என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
- தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. கருத்து.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மற்றும் அவையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தனது ஆதரவு எம்.எல்.ஏ. பேசியது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்," என்றார்.
- 2010இல் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார்.
- அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
2018 இல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பெங்களூரு தேர்தல் பிரசாரத்தில் அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
ஒரு கொலை வழக்கு குற்றவாளி பாஜக தேசிய தலைவராக இருப்பதாக ராகுல் காந்தி சாடியிருந்தார்.
இந்த கருத்துக்களுக்காக ராகுல் மீது உ.பி.யின் சூல்தான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் இன்று நேரில் ஆஜரான ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். ராகுல் தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த ஜூலை 2024 இல் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனது முதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் நேரில் பதிவு செய்திருந்தார். வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த டிசம்பரில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தபோது ராகுல் ஆஜராக தவறிய நிலையில் ஜனவரியில் மீண்டும் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டின் படி தற்போது ஆஜராகி உள்ளார்.
2010 இல் சோரபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
- மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
* 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
* தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி உறுதி.
* மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மகாராஷ்டிரத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை.
- தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தவில்லை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.
சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மகாராஷ்டிரத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை. அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது. ஆனால், இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார்.
அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 31.03.2022ஆம் நாள் ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1423 நாள்களாகியும் இன்று வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தவில்லை.
இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் சமூகநீதிக்கு துரோகத்தை மட்டும் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூகநீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
- வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாடு அமைச்சரவையில் இருந்து கே.என். நேரு நீக்கப்பட வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது.
ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது.
நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் மலிந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.
"மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம் கதாநாயகன், இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. சுந்தர் சி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய இந்தப் படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக "மீசைய முறுக்கு 2" படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்து இருந்தார்.

மீசைய முறுக்கு படத்தை போன்றே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்குகிறார்.
இந்த நிலையில், மீசைய முறுக்கு 2 படத்தின் ரிவீல் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி தமிழா இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், மீசைய முறுக்கு 2 படத்தின் ரிவீல் டீசர் இன்று வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 2016ல் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை.
- அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து விசாரணை நடக்கும் நிலையில் கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காக சதி நடக்கிறது.
2016ல் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ப.சிதம்பரத்தை கைது செய்து 100 நாள் சிறையில் வைத்தார்கள், அந்த அமலாக்கத்துறையின் வழக்கு என்னவானது?
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
- விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஒரு மாத காமலமாக மாவட்டந்தோறும் மகளிரணி, இளைஞரணி, பாக முகவர்கள் மாநாடு என நடத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை (21-ந் தேதி) தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிற தேர்தலில் பாக முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நாளை மேடையேற உள்ளனர். செல்வப்பெருந்தகை, திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
- ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு.
- அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.
கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ரூ.888 கோடி ஊழலில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது.
அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ரூ.1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது. இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ரூ.365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.
தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்?
திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?
உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்பதுரை கடந்த மாதம் 7-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இருப்பினும், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் தீவிரமானவை என்பதால், அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
- இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
- உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவு.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது.
இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒரு வழக்கில், "பா.ம.க.. தலைவராக நான்தான் உள்ளேன். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
அதன்படி, தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது.
அதனால், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மற்றொரு மனுவில்,"பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும். நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






