என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டன் ரோகித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவிய ரோகித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதற்கு ரோகித் சர்மாவை பாராட்டி பாஜக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "காங்கிரஸ் கட்சி எங்கள் கேப்டனை கேலி செய்ய முயன்றது, ஆனால் அவர் தனது பேட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் வெறுப்பை பரப்பியவர்களை அமைதிப்படுத்தினார்" என்று பாஜக தெரிவித்துள்ளது.
மேலும், அந்த வீடியோவில் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்ட எக்ஸ் பதிவையும் பாஜக இணைத்துள்ளது.
முன்னதாக ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது மேட்ச் பிக்சிங் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமை பெற்று தஞ்சம் அடைத்தார். இதனையடுத்து, கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது அவரின் இன்டர்போல் குற்றப்பின்னணி தரவுகளில் அவர் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் லலித் மோடி குறித்து எச்ச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அதிகாரிகளின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் லலித் மோடி தற்போது மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரை நாடு கடத்த இந்திய அதிகாரிகள் கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
- ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருவனந்தபுரம்:
கர்நாடகா மாநிலம் பைவளிகே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது42). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்திருக்கிறார்.
பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் மாணவியின் வீட்டுக்கு பிரதீப் அடிக்கடி சென்றிருக்கிறார். மேலும் மாணவியிடம் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். சகோதர பாசம் என்ற அடிப்படையில் அவர் பழகியதால், அவர்களின் பழக்கத்தை யாரும் சந்தேகப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 12-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவளது செல்போனை தொடர்பு கொண்டனர். முதலில் அழைப்பு சென்ற நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துவிட்டது.
மாணவி மாயமாகியிருந்த அதே வேளையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான பிரதீப்பையும் காணவில்லை. இந்தநிலையில் மாணவி, தனது உறவினர் ஒருவரின் செல்போனுக்கு ஆட்டோ டிரைவர் நெருக்கமாக இருக்கும் 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பினார்.
இதனால் மாணவி ஆட்டோ டிரைவருடன் சென்றிருப்பதை மாணவியின் குடும்பத்தினர், அறிந்தனர். அவர்கள் வீடு இருக்கக்கூடிய பகுதி கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், மாணவி மாயமானது குறித்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பலே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மற்றும் பிரதீப்பை தேடினர். ஆனால் அவர்கள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் போலீசார் கண்டுபிடிக்காததால், மாணவியின் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவி இருக்கும் இடத்தை கண்டறிய இருவரின் செல்போனை கண்காணித்தபடி இருந்தனர்.
அதில் அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியை காண்பித்தது. இதையடுத்து வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாணவி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கேரள போலீசார் அந்த இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலை செய்துகொண்டதற்கான கடிதம் எதுவும் சிக்கவில்லை.
இருவரின் செல்போன்கள், கத்தி, சாக்லேட் ஆகியவையே கிடந்தன. மேலும் உடல் அழுகிய நிலையிலும் இல்லை. போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து இருவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான 25 நாட்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேச்சுவார்த்தை முடிவதற்குள் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
- உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.
ரஷியாவுடனான போர் நிறுத்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா வருகிறார். சவுதி அரேபியாவில் வைத்து உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே ரஷியாவுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், பேச்சுவார்த்தை முடிவதற்குள் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே பரபர சூழல் உருவானது. இதன் காரணமாக ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி மன்னர் முகமது பின் சல்மானை இன்று (திங்கள் கிழமை) சந்திக்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து, நாளை (செவ்வாய் கிழமை) அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இன்று சவுதி அரேபியா வருகிறார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது, அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகளை இறுதி செய்வது மற்றும் முதற்கட்டமாக போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க மத்திய கிழக்கு செயலாளர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் தரப்பு விருப்பங்கள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமைதியை கொண்டுவரும் விவகாரத்திலும், ஆதரவை தொடர்வதிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
- நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.
- வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளை அழைத்து தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரம், நெல்லை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
மாமல்லபுரம் செல்லும் வழியில் வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் முதலில் கட்சி சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் இருந்தால் எழுதிக் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இருந்தாலும் எழுதி சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை மனுவாக எழுதி கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் கொடுத்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
இதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். கழக ஆட்சியில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இது போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் நீங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். திண்னைப் பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் மூலமும் கழக ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும். உங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். தலைமை என்ன கட்டளையிடுகிறேதா அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
எனவே தேர்தலுக்காக இப்போதே தயாராகி உங்கள் பணிகளை வேகப்படுத்துங்கள். நமது இலக்கு 200 தொகுதிகள். அந்த வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே தீவிரமாக பணியற்றுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் என்று அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டக் கழக துணைச் செயலாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
- சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் கோவிந்தா இண்டர்வியூ செய்தார்.
90களில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. தற்போது 61 வயதாகும் கோவிந்தா பாலிவுட் வட்டாரங்களில் தனது அனுபவங்களைப் பற்றி பிரஸ்தாபித்து வருகிறார்.
அவ்வப்போது தனது கருத்துக்களுக்காக சினிமா பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் இடம் பிடிப்பார். அப்படிதான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறி டிராலுக்கு உள்ளானார்.
ஆனால் கோவிந்தா 90 களில் மார்க்கெட் உள்ள கதாநாயகன் என்பதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில் தனக்கு வந்த ரூ.100 கோடி பட்ஜெட் பட வாய்ப்பை மறுத்ததற்காக கண்ணாடியில் பார்த்து என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கோவிந்தா உச் கொட்டியுள்ளார்.
பீஷ்ம் இன்டர்நேஷனல் என்ற தனது யூடியூப் சேனலில் சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் பேசிய கோவிந்தா, ரூ.100 கோடி படத்தை நிராகரித்ததற்காக வருத்தப்படுகிறேன். எனக்கு வேலை இல்லை என்று அவர்கள்(பத்திரிகைகள்) எழுதுகிறார்கள். நானோ ரூ.100 கோடி படத்தை விட்டுவிட்டேன்.
இதற்காக நான் என்னை கண்ணாடியில் பார்த்து அந்த பிராஜெக்டை மறுத்ததற்காக என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கூறினார். இந்த காலத்தில் கிளிக் ஆகும் பாத்திரம் இந்தப் படத்தில் இருந்தது என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
- இப்போது, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது
பாஜகவின் 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்திற்கு 'ஜெய் சிவாஜி' மற்றும் 'ஜெய் பவானி' என்ற முழக்கம் மூலம் பதிலடி கொடுக்குமாறு தனது கட்சியினரிடம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள முலுண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "யாராவது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னால், அவர்கள் ஜெய் சிவாஜி மற்றும் ஜெய் பவானி என்று கூறாமல் அங்கிருந்து செல்ல அனுமதிக்காதீர்கள். பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதை பாஜக ஆரம்பத்தில் எதிர்த்து. ஆனால் இப்போது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே பேசினார்.
- ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார்.
- ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அவரை, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரன்யா ராவ், எனது தந்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் தங்க கடத்தல் கும்பல் என்னை பயன்படுத்தி விட்டனர். சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களால் சிக்கிக் கொண்டேன். நான் இந்த தங்கம் கடத்தல் வேலையை கமிஷனுக்காக கடந்த 1½ வருடமாக செய்து வருகிறேன் என வாக்குமூலம் அளித்தார். மேலும் ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் மும்பை மற்றும் பெங்களூருவை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ரன்யா ராவ் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால் அவரை மீண்டும் பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ரன்யா ராவ் சம்பந்தப்பட்ட தங்கம் கடத்தல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரிக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ரன்யா ராவ் மற்றும் அவரது சகோதரர் ரஷாப் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் பெயரில் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் எக்கு மற்றும் டாட் பார் உற்பத்தி அலகு திறக்க நிலம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விண்ணப்பம் தாக்கல் செய்த 10 மாதங்களுக்குள் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது.
செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல் அரசாங்க நிலத்தை பெறுவது எளிதல்ல. தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் அரசியல் தலைவர் உதவியுடன் இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த மந்திரி யார்? என்ற விபரம் ரன்யா ராவை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கும் போது முழுவிபரங்களும் தெரியவரும். இந்த நிலையில் நிலம் ஒதுக்கியது தொடர்பாக கர்நாடக அதிகாரி மகேஷ் என்பவர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முந்தைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற 137-வது மாநில அளவிலான ஒற்றை சாளர அனுமதிக்குழு கூட்டத்தின் போது ஜெரோடா இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியை மேடைக்கு அழைக்காமல் விட்ட சம்பவம் புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், போட்டி இயக்குநராகன சுமைர் அகமது போட்டியின் போது மைதானத்தில் தான் இருந்துள்ளார்.
எனினும், தொடரின் நிறைவு விழாவிற்கு அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரின் பாதி போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபாயிலும் நடைபெற்றன. இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி நடத்தியது. பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி. நிகழ்வு ஒன்றை நடத்தியது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, "ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி துபாய் செல்லவில்லை. எனினும், அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாகிஸ்தான் சார்பில் துபாய் வந்திருந்தார்," என்று கூறப்படுகிறது.
தவறான புரிதல் அல்லது வேறு ஏதோ காரணங்களால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி மேடைக்கு அழைக்கப்படவில்லை. ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகியோர் வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை வழங்கினர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தகவல் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரை நடத்திய நாடு (பாகிஸ்தான்) என்ற வகையில், அதன் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூட அழைக்கப்படாத சம்பவம் குறித்து ஐ.சி.சி.-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,320-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.
கடந்த நான்கு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
08-03-2025- ஒரு கிராம் ரூ.108
07-03-2025- ஒரு கிராம் ரூ.108
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
- தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
- அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.
இங்கு ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க சசிகலா வருகை தந்தார். முன்னதாக அவர் சேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுடன் ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்தார்.
பின்னர், சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடக்கும் 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஏதும் முழுமையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
இதனை நான் அடிக்கடி கூறிய பிறகு, தற்போது கிராம சுகாதார நிலையங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 டாக்டர்களை அரசு நியமனம் செய்துள்ளது. ஆனால், அவர்களின் கீழ் பணிபுரியும் செவிலியர்களை இன்னும் நியமனம் செய்யவில்லை.
அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஏழைகளுக்கு பயன்படுகிற எந்த வசதியையும் தி.மு.க. அரசு சரிவர செய்யவில்லை, 5 ஆண்டுகளுக்கு நமக்கு லைசன்சு கொடுத்து விட்டனர், நம்மை யாரும் எதுவும் கேட்ட முடியாது என தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
நமது பணிகளை, செயல்திட்டங்களை திறம்பட செய்துவிட்டு, மத்திய அரசிடம் நிதி கேட்டல் நியாயம். ஆனால், அதற்கு மாறாக குழாய் அடி சண்டை போல மத்திய, மாநில அரசுகள் மோதிக்கொள்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
- ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
திருவனந்தபுரம்:
'யூ-டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக இருக்கும். அவற்றை பின்பற்றி நடந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
அதே நேரத்தில் சில ஆதாரமற்ற வீடியோக்களை பார்ப்பவர்கள், அதனை பின்பற்றி நடக்கும் போது பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள். உடல் ஆரோக்கியம், நோய் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் செய்வது சில நேரங்களில் நமது உயிருக்கே ஆபத்தான விஷயமாக மாறிவிடுகிறது.
அப்படித்தான் கேரளாவில் ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக 'யூ-டியூப்' வீடியோவை பார்த்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்த கல்லூரி மாணவி ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்து பரம்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களது மகன் யதுவந்த், மகள் ஸ்ரீநந்தா (வயது18). மட்டனூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படித்து வந்த ஸ்ரீநந்தா, தனது உடல் எடை அதிகமாக இருப்பதாக எண்ணினார்.
இதனால் தனது உடல் எடையை குறைக்க திட்டமிட்டார். இதற்காக அவர் உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்பில் பார்த்துள்ளார். அந்த வீடியோக்களில் வருவது போன்று உணவை குறைத்து சாப்பிட்டபடி இருந்திருக்கிறார்.
அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் தலச்சேரி கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆகவே அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக உணவு சாப்பிடுவதை குறைத்ததன் காரணமாக ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீநந்தா பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மகளை இழந்த பெற்றோர் கதறி துடித்தனர்.
மாணவி இறந்தது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையின் டாகடர் நாகேஷ்பிரபு கூறியிருப்பதாவது:-
உணவுக்கோளாறு காரணமாக வரக்கூடிய அனோரெக்சியா நெர்வோ சாவால் மாணவி பாதிக்கப்பட்டிருந்தார். உடல் எடையை அதிகமாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பசியுடனே இருந்திருக்கிறார். தண்ணீர் உணவையே அதிகமாக சாப்பிட்டுள்ளார்.
இந்த உணவு முறையை 6 மாதங்களாக பின்பற்றியுள்ளார். மாணவி ஸ்ரீநந்தா விஷயத்தில் அவரது உடில் சோடியம் மற்றும் சர்க்கரை அளவுகள் குறைந்தது. அதனை சரிசெய்த பிறகும் அவற்றின் அளவு குறைந்த படியே இருந்தது.
அனோரெக்சியா நெர்வோசா மேற்கத்திய நாடுகளில் பொதுவானது. ஆனால் கேரளாவில் மிகவும் அரிதானது. அனோரெக்சியா நெர்வோசா பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் காலப்போக்கில் தங்களின் பசி உணர்வை இழக்கிறார்கள். இது அனைத்து வயது மற்றும் உடல்வகையினரையும் பாதிக்கும்.
சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடைதல் சாத்தியமாகும். இருப்பினும் இத்தகைய கோளாறுகள் ஒரே நாள் இரவில் குணமாகாது. ஒருவர் பாதிக்கப்பட்ட காலத்தின் தீவிரம் மற்றும் நீளத்தை பொறுத்து குணமடைய நீண்ட காலம் ஆகலாம்.
அனோரெக்சியா நெர்வோசா என்பது முற்றிலும் ஒரு உணவு கோளாறும் இல்லை. இது ஒரு உளவியல் நிலையாகும். எனவே மாணவி ஸ்ரீநந்தா நீண்ட காலத்துக்கு முன்பே மனநல சிகிச்சை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.






