என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அன்புமணி சார்பில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
    • திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    போராட்டத்தில் பங்கேற்குமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு டாக்டர் அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தை அன்புமணி சார்பில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு நேற்று பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

    இதுகுறித்து வழக்கறிஞர் பாலு அளித்த பேட்டியில், "த.வெ.க. முதல் மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அமைப்பாக த.வெ.க. இருக்கிறது. திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.

    எனவே இந்த போராட்டத்தில் த.வெ.க. கலந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம் என கூறினார்.

    இதையடுத்து பா.ம.க. போராட்டத்தில் த.வெ.க. பங்கேற்குமா? என த.வெ.க. தரப்பில் நிர்வாகி ரகுவிடம் கேட்டபோது, பா.ம.க. போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.விற்கு வந்த அழைப்பு கடிதத்தை கட்சி தலைவர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம்.

    கட்சி தலைவர் விஜய் பா.ம.க. கடிதம் குறித்து பரிசீலித்து த.வெ.க. பங்கேற்பது பற்றி முடிவு செய்வார் என்று கூறினார்.

    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதுகிறது.
    • இதில் சூர்யவன்ஷி 171 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் இன்று 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனை தொடர்ந்து ஆரோன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.

    இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி 171 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்னில் தனது முதல் இரட்டை சதத்தை அவர் தவறவிட்டார். இதில் 9பவுண்டரிகள், 14 சிக்சர்கள் அடங்கும். இதுவரை இந்திய அணி 32.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

    • அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
    • இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.

    பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் இளைஞர் அண்மையில் ரெயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ரெயிலில் பயணித்த சில நபர்கள் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகவும், சங்கடமான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.

    இதனைக் கண்ட கோலு யாதவ் உடனடியாக அப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டினார்.

    அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அந்தப் பெண்ணைத் தன்னுடன் பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் இளைஞர் தெரிவித்தார்.

    அவரது மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்த அனாதைப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.

    நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

    மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.       

    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான்.
    • மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மனு மீது ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது.

    நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.

    திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டுமெனில் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி மறுத்த நீதிபதிகள் அமைதியாக இருக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

    தமிழக அரசு தரப்பு வாதத்தில்,

    ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

    கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லா ஒருவர் தாக்கல் செய்த மனுவை பொதுநல வழக்கு போல் பாவித்து தனிநீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லாதவரின் மனுவை விசாரித்து அதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட இயலாது.

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான். 73 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

    கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 1912-க்கு பின்னர் இருமுறை மதப்பிரச்சனை எழுந்துள்ளது.

    இந்தாண்டு தனிநீதிபதி மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தபோது நிலவிய சீரற்ற நிலைமையை சீர் செய்யவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தனிநபர் தீபமேற்ற முடியாது. சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் அல்ல.

    மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்பது அழுத்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.

    உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் ஏற்றுவது வழக்கம். திருப்பரங்குன்றத்தில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற முடியும் என்று அரசு தரப்பில் விவாதம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் மலையில் சர்வே நடத்தியதில் தீபத்தூண் தான் என உறுதி செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானவை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
    • நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.

    ரெட்மி நிறுவனம், ரெட்மி நோட் 15 5ஜி, நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகியவற்றை போலந்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் புதிய நோட் 15 சீரிஸ் உலகளவில் வெளியாகியுள்ளது. இவை பிரகாசமான AMOLED டிஸ்ப்ளே, பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா கொண்டுள்ளன.

    புதிய நோட் 15 5ஜி மாடலில் 6.77-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவை அதிகரித்த பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் சற்றே பெரிய 6.83-இன்ச் CrystalRes பேனல்களுடன் வருகின்றன. மூன்று மாடல்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வருகின்றன.

    இத்துடன் நோட் 15 மாடலில் IP65 ரேட்டிங், நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் IP68 ரேட்டிங் உடன் வருகின்றன. நோட் 15 5ஜி 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர் பயன்படுத்துகிறது. நோட் 15 ப்ரோ உலகளவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா பிராசஸருடன் வருகிறது. நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப் பயன்படுத்துகிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    பேட்டரியை பொருத்தவரை ரெட்மி நோட் 15 மாடலில் 5,520mAh, நோட் 15 ப்ரோ மாடலில் 6,580mAh மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 100W சார்ஜிங் கொண்ட 6,500 mAh யூனிட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் 4x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200MP சென்சார்களை கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா உள்ளது. நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.

    மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் ஜெமினி AI சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, வைபை 6E, ப்ளூடூத், NFC, GPS/GLONASS/Galileo/BeiDou, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி சி கொண்டிருக்கின்றன.

    • இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
    • கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம்.

    தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.

    SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.

    அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.

    கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.  

    • கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.

    இதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி மின்துறை வருவாய், செலவினங்களை ஆணையத்திடம் சமர்பிக்கும். வரவு, செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்பிக்கும்.

    இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்பிக்கும். இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டண உயர்வை நிர்ணயம் செய்யும்.

    பெரும்பாலும் புதுச்சேரி அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று அதற்கான அனுமதியை வழங்கும்.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசே மின் கட்டண உயர்வை ஏற்கும் என அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடி மின்துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இதற்கான கோப்பு ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு ரூ.10 கோடி வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2025-2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

    இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.

    இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்குமா? என இனிமேல்தான் தெரியவரும்.

    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, இவாட் ஆகிய மாகாணங்களில் கடந்த 8-ந்தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சுனாமி அலைகளும் தாக்கின.

    இந்த நிலையில் ஜப்பானின் வடகிழக்கில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தீவான ஹோன்ஷு வின் வடக்கே உள்ள அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் உண்டானது.

    இது ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவானது 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ, அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களில் 3.2 அடி வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    அடுத்தடுத்து ஏற்பட்டு உள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.

    • 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
    • போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கூட்டம்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

    இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை. சமீபத்தில் அமெரிக்க குழுவினர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினர்.

    அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இரு தரப்பினரும் முரண்டு பிடிப்பதால் அமைதி ஒப்பந்தத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

    இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி அடைந்துள்ளனர். இதில் அவர் ரஷியா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

    போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    கூட்டத்தில் அவர்கள் என்ன ஆலோசிக்க போகிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

    இதற்கிடையே வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முதன்மை மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லாத மற்றும் விரும்பிய முடிவுகள் கிடைக்காமல் வெறும் கூட்டங்கள் மட்டும் நடந்துள்ளதில் டிரம்ப் சோர்வடைந்து விட்டார்.

    இரு தரப்பிலும் நடந்து வரும் இந்த போரால் டிரம்ப் பெரிய அளவில் மனமுடைந்து போய் உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் காணப்படும் காலதாமதம் டிரம்ப்பை விரக்தியடைய செய்துவிட்டது.

    அவர் இனியும் இதுதொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றார். 

    • புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
    • தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.

    சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

     

    பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை

    தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.

    இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு - மாவட்டம்

    ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி

    நீலகிரி டீ - நீலகிரி

    விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்

    சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்

    ஈரோடு மஞ்சள் -ஈரோடு

    மதுரை மல்லி - மதுரை

    கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்

    கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்

    வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்

    ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி

    கம்பம் பன்னீர் திராட்சை - தேனி

    சோழவந்தான் வெற்றிலை - மதுரை

    மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி

    மதுரை மரிக்கொழுந்து - மதுரை

    கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்

    பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி

    பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி

    புளியங்குடி எலுமிச்சை - தென்காசி

    சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்

    சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்

    சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்

    ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்

    கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி

    பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்

    மணப்பாறை முறுக்கு - திருச்சி

    ஊட்டி வர்க்கி - நீலகிரி

    உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி

    சேலம் ஜவ்வரிசி - சேலம்

    மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி

    சேலம் சுங்குடி - சேலம்

    காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்

    பவானி ஜமக்காளம் - ஈரோடு

    மதுரை சுங்குடி - மதுரை

    தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி

    ஆரணி பட்டு - திருவண்ணாமலை

    கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்

    சேலம் பட்டு - சேலம்

    தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்

    தோடா பூந்தையல் - நீலகிரி

    பத்தமடைப் பாய் - திருநெல்வேலி

    நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்

    செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை

    தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்

    கண்டாங்கி சேலை - சிவகங்கை

    தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்

    மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு

    அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்

    திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி

    கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்

    கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி

    நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்

    திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்

    மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி

    மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை

    தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை

    ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை

    நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்

    செடிபுட்டா சேலை - திருநெல்வேலி

    விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை

    தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி

    கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்

    கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி

    உறையூர் பருத்தி சேலை - திருச்சி

    கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு

    நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்

    பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்

    அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி

    • விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் விஜய்க்கு இல்லை.

    மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. இதனாலேயே விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    விஜய்யை கட்சி தொடங்க சொன்னதே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தான். அப்படி இருக்கும் போது புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார்.

    • பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    வட இந்தியாவில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் அதிக பனிப்பொழிவை எதிர்கொள்ளும் மாதங்கள் ஆகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.

    காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அங்குள்ள பல நீர் நிலைகள் மற்றும் அருவிகள் உறைந்துபோய் பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன.

    டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மூடுபனி போல் உள்ளதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் செல்கின்றன.

    மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துகாணப்படுகிறது. வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் வட மாநிலங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. இப்போதே வாகனங்கள் காலையில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி தான் சாலையில் பயணிக்கின்றன. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    மக்கள் குளிர் காய்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொடர்ந்து உடலை சூடாக வைத்துக்கொள்ளவும், அதிகமாக வெளியில் பயணிப்பதை தவிர்க்கவும், வாகனங்களில் மெதுவாக செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வரும் நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×