என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 Assembly Elections"

    • நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.
    • கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் போட்டியிட 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் பட்டியலில் அடங்கும். பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.  

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.  ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
    • இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-

    "இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர் தொகுதி. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை வளர்த்து எடுத்துள்ளோம்.

    ஏதோ தேர்தல் வரும் போது மட்டும் ஒன்று, இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கவில்லை. கடந்த 5 வருடமாக பார்க்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் வந்து உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம் போன்று கபாலீசுவரர் கல்லூரியை உருவாக்கி உள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

    கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் உருவாக்கி உள்ளோம். கல்வி எனும் கடவுள்தான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகிற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது.

    இந்த நல்லாட்சி தொடர, நம்ம கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
    • இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிகழ்வில் பேசிய அவர், 

    "சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் 49 தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

    தேர்தல் பணி என வந்தால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே ஆற்றல், அதே கவனத்தோடு இந்தமுறையும் உழைக்கவேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்துகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் 350 வாக்குகளை டார்கெட் செய்திருக்கிறோம். இதை அடைந்தாலே 2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் பெறலாம். 2021-ஐவிட தற்போது நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலேயே அது தெரிந்தது.

    நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக வெல்லும். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் . 

    அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க எல்லோரையும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையை விளக்கவேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நிதி வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்விக்கேட்காத அதிமுகவையும் மக்கள்முன் தோல் உரிக்கவேண்டும்.

    பாஜகவின் டப்பா என்ஜின் முன்னால், தமிழ்நாடு திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது. இதனை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்லவேண்டும். களப்பணி மட்டும்தான் முழுப்பணி. வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றிப் பெறலாம் என துடிக்கும் விஷவிதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவேக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

    எங்கு யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றவேண்டும். ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடையமுடியாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி உழைக்காது. அதனால்தான் திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது." என தெரிவித்தார். 

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.
    • தேசிய செயற்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் குழு அமைப்பு

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தோழர்கள் டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொது மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் விவரங்களுக்கு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு "பாலன் இல்லம்" எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தியாகராயா நகர், சென்னை - 600 017, அலைபேசி எண்: 98408 54707, மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmail..com. " எனக் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல் பட வேண்டும்.
    • இருவரின் பேச்சிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்தவர்கள்தான்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் எழுந்த நீயா? நானா? போட்டியால் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள். கட்சி எடப்பாடி பழனிசாமி வசமானது.

    இனி நமக்கு அங்கு சரிப்பட்டு வராது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் டி.டி.வி. தினகரன்.

    அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு என்று தனிக் குழுவாக செயல்படத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

    சசிகலாவோ எப்படியாவது அ.தி.மு.க. பக்கம் போக வேண்டும் என்ற முடிவோடு கட்சியை ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று புறப்பட்டார். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சிகளும் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை கை கொடுக்க வில்லை.

    இந்த நிலையில் தான் வரப்போகும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணி வெற்றிக்கு தலைவர்கள் ஒன்றிணையா விட்டாலும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதை அமித்ஷா அனைத்து தலைவர்களிடமும் தனித்தனியாக போனில் உரையாடி விளக்கினார்.

    கோபதாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு தேர்தலில் வெற்றி பெற, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த சமரச யோசனைகள் தலைவர்களிடையேயும் வேலை செய்யத் தொடங்கி இருக்கிறது.

    அ.தி.மு.க.வின் கொடி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அ.தி.மு.க. கொடி போல அ.ம.மு.க. கொடியை வடிவமைத்ததற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அ.தி.மு.க. பொதுச் செலாளர் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார். அதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீலும் ஒப்புதல் தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். தினகரன் மீதான வழக்கை வாபஸ் பெற எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதே போல் டி.டி.வி. தினகரனின் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நேற்று அளித்த பேட் டியில் தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலுப்பட வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல் பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது. கூட்டணியில் எல்லோரையும் அனுசரித்து செல்வோம்.

    2021 வரை பா.ஜனதா கூட்டணியில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி, கட்சியை அழிந்து விடாமல் பாதுகாக்க இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்ட ணியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளின் நிலைப்பாடும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்று கூறி உள்ளார்.

    ஒரே கூட்டணியில் அணி வகுத்து இருக்கும் சூழ்நிலையில் இருவரின் பேச்சிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் அடுத்து என்ன என்று தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர்.
    • நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம்.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கள ஆய்வுக்கு செல்லும் போதும், அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர். ஆலோசனையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். இப்போது இருந்தே தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வேண்டும் என கூறினார்.

    2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தான் வெல்வோம். நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம். அதற்கான பணிகளை நீங்கள் இப்போதே செய்திட வேண்டும்.

    நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளும் அதற்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த திட்டங்கள் பற்றி மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் எடுத்து கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் நிர்வாகிகள் மேற்கொள்ளும் பணிகளை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ஆ.ராசா எம்.பி., அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
    • கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகத் தொடங்கியுள்ளன.

    ஆளும் தி.மு.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய்யும் நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் நிலையில் பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்த பிரசாரம் நடந்து வருகிறது.

    இதுவரை லட்சக்கணக் கான மக்களை திண்ணை பிரசாரம் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

    நாளை (வெள்ளிக்கி ழமை) 7-வது வாரமாக திண்ணை பிரசாரம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சுமார் ஒரு லட்சம் பேரை சந்தித்து பேச அ.தி.மு.க. இளம் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த திண்ணை பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • சட்டசபை தேர்தல் குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனை.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்-சபை எம்.பி.யாக இருக்கும் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் இரட்டைவெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்.

    இதற்காக சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கும் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியை சட்டமன்ற தேர்தலுக்குள் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

    தேர்தலை எதிர்கொள் ளும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் கட்சிப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல், சினிமா என இரண்டிலும் கால் பதித்து வரும் கமல்ஹாசன் சட்ட சபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்தி ருக்கிறார்.

    இதற்கான ஆயத்த பணி களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். அதன்பிறகு பாராளுமன்ற, சட்ட சபை தேர்தலை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க சதவீத அளவுக்கு வாக்குகளை பெற்றாலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நீதி மையம் கட்சியின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்துவிட வேண்டும் என்பதிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தி உள்ளார்.

    இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    • 2026 தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அதிரடி வியூகம்
    • திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டுகாலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலதா ஆகியோரது அயராத பணியால் அ.தி.மு.க. என்ற ஆலமரம் ஆயிரம் காலத்து பயிராக மலர்ந்து உள்ளது.

    ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை இன்றைக்கு வலிமையோடும், பொலிவோடும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். எடப்பாடயார் சாமானிய தொண்டனும் உச்ச பதவி அடையலாம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியை சுமார் நாலரை ஆண்டு காலம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடியார்.

    வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களான அரசு பள்ளிகளில் படித்த மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித உள் இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஒரே ஆண்டில் 13 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைத்தும் சாதனை படைத்தார். நீர் மேலாண்மை பாதுகாக்க குடிமராமத்து உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தந்தவர் தான் எடப்பாடியார்.

    ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரும்பும் திட்டமான தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மகளிருக்கு இருசக்கர வாகன திட்டம், கால்நடை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் .

    ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க மறுத்ததுடன், தி.மு.க. அரசு மக்களாட்சி தத்துவத்தையும் மறந்து மன்னர் ஆட்சியாக தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சியை செய்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், போலீசார் என்று யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் அத்துமீறல்கள், வழிப்பறி கொள்ளைகள், ஆதாய கொலைகள், போதை பொருள் நடமாட்டம் என்று அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.

    எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசா ரம் நடந்து வருகிறது. இது வரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள்.

    வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டுப் பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வார மும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்ச டிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கி வழங்கப்படுகிறது.

    வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்று வார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும்.

    வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
    • 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி, நிா்வாகிகளுடன் கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.

    முதல் நாள் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    11-ந்தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடனும், 12-ந்தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நிர்வாகிகளுடனும், 13-ந்தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் நிர்வாகிகளுடனும், 1-ந்தேதி நாகை, மயிலாடு துறை, கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடனும், 16-ந் தேதி ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினரிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.

    இதையடுத்து நேற்று 7-வது நாளாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பொள்ளாச்சி, நீலகிரி, கோவை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

    அப்போது அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    நீலகிரி தொகுதியின் நிா்வாகிகள், பாராளுமன்றத் தோ்தலில் வலுவான தொகுதி கூட்டணி அமைக்காததால் தான் தோல்வி அடைந்ததாக கூறியுள்ளனா். அதற்கு, வரும் சட்டப்பேரவை தோ்தலில் வலுவான கூட்டணி அமையும்.

    அதேநேரம், கூட்டணியை நம்பியும் நாம் இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அ.தி.மு.க.வினா் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.

    கோவை தொகுதி நிா்வாகிகள் பாராளுமன்றத் தோ்தலில் 3-ம் இடத்துக்கு வந்தது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா். அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

    கடைசி நாளான இன்று காலையில் விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தர்மபுரி தொகுதி கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்றுடன் எடப்பாடி பழனி சாமியின் முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்றது.

    இதுவரை அவர் 23 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். இதர 16 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வருகிற சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுங்கள். அப்போதுதான் வெற்றிபெற முடியும். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    விழுப்புரம் தொகுதியில் கட்சியினர் இன்னும் வேகமாக செயல்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமையின் கவனத்துக்கு நிர்வாகிகள் உடனே தெரியப்படுத்த வேண்டும்.

    தகவல் தொழில் நுட்ப பிரிவினர் இப்போது செயல்படுவதை விட மேலும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கிறது.
    • பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க.வில் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.

    இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் அண்ணா அறிவாலயத்தில் கூடி அடுத்து என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    வர இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.

    இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.

    • பட்டிதொட்டியெங்கும் சென்று அயராது உழைக்க வேண்டும்.
    • 2026 சட்டசபை தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது வியூகம்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதால் இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

    இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் தி.மு.க.வில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்தார்.

    தனது குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் அவருடன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பின்னர் அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, `தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். இந்த பணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடர வேண்டும். கிராமம் கிராம மாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதுதவிர பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள, 2026 சட்ட மன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.

    பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.

    மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்-சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    ×