின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை 62% மக்கள் அங்கீகரிக்கவில்லை.
குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குடியேற்றக் கொள்கைகளுக்காக ராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது திட்டத்திற்கு 54% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் நடந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது இரு அமெரிக்கக் குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகத்தில் 57% மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு, டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி கட்சி என 33% பேரும், ஜனநாயகக் கட்சி என 31% பேரும், யாருமில்லை இல்லை என 31% பேரும் தெரிவித்துள்ளனர்.
Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு சமீபத்திய ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபராக டிரம்ப்-ஐ 40% அமெரிக்கர்கள் தேர்வு செய்துள்ளனர்.
டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39% ஆகக் குறைந்துள்ளது. வெறும் 12% பேர் மட்டுமே அவரை ஒரு சிறந்த அதிபர் என்று கருதுகின்றனர்.
- மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.
- உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்கள் வழியாக உடலில் நுழையும்
இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்ஜீத் சங்கா கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் மன்ஜீத் தனது செல்ல நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நாய் அவரது காயத்தை நக்கியுள்ளது.
அடுத்த நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குக் கடுமையான 'Sepsis' தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
மன்ஜீத் சுமார் 32 வாரங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். கோமா நிலையில் இருந்தபோது, அவரது இதயம் 6 முறை துடிப்பதை நிறுத்தியது.
அவரது உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, மருத்துவர்கள் அவரது இரண்டு கைகளையும், முழங்கால்களுக்கு கீழே, இரண்டு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி மன்ஜீத் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக நிதி திரட்டி வருகிறார்.
செல்லப் பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்கள் வழியாக உடலில் நுழையும்போது இத்தகைய உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி
- இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 25 முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் இந்த பயணம் குறித்து இரு தலைவர்களும் எக்ஸ் தளத்தில் இன்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் என்றும், இந்தியா-இஸ்ரேல் உறவை இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி என்றும் நேதன்யாகு தனது பதிவில் வர்ணித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பதிவில், " நன்றி, நண்பர், பிரதமர் நேதன்யாகு. இந்தியா-இஸ்ரேல் இடையிலான பிணைப்பு, நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. வரவிருக்கும் சந்திப்பின் போது நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஜெருசலேமில் உங்களைப் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும். இதற்கு முன்பு ஜூலை 2017-ல் அவர் இஸ்ரேலுக்குச் சென்றார். இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடியே ஆவார்.
உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடைய வெளியான கோப்புகளில், பிரதமர் மோடியின் 2017 இஸ்ரேல் பயணம் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
- மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இந்த போரானது கடந்த 5 வருடங்களாக முடிவின்றி நடந்து வருகிறது. போரை நிறுத்த கடந்த வருடம் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் கடுமையாக முயன்று வருகிறார்.
பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே நேற்று உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோவை நோக்கி வந்த 10 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மறுபுறம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கைப்பற்றிய பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ரஷியா மறுப்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
- சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக
மலேசியாவின் போர்னியோ தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சபாவின் தலைநகரான கோட்டா கினபாலுவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சபாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் மிக ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தின் ஆழம் அதிகமாக இருப்பதால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
- ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
- இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ஷெராபுதீன் தனது மனைவி மற்றும் 22 மாதக் குழந்தை (1.8 வயது) ஆலன் ரூமி உடன் வசித்து வந்தார்.
கடந்த வாரம் ஒரு மாலை வேளையில், ஷெராபுதீனின் மனைவி மற்றும் குழந்தையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
தாய் தன்னை துரத்தி வருவதை கண்ட குழந்தை, அது ஒரு விளையாட்டு என நினைத்து வேகமாக ஓடியபோது, அந்தப் பாதையில் வந்த காரின் அடியில் சிக்கினான்.
காரை ஓட்டி வந்த இந்திய நபர், உடனடியாகக் குழந்தையை தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஆலன் ரூமி உயிரிழந்தான்.
குழந்தையை இழந்த துக்கத்திலும் அந்தப் பெற்றோர் காட்டிய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை என ஷெராபுதீன் தம்பதியினர் முடிவெடுத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை மன்னிப்பதாக அவர்கள் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய ஷெராபுதீன், "எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தக் குடும்பம் வரும் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் உம்ரா செல்லவும், பின்னர் ஈத் பண்டிகையைக் கொண்டாட இந்தியா வரவும் திட்டமிட்டிருந்தது.
ஈத் முடிந்து மீண்டும் அமீரகம் வந்ததும், நிரந்தரமாக அங்கேயே செட்டில் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர். ஆனால், ஒரு விபத்து அவர்களின் அனைத்துக் கனவுகளையும் கலைத்துவிட்டது.
"இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்" என்ற ஷெராபுதீன் கண்ணீருடன் தெரிவித்தார்.
- அதிபர் தேர்தலுக்கு முன்பும் ட்ரம்ப்மீது இரண்டுமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
- இந்த சம்பவம் அதிகாலை 1:30 மணிக்கு நடந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள இந்த ரிசார்ட்டில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேன் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரகசிய சேவை ஏஜெண்டுகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் துணை அதிகாரி ஆகியோர் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் வட கரோலினாவைச் சேர்ந்தவர் என்றும், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. டிரம்ப் பெரும்பாலும் வார இறுதி நாட்களை தனது ரிசார்ட்டில் கழித்தாலும், இந்த சம்பவத்தின் போது அவர் வெள்ளை மாளிகையில் இருந்தார். மனைவி மெலனியா ட்ரம்பும் அவருடன்தான் இருந்தார் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இதுதொடர்பாக ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
- அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
- அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.
பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.
தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
- 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.
இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்தது.
இதனால், டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.
பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறினார்.
இந்நிலையில், இந்தியா வங்கதேசம் இடையே 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றபின் இந்தியாவுடன் சுமூக உறவை கடைபிடிக்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தங்குமிடத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.
சமீபகாலமாக பாகிஸ்தானுக்குள் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
- வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் அதீத வரிவிதிப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ் ஆளுநர் JB Britzker, கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom நியூயார்க் ஆளுநர் Kathey Hochul ஆகியோர் காட்டமாக உள்ளனர்.






