என் மலர்tooltip icon

    இந்தியா

    • மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது.
    • வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது. அப்போது பதேர்வா - சம்பா சாலையில் உள்ள கன்னி டாப் என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து நடந்த உடனேயே, காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம், காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. உள்ளூர் மக்களும் உதவியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    படுகாயமடைந்த சில வீரர்கள் சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஆறு வீரர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 

    "தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நமது துணிச்சலான வீரர்களின் சிறந்த சேவை மற்றும் உயர்ந்த தியாகத்தை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது.
    • இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூந்துறை ஆரியன்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி சஜிதா(வயது54). இவர்களது மகள் கிரேஷ்மா(30).

    கிரேஷ்மாவுக்கும், பழஞ்சிரா பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டபடி இருந்துள்ளது.

    இதனால் திருமணமான 29 நாட்களிலேயே கணவன்-மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். கிரேஷ்மா தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவரது கணவர் உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டில் வேலைபார்த்ததால், அவர் அங்கு சென்றுவிட்டார்.

    கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரேஷ்மாவின் தந்தை ராஜீவ் இதயக்கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

    அதன்பிறகு அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். மகளை, அவரது கணவருடன் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று சஜிதா விரும்பினார். இந்தநிலையில் உன்னி கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

    அங்கு வந்திருந்த உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிரேஷ்மா மற்றும் அவரது தாயை, உன்னிகிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனைக்கேட்டு கிரேஷ்மாவின் தாய் சஜிதா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

    இதனால் துக்க வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதால் சிறிது நேரத்திற்கு பிறகு சஜிதா விழித்தெழுந்தார். அதன்பிறகு தாய்-மகள் இருவரும் தங்களின் வீட்டுக்கு வந்துவிட்டனர். துக்க வீட்டில் உன்னி கிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியது கிரேஷ்மா மற்றும் அவரது தாய்க்கு மனவேதனையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கிரேஷ்மா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தங்களின் குடும்ப வாட்ஸ்-அப் குழுவில் தகவல் பதிவிட்டனர்.

    மேலும் தங்களின் சாவுக்கு காரணம் உன்னி கிருஷ்ணன் தான் எனவும், அவர் கிரேஷ்மாவை துன்புறுத்தியதன் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர், சஜிதாவின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு தாய்-மகள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பூந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவனந்தபுரம் மருத்துக்வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். கிரேஷ்மாவின் கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக வழக்கு பதிந்து தொடர்ந்து வசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கிரேஷ்மாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர். 

    • அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
    • ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார்.

    பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கொரிய நாட்டு பெண்ணிடம் ஊழியர் அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கடந்த ஜனவரி 19-ஆம் தேதி, தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.

    இமிக்ரேஷன் சோதனைகளை முடித்துவிட்டு அவர் டெர்மினல் நோக்கிச் சென்றபோது ஏர் இந்தியா நிறுவனத்தின் தரைதள ஊழியராக பணிபுரியும் 25 வயது முகமது அபான் என்பவர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

    அந்தப் பெண்ணின் பயணச்சீட்டைப் பரிசோதித்த ஊழியர், அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.

    மீண்டும் ஸ்கிரீனிங் கவுண்டருக்குச் சென்றால் விமானத்தைத் தவறவிட நேரிடும் என்றும், தான் தனியாகச் சோதனை செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அந்தப் பெண் எதிர்த்தபோது அவரைக் கட்டிப்பிடித்து தேங்க் யூ என்று கூறிவிட்டு ஊழியர் அங்கிருந்து நழுவி உள்ளார்.

    அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார்.

    சிசிடிவி காட்சிகளைப் ஆராய்ந்ததில் அந்த ஊழியரின் தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, போலீசார் முகமது அபானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் பங்கேற்கின்றனர்.
    • டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் படம் இடம்பெற்றுள்ளது.

    வரும் 26 ஆம் தேதி நாட்டின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி கடமைப் பாதையில் சிறப்பு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

    சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் பங்கேற்கின்றனர்.

    கொண்டாட்டங்களை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், வழக்கப்படி டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ள எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்று உள்ளது.

    டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் என்ற அந்த நபர் இந்திய துணை கண்டத்தில் அமைந்த அல்-கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி என்றும் டெல்லி போலீஸ் மற்றும் உளவு அமைப்புகளால் தேடப்படும் பயங்கரவாதி என்றும் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே யங்கரவாத தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

    • தமிழ்நாட்டிலும் கரூர் விவகாரத்துக்கு பின்னரே வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது.
    • கரூர் விவகாரத்தை வைத்து மட்டும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க இயலாது.

    புதுடெல்லி:

    பொதுக்கூட்டம், பேரணியின்போது கூட்ட நெரிசலால் உயிரிழப்பை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தும்பலம் கோட் வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தும்பலம் கோட் வெங்கடேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரியதர்ஷினி, 'கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இதுபோன்ற கூட்டத்துக்கு பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.

    தமிழ்நாட்டிலும் கரூர் விவகாரத்துக்கு பின்னரே வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது. இது உயிர் சார்ந்த விஷயம் என்பதால் இதற்கு ஒரு பொது வழிகாட்டு நெறிமுறை வகுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறியீட்டை ஏற்படுத்த வேண்டும்' என்று கோரினார்.

    அப்போது நீதிபதிகள், 'ஒரு உதாரணத்துக்காக, சென்னையில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் டெல்லியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கிறோம் என வைத்துக் கொள்வோம்.

    ஆனால் அங்கு 50 ஆயிரம் மக்கள் வருகை புரிந்திருந்தார்கள் என்றால் அப்போது என்ன செய்வது? எனவே இந்த விவகாரத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

    இதற்கு அங்கு இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில நிர்வாகங்கள் தான் உரிய முடிவை எடுக்க முடியும். கரூர் விவகாரத்தை வைத்து மட்டும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க இயலாது. இது தொடர்பாக உரிய அமைப்பிடம் தான் முறையிட முடியும். ஒரு வேளை அரசியல் கட்சி கூட்டமாக இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அணுகலாமே' என்றனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் மனு கொடுத்திருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் வழிகாட்டு நெறிமுறை வகுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.

    ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்து ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது ஒரு பொதுவான உத்தரவாக நாடு முழுவதும் அமல்படுத்த முடியும். அதற்காக நீதிமன்றத்தின் தலையீடு அவசியம்' என தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பை தடுப்பதற்காக ஒரு பொது வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும் என கோரி மனுதாரர் இந்த கோர்ட்டை நாடி இருக்கிறார். இந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும்.

    அதற்காக பொது இடங்களில் நிகழ்நேர கண்காணிப்பு, இடர் தணிக்கை மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேசிய கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறியீட்டை ஏற்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

    பொது நிகழ்வுகளின் போது பொது இடங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். அந்த வகையில் மனுதாரர் எழுப்பி உள்ள கோரிக்கைகளை வேறொரு மனுவாக தயாரித்து, உரிய அமைப்பிடம் வழங்க உத்தரவிடுகிறோம். அந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைப்பானது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என உத்தரவிட்டனர்.

    • 6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது
    • இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் தான் சமைத்த முட்டை குழம்பை `சுவையாக இல்லை' என்று கூறியதால், கணவனின் நாக்கை கடித்து மனைவி துண்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சண்டை வந்த நிலையில், இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.

    இதனை ஆத்திரமடைந்த இஷா , கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். நாக்கு 2.5 செ.மீ அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். இதனால் விபின் குமரன் பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை அடுத்து இஷாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லடாக்கில் பணியாற்றி வந்த அவர், தற்போது மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
    • டெல்லி மாநகராட்சி ஆணையராக இருந்த அஸ்வினி குமார், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களை வெளியேற்றி, அந்த மைதானத்தில் தனது நாயுடன் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நடைப்பயிற்சி செய்த சம்பவம் சர்ச்சை ஆனது. 2022-ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    இதற்கு தண்டனையாக மத்திய உள்துறை அமைச்சகம் அவரை டெல்லியிலிருந்து லடாக்-கிற்கு இடமாற்றம் செய்தது.

    லடாக்கில் பணியாற்றி வந்த அவர், தற்போது மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு டெல்லி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டது.

    டெல்லி மாநகராட்சி ஆணையராக இருந்த அஸ்வினி குமார், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    காலம் கடந்தால் மக்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்பில் சஞ்சீவ் கிர்வாருக்கு மீண்டும் டெல்லியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.    

    • ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது

    முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இன்று (ஜனவரி 22) சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.

    கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மரபுப்படி அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது.

    தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த ஆளுநர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.

    வழக்கமாக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் ஆளுநர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம்.

    ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.

    முன்னதாக நேற்று முன் தின் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள், தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4 வது ஆண்டாக வெளியேறினார்.

    அதேபோல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார்.

    இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. 

    • வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    • பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது.

    இந்நிலையில் SIR ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜரான பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருக்கு முன்னதாக விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    விசாரணைக்கு பின் அவர் கூறுகையில், இந்தத் திருத்தப் பணி மிகவும் அவசரமாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கப்படாததால், இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.

    என்னை விசாரணைக்கு அழைத்ததில் எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    மேலும், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தானும் ஆதரிப்பதாகச் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    சந்திர குமார் போஸ் மட்டுமல்லாது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், நடிகர் தேவ், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தொழிலதிபர் ஸ்வபன் சாதன் பாசு மற்றும் எழுத்தாளர் ஜாய் கோஸ்வாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறிது காலம் பாஜகவோடு பயணித்த சந்திர குமார் போஸ், கடந்த 2023 இல் அக்கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய குடியரசு தினவிழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்
    • இந்தியா -ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

    இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றைய தினம் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிராசா மஷேல் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது.
    • கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார்.

    அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது.

    இந்த விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டுள்ளது.

    2025-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு, மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் செயல்பாட்டாளரும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான கிராசா மஷேல்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிராசா மஷேல் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    அனைவருக்கும் நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

    கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார். அதைத்தொடர்ந்து நெல்சன் மண்டேலாவை கிரகா திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
    • பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தனது வளர்ச்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள் தமிழகம் மற்றும் கேரளத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் வளர்ச்சியாக கேரளாவில் பாரதிய ஜனதா முதன் முறையாக எம்.பி. தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்றியது.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபி, தற்போது மத்திய மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் பெற பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில், கட்சியின் முக்கிய தலைவர்கள் கேரளாவை குறிவைத்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கேரள மாநிலம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (23-ந்தேதி) கேரளா வருகிறார். மாநில தலைநகர் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கும் அவர், புதிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்-மங்களூர், திருவனந்தபுரம்- தாம்பரம், திருவனந்தபுரம் -ஐதராபாத் வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்- திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், புதுமை, தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை பகல் அவர் திருவனந்தபுரம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் 'ரோடு ஷோ'வாக விழா நடைபெற புத்திரிக்கண்டம் மைதானத்திற்கு காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    புத்திரிக்கண்டம் திடலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்சியினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் மூலம், கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவரது விமானம் வரும் சங்குமுகம் விமான நிலையம் மற்றும் புத்திரிக்கண்டம் கிழக்கு கோட்டை பகுதிகள் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன்கள், டிரோன் கேமராக்கள், பறக்கும் பட்டங்கள், பலூன்கள் மற்றும் லேசர் கற்றை விளக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    ×