search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது
    • சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை பாஸ்கரன் ஓட்டிச் சென்றார். இதில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் சற்று வேகமாக திரும்பியபோது, கண்டக்டரின் இருக்கை கழன்று முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து கண்டக்டர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த பஸ்சினை பராமரிக்கும் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர், பொறியாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இன்று போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சாலையை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது. இதில் பஸ்ஸில் சக்கரம் இறங்கும்போது பஸ் சரிகிறது. இந்த சாலையை சீர் செய்வது தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
    • படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

    இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வேறு வழக்கில் சிறையில் உள்ளார். மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 28 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

    இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. இந்த பஸ்சானது, பழைய பஸ். அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

    இந்த ஆட்சியில் புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது. தற்போது 350 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயங்கி வருகின்றது. மேலும் படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது. மேலும் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் சரியாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

    இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
    • இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குடகனாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருளினார்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    • ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நடவடிக்கை.
    • யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று குறிப்பிடவில்லை.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில், மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தர் ஃபைட்டர் ஆகியவற்றின் கூட்டுக் குழு, பர்சூர் காவல் நிலைய எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லையை ஒட்டிய ஹந்தவாடா மற்றும் ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ரோந்து பணியின் போது, ஜோக்ராஜ் மற்றும் பர்சுராம் அலாமி ஆகிய இரண்டு டிஆர்ஜி கான்ஸ்டபிள்கள் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இதில், ஜோக்ராஜ்கிற்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அலாமிமை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    • குளோரின் கலனில் இருந்து திடீரென வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான குளோரின் கலனில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து குளோரின் கசிவால் 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர். 

    இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.

    • வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாராளுமன்ற தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.
    • டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரெயில்கள் மற்றும் பறக்கும் ரெயில்களில் பயணம் செய்ய காலை, மாலை நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக செயலி மூலம் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    வீடுகளில் இருந்தவாறே யூ.டி.எஸ். செயலியில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.

    டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரெயில் நிலையங்களுக்கு அருகாமையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று முந்தைய விதிமுறை இருந்தது.


    இந்த புதிய செயலியை ஊக்குவிக்கவும், கவுண்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும் இது இப்போது தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பயணிகள் நலச்சங்க ஆர்வலர் சடகோபன் கூறுகையில், பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பே டிக்கெட் எடுத்து கொள்ள இதன் மூலம் முடியும். இதனால் விரைவாக பயணத்தை தொடர முடியும் என்றார்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரின் எண்ணத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    2 மணிநேரத்திற்கு முன்பு பயணம் செய்வது உறுதியாக இருந்தால் வீடுகளில் இருந்தோ அல்லது நிலையத்திற்கு வெளியில் இருந்தோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றார்.

    • அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம்.
    • பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் மணல் குவாரிகளின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த தொழில் அதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அப்போது தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட கலெக்டர்கள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராகி மணல் குவாரிகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரிகள் மூலமாக கிடைத்த தொகையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லையே? சில தகவல்களைத் தானே கலெக்டர்களிடம் அமலாக்கத்துறையினர் கேட்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    அந்த மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால் கரூர், திருச்சி, அரியலூர், வேலூர் மாவட்டங்களுக்கும், அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த புகாரும் கிடையாது. வழக்கும் கிடையாது.

    பின்னர் எந்த அடிப்படையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக முடியும்? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக பெற்ற தொகையை வேறு ஒரு மாவட்டத்தில் உள்ள குவாரியில் முதலீடு செய்திருந்தால் என்ன செய்வது? அதை கண்டறிய வேண்டும் என்பதே அமலாக்கத்துறை விசாரணையின் நோக்கம் என்றனர்.

    குற்றம் எங்கு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசும், கூடுதல் தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றிருப்பது விசித்திரமானது மட்டுமின்றி அசாதாரணமானது. இது முற்றிலும் தவறானது என நாங்கள் கருதுகிறோம்.

    எனவே அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்கண்ட 5 மாவட்ட கலெக்டர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    அப்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதன்படி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேர்தலுக்கு பிறகு 5 மாவட்ட கலெக்டர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏப்ரல் 25-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், கரூர் கலெக்டர் தங்கவேல், அரியலூர் கலெக்டர் ஆனி மேரி சொர்னா, தஞ்சை கலெக்டர் தீபக் ஜோக்கப், வேலூர் கலெக்டர் சுப்பு லட்சுமி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

    5 மாவட்ட கலெக்டர்களும் குவாரி அனுமதி ஆவணங்களுடன் உயர் அதிகாரி முன்பு ஆஜரான நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி அருகில் உள்ள கிளை மண்டல அலுவலகத்தில் இருப்பதால் அங்கு செல்லுமாறு விசாரணை இடத்தை திடீரென மாற்றினார்கள்.

    அதன்படி 5 மாவட்ட கலெக்டர்களும் ஒரே காரில் ஏறி பக்கத்தில் இருந்த அமலாக்கத்துறை கிளை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

    மணல் குவாரி டெண்டர் நடைமுறை விதிகளின்படி பின்பற்றப்பட்டதா? ஒவ்வொரு நாளும் விற்கப்படும் மணல் அளவு எவ்வளவு? அதற்கு முறையான அனுமதி கொடுக்கப்பட்டதா? குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டதா?

    எவ்வளவு பேருக்கு மணல் விற்கப்பட்டுள்ளது? அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மணல் எடுக்கப்பட்டு விற்கப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கலெக்டர்களிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு ஒவ்வொரு கலெக்டர்களும் சொன்ன பதில்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டது.

    • குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வழக்கமாக வெப்ப நிலை அதிகரிக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதத்தில் படிப்படியாக அதிகரித்த வெப்ப நிலை ஒரு சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை எகிறியது. வட தமிழக உள் மாவட்டங்களில்தான் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

    மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளிலும் புழுக்கம் இருந்து வருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் வெளியே மக்கள் செல்லவே பயப்படுகிறார்கள்.

    குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் வேளையில் மக்களின் நடமாட்டம் குறைந்து உள்ளது.

    ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. இன்றும் 110 டிகிரி வரை வெப்பம் தாக்கியது.

    சுட்டெரிக்கும் கோடை வெயில் பெரும்பாலான மாவட்டங்களில் நீடித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வெப்ப அலை தாக்கம் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு நாட்களும் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்கள் தவிர ஏனைய பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். வானிலையை பொறுத்தவரை 5 நாட்களுக்கு மட்டும் முன் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படும். அந்த வகையில் வருகிற நாட்கள் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும், அதாவது 110 டிகிரி வரை வெயிலின் உக்கிரம் இருக்கும்.

    காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதம் ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதம் ஆகவும் இருக்கக் கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    இயல்பை விட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி, வால்பாறை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர்.
    • 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) 89 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

    3-ம் கட்டத் தேர்தல் 94 தொகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. மே மாதம் 7-ந் தேதி 3-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    4-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18-ந்தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது. மே மாதம் 13-ந் தேதி 96 தொகுதிகளில் 4-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    5-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர். 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    மே 20-ந்தேதி 5-ம் கட்டத் தேர்தலுக்கான 49 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அதே போல மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 7, ஒடிசாவில்-5, ஜார்க்கண்டில்-3, லடாக் தொகுதி மற்றும் காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகியவற்றுக்கும் 5-ம் கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    • 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
    • 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×