search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
    • 3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

    மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார்.
    • மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தை கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன், மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பஜனை கோவில் வீதி, தாசம்பாளையம் கோவில் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஓடந்துரை ஊராட்சிக்குட்பட்ட கல்லார் பழங்குடியின கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

    அங்கிருந்த மக்கள், இதற்கு முன்பு இருந்த எம்.பி.க்கள் யாரும் எங்களுடைய கோரிக்கை எதனையும் நிறைவேற்றவில்லை என்றும், இந்த முறை கல்லார் கிராமத்தின் எல்லா வாக்குகளும் பா.ஜ.க.விற்கு தான் என்றும் கூறினார்கள்.

    அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது, இதற்கு முன் இருந்தவர்கள் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனால், நான் பொறுப்பேற்றவுடன் இந்த கிராமத்தை தத்தெடுத்து, இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்றார்.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார். அப்போது மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தை கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 20-ந்தேதி நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.

    இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    டெல்லி சிறப்பு கோர்ட்டில் கடந்த 2-ந்தேதி ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில் 5 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 5 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.

    மேலும் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையும் ஏப்ரல் 20-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
    • வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    அதைத் தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. சில வாரங்களுக்கும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

    அதில் ரஜினிகாந்தின் கை, தங்க கைக்கடிகாரங்களால் வடிவமைக்கப்பட்ட விலங்கில் மாட்டி இருக்கும். அவருக்கும் பின்னால் ஒரு பெரிய கடிகார வடிவமைக்கிபட்டிருக்கும்.

    அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ  கதைக்களத்தில் ஒரு அங்கமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு 'கழுகு' என்று டைட்டில் பெயர் சூட்டப்பட்டு இருக்க்கிறது என தகவல் வெளியாகியது.

     

    இந்நிலையில் அடுத்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

     

    படத்தின் ப்ரொமொ வீடியோ படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரத்தில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது.
    • கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம் பகுதியில் 1972ம் ஆண்டு மின்சார கட்டண உயர்வு போராட்டத்தால் உயிர் நீத்த விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அய்யம்பாளையத்தில் மிக முக்கியமான ஒரு சின்னம் உள்ளது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அதை நினைவு படுத்துவது நமது கடமை. இங்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கான காரணம் நமது உரிமையை நாமே ஜனநாயகத்தில் பெற்றெடுக்க வேண்டும். தியாகி சுப்பையன் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகள் கவிதா ஆகியோர் எங்களுடன் இருக்கின்றனர்.

    தியாகிகளின் நினைவிடத்தில் இருந்து இன்றைய பிரசாரத்தை தொடங்குகிறோம். கடந்த ஆண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் தங்களது தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச்செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது.

    நேற்று நீதிமன்றம் 5 குற்றவாளிகளுக்கும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு நபருக்கு 6 ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்பு ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த குடும்பத்தினரின் குழந்தைகள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் உள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயல்பட்டு இந்த வழக்கை முடித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு விதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும். ரஷியா -உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில் தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.

    நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும். 2029ல் மோடி உலகத்தினுடைய தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில அரசுக்கு வரும் வருமானம் காணாமல் போகும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த2 ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளோம்.

    கியாஸ்க்கு 300 ரூபாய் மானியம் அளித்துள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டில் இருந்து வாக்குப்பதிவு எந்திரத்திற்கு நாம் மாறிவிட்டோம். 2024 ம் ஆண்டு தோல்விக்கு பிறகும் இந்தியா கூட்டணி இது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஓட்டுச்சீட்டு முறை இருந்தபோது கிராம பகுதிகளில் என்னெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கள்ள ஓட்டு தடுக்கப்பட்டுள்ளது. இந்தியா தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உள்ளது. தேர்தல் நடத்தும் முறையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது. எனவே அமெரிக்காவைப் பார்த்து இந்தியா காப்பி அடிக்க வேண்டாம். இந்தியாவைப் பார்த்துதான் அமெரிக்கா காப்பியடித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
    • சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.

    இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று  அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது கடந்த 1-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானில் இஸ்லாமிய புரட்சி காவல்படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் பலியாகினர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஈரான், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட சரக்கு கப்பலை கடந்த 13-ந்தேதி சிறைபிடித்தது. ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் வைத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையால் கப்பல் சிறை பிடிக்கப்பட்டது.

    அந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக்கோரி ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியிடம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    அதன்பேரில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் தவித்துவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்தினருடன் பேசினார்.

    இந்நிலையில் அதே கப்பலில் சிக்கியுள்ள கேரள மாநில பெண் ஒருவரும் தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூர் வெளுத்தூர் பகுதியை சேர்ந்த பிஜூ ஆபிரகாம் என்பவரின் மகள் ஆன் டெஸ்சா ஜோசப்.

    இவர் அந்த கப்பலில் கடந்த 9 மாதங்களாக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிக்கொண்டார். ஆன் டெஸ்சாவுடன் அவரது குடும்பத்தினர் கடந்த 12-ந்தேதி பேசியுள்ளனர். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர்.

    இந்தநிலையில் ஆன் டெஸ்சா தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். கப்பலை சிறைபிடித்திருந்தவர்கள் அனுமதித்ததன் பேரில் அவர் தனது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

    அவர் கப்பலில் இருக்கும் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், உணவு சரியாக அளிக்கப்படுவதாகவும், ஆகவே பயப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அதன்பிறகே ஆன் டெஸ்சா குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

    ஆன் டெஸ்சா பாதுகாப்பாக இருப்பதாக அவர் பணிபுரிந்த நிறுவன அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய உள்துறை வட்டாரங்கள் ஆன் டெஸ்சா குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றனர்.

    • அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.
    • மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினரும், வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அவரது தாயாரும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரித்தார்.

    தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் காரில் இருந்து இறங்கினார். அதன் பின், பறக்கும்படை அதிகாரிகள் கார் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். வாகன சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
    • பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.

    தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.

    பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.

    பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.

    குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.

    எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.

    பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.

    சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.

    பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.

    இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.

    இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.

    • தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.
    • மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்.

    சென்னை:

    தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டார்.

    அக்கா 1825 (365x5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை சவுந்தரராஜனின் தென் சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.

    * தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்.

    * மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்

    * தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம்

    * பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சனை.

    * பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

    * 6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும்.

    * மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கூறினார்.

    • பந்து வீச்சில் ஆர்சிபி அணியின் 4 பவுலர்கள் அரைசதம் விளாசினர்.
    • அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 68 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

    பெங்களூருவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் பவுலிங் சரியில்லை என்று அவருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும், ரீஸ் டாப்லி 68 ரன்களும், வைஷாக் விஜயகுமார் 64 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும் வாரி வழங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்வதை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே மனமுடைந்து நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மோசமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசியதை கண்ட விராட் கோலி ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே திட்டித் தீர்த்தார். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.

    இதனை கண்ட ரசிகர்கள் பீல்டிங் நின்றால் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த வீரரை இப்படி கண்கலங்கும் வகையில் நிற்க வைத்து வீட்டீர்களே என ஆர்சிபி பவுலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

    ஆர்சிபி ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் விராட் கோலிக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×