என் மலர்
இந்தியா

VIDEO: சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சொன்னதால் ஆத்திரம்.. பெட்ரோல் பங்க்-இல் தீ வைத்த இளைஞர்
- பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்க்-குக்கு நபர் ஒருவர் தீ வைக்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிகழ்ந்துள்ளது.
ராய்ப்பூரின் உர்லா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று, தர்மேந்திரா மற்றும் இம்ரான் என்ற இரு இளைஞர்கள் தங்களது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.
இம்ரான் பைக்கில் அமர்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தர்மேந்திரா திடீரென சிகரெட் பற்ற வைக்க முயன்றுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைபிடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா, ஊழியர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போதே, தனது கையில் இருந்த தீப்பெட்டியால் பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
பெட்ரோல் வெளியே வந்து கொண்டிருந்ததால், நொடிப் பொழுதில் தீயானது, பைக் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் வரை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்ததால் மிகப்பெரிய வெடி விபத்து தவிர்க்கப்பட்டது.
பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், தர்மேந்திரா மற்றும் இம்ரானை உர்லா போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.






