என் மலர்
தேர்தல் செய்திகள்
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு முத்தியால்பேட்டையில் இன்று பிரசாரம் நடந்தது.
முத்தியால்பேட்டை காந்தி வீதி சாலைதெரு மார்க்கெட் சந்திப்பில் விநாயகர் கோவிலில் இருந்து திறந்த ஜீப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.
பிரச்சாரத்தின்போது முதல்அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
2011 முதல் 2016 வரை என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் புதுவைக்கு எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதை நன்கு உணர்ந்து என்.ஆர். காங்கிரசை வீட்டிற்கு அனுப்பினர். ஆனால் 3 ஆண்டு மோடியின் தொல்லை. கிரண்பேடியின் இடர்பாடுகள். எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதையும் மீறி நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சியால்தான் புதுவைக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ. ஆயிரத்து 580 கோடி நிதி பெற்றுள்ளோம். குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடி, கல்வி, மருத்துவம் என மத்திய அரசிடம் போராடி பல திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். மிக்சி, கிரைண்டர் தரமில் லாததை கொடுத்தனர். இதற்கு ரூ.100 கோடி செலவு செய்தனர். இதில் ஊழல் நடந்துள்ளது. மக்களுக்கு பயனில்லாத ஆட்சி நடத்தினர்.
மோடி வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் விரோதி. அவரோடு சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
மதச்சார்பற்ற அணி ஆட்சிக்கு வந்தால்தான் ராகுல் பிரதமராக முடியும். வைத்திலிங்கம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார். கூடுதலாக நிதி பெற்றுத்தருவார். முத்தியால் பேட்டை மார்க்கெட்டை காங்கிரஸ்தான் கட்டி முடித்தது. மருத்துவ கல்லூரி, மகளிர், குழந்தைகள் மருத்துவ மனை என பல திட்டங்களை நாங்கள்தான் கட்டி முடித் தோம். யார் ஆட்சிக்கு வந்தால் புதுவை மாநில வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கை சின்னத்திற்கு வாக்களித்து வைத்திலிங்கத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #narayanasamy

திண்டுக்கல்:
தேனியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் பிடித்தவர். எனவே அவருக்காக பிரசாரம் செய்ய வருகிற 12-ந் தேதி ராகுல்காந்தி தேனி வருகிறார்.
அன்னஞ்சி விலக்கு பைபாஸ் சாலை பகுதியில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி எங்களுக்கு விளக்க தேவையில்லை. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி 300 பயங்கரவாதிகளை கொன்றதாக கூறுகின்றனர். ஆனால் எந்த ஊடகத்திலும் அதற்கான ஆதாரம் வெளியிடவில்லை. ஜி.எஸ்.டி. வரி என்பது நல்ல திட்டமே ஆனால் கட்டமைப்பு சரியாக செய்யப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சி வந்ததும் ஜி.எஸ்.டி. வரி ஒழுங்குபடுத்தப்படும்.
மக்களுக்கு பாதிப்பான திட்டத்தை நாங்களே அறிமுகப் படுத்தியிருந்தாலும் அதனை செயல்படுத்தமாட்டோம். ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கிலிட நாங்கள் போராட வில்லை. கோர்ட்டு அவர்கள் குற்றவாளி என்பதால் விடுதலை செய்யவில்லை. 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஒன்றும் பிரசசினை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #congress

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கல்பட்டா பகுதியை சேர்ந்தவர் எல்சி (வயது 68). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக காங்கிரஸ் அபிமானிகளாக இருந்து வருகிறார்கள். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த எல்சிக்கு பிரியா என்ற மகளும், தேவிகா என்ற பேத்தியும் உள்ளனர்.
தேர்தல் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும்போது அங்கு எல்சியும் தவறாமல் இருப்பார். காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் எல்சிக்கு எப்படியாவது ராகுல்காந்தியை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துவந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தி வயநாட்டில் வேட்மனு தாக்கல் செய்ய வரும் தகவல் எல்சிக்கு கிடைத்ததும் அவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த முறை எப்படியாவது ராகுலை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார். ஆனால் ஏழை தொண்டரான தன்னால் அது எளிதில் முடியாது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்.
இதனால் தனது விருப்பத்தை அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அனந்தகுமார் என்பவரிடம் தெரிவித்தார்.

இதுபற்றி எல்சியிடம் காங்கிரசார் தெரிவித்த போது அதை நம்பமுடியாமல் அவர் திகைத்துப்போனார். ராகுல் வயநாடு வரும் நாளை எதிர்நோக்கி எல்சி காத்திருந்தார். இந்த நிலையில் எல்சிக்கு காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ராகுல் வயநாட்டிற்கு வரும் தகவல் எல்சிக்கு கிடைத்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் தன்னால் எப்படி ராகுலை சந்திக்க முடியும் என்று நினைத்து வேதனை அடைந்தார். ஆனாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் எல்சியை ஒரு ஆட்டோவில் ஏற்றி கல்பட்டாவுக்கு அழைத்துச் சென்று ராகுலை சந்திக்க வைத்தனர். அவருடன் மகள் பிரியா, பேத்தி தேவிகாவும் சென்றனர்.
எல்சியை அன்புடன் அரவணைத்து அவருடன் ராகுல் சிரித்து பேசினார். அவரது குடும்பம் பற்றியும் விசாரித்தார். ராகுலுடன் பிரியங்காவும் இருந்ததால் எல்சியின் மகிழ்ச்சி இரட்டிப் பானது.
ராகுலை சந்தித்தது பற்றி எல்சி கூறும்போது ஏழை தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய ராகுலை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் ராகுலை பார்க்கமுடியாதோ? என்று நினைத்தேன். கடவுள் அருளால்தான் இது நிறைவேறி உள்ளது. நடந்தது எல்லாம் கனவுபோல உள்ளது என்றார். #LokSabhaElections2019 #RahulGandhi
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை ஆதரித்து மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இந்த கூட்டணியைப் பார்த்து தி.மு.க. தலைவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் என்னையும், தமிழக முதல்வரையும் கடுமையாக தரம் தாழ்த்தி பேசுகிறார். தி.மு.க.வுக்கு இது கடைசி தேர்தல். இனி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற முடியாது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதேபோலத்தான் இந்த தேர்தலிலும் தி.மு.க. தோல்வி அடையும். பா.ம.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் என்னை திட்டுகிறார்.
அ.தி.மு.க. மெகா கூட்டணிக்கு 23 கட்சிகளும், 450 சமுதாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 40-ம் நமதே, 18 இடைதேர்தலிலும் வெற்றி நமதே.
தி.மு.க.வின் கனவு ஒரு நாளும் பலிக்காது. மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு நிறைவேறாது. சினிமாவில் வேண்டுமானால் முதல்-அமைச்சர் நாற்காலியில் உட்காருவது போன்று நடித்துக் கொள்ளலாம். மெகா கூட்டணி அமைத்துள்ளதால் தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. உலக அளவில் 4 விருதுகள் வாங்கி உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார். இதற்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். மேட்டூர் அணை நிரம்பும் நேரங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுவோம்.
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.
மாம்பழத்துக்கு சிறப்பு உள்ளது. இரட்டை இலையுடன் கூடிய மாம்பழம் உள்ளதை வயதானவர்கள் பார்த்தால் ஓட்டுப்போடுவார்கள். விவசாயிகள் தான் கடவுள் என பாராளுமன்றத்தில் பேசியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். எதிர்அணியின் வேட்பாளரை டெபாசிட் இழக்கும் அளவுக்கு மகத்தான வெற்றியை அன்புமணிக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss
ஈரோடு:
ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் திமுக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை கண்டு மோடி இப்போது பயந்து போய் இருக்கிறார். காங்கிரஸ் அறிக்கை பொய்யான அறிக்கை என்கிறார் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்போம் என்று சொன்னீர்களே... செய்தீர்களா? விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று சொன்னீர்கள் செய்தீர்களா? அட்லீஸ்ட் 15 ரூபாய் ஆவது போட்டீர்களா?
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னீர்கள் ஆனால் நல்ல பணத்தை அல்லவா ஒழித்தீர்கள் இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியவர் தானே இந்த மோடி? இதை நினைக்கும்போது எனக்கு ஒரு சினிமா பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது. "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'' அதை மாற்றி "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே''என்று பாடலாம்.
நம்மைப் போல் இப்போது எடப்பாடியும் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது கைகட்டி குனிந்து நின்ற அவர் இப்போது எம்ஜிஆரை போல் கழுத்தில் துண்டு எல்லாம் போட்டு பேசுகிறார். எடப்பாடியை பார்த்து நான் கேட்கிறேன் "தமிழக மக்களுக்காக என்ன செய்தீர்கள்? நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தது உண்டா? இதனால் என்ன ஆச்சு? மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், இப்படி 35 ஆயிரம் போராட்டம் நடந்ததாக நீங்களே சொல்கிறீர்கள்.
இதையெல்லாம் சமாளித்து உள்ளோம் என்கிறீர்கள். இப்படி சொல்ல வெட்கமா இல்லையா? இது பெருமைக்குரிய விசயமா? ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றீர்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எடப்பாடி ஆறுதல் சொல்லி இருப்பாரா? நேரில் போய் பார்த்தாரா? கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினாரா?
மோடி கையில் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் எடப்பாடி. மோடிக்கு இந்தியாவைப் பற்றி கவலை இல்லை அவர் வெளிநாடு வாழ் பிரதமராக அல்லவா இருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கடந்த சில நாட்களாக மோடி நம் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். அதற்கு மூன்று காரணம்.

ஒரு காரணம் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் என்று நான் சொன்னது. இரண்டாவது காரணம்.. இந்தியா முழுவதும் நடந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் தி.மு.க அணி அமோக வெற்றி பெறும் என்று சொன்னது. மூன்றாவது காரணம்... நான் பேசும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று ரிப்போர்ட் அவருக்கு போனது. இப்படி மூன்று காரணத்துக்காக நம் மீது மோடிக்கு கோபம். அதன் விளைவு தான் நமது முன்னணி தலைவர் துரைமுருகன் வீட்டில் சோதனை. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து சில வீடுகளில் பணம் பறிமுதல் செய்தார்களாம். இவர்களே பணத்தை வைத்து விட்டு இவர்களே எடுத்து இருப்பதாக நான் கருதுகிறேன். நான் எதிர்க்கட்சித் தலைவர். முதல்வருக்கு இணையாக.. அது கூட வேண்டாம்.. ஒரு அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிறேன். நான் புகார் கொடுக்கிறேன். மோடி வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. எடப்பாடி வீட்டிலும் பணம் குவிந்திருக்கிறது. அங்கு சென்று சோதனை நடத்துங்கள் போடுவீர்களா சோதனை? தேர்தல் கமிசன் வாகனங்களை நிறுத்தி சோதனை போட செய்துள்ளது. போடுங்கள் அது தேர்தல் விதிமுறை. அதேபோல் போலீஸ் வேன்களையும், போலீஸ் வாகனங்களையும் சோதனை செய்யுங்கள். ஆளுங்கட்சிக்காக போலீஸ் வாகனத்தில் பணம் கடத்தப்படுகிறது. இதை தேர்தல் துறை சோதனை போடாவிட்டாலும் எங்களின் இளைஞர் படை சோதனை நடத்தும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #pmmodi #dmk
கரூர் பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு திறந்த வேனில் நின்றபடி வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி.யால் சிறு-குறு தொழில்கள் நலிவடைந்து 6 லட்சம் குடும்பங்கள் வேலையிழந்துள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே வறட்சி, இடு பொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது என அவதிப்படும் விவசாயிகளுக்கு இந்த திட்டங்கள் கூடுதல் சுமையாக இருக்கிறது. இவற்றையெல்லாம் பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்லில் மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.
தற்போது மோடியுடன், எடப்பாடி பழனிசாமியும் -பன்னீர்செல்வமும் கூட்டு வைத்துள்ளனர். இந்த தேர்தல்கள் வாயிலாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அகற்றப்படுவது உறுதி. பா.ஜ.க., ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை சோமாலியாவாக மாற்றி விடுவார்கள்.
2014-ல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோடி ஆட்சியை பிடித்தார். அப்போது தமிழகத்தில் மட்டும் பெரும்பான்மையாக ஜெயலலிதாவால் அ.தி.மு.க. 37 இடங்களை பெற்றது. அவர் இருந்தவரை தமிழகத்தில் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழகத்தை வஞ்சித்து விட்டனர். கஜா புயல் பாதிப்பு, 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது போன்றவற்றுக்கு ஆறுதல் சொல்ல தமிழகத்திற்கு மோடி ஏன் வரவில்லை? என பரவலாக மக்கள் கேட்கின்றனர். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் அ.ம.மு.க., தான் துணிச்சலுடன் தனியாக நின்று வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இருட்டில் செல்ல பயப்படுகிறவர்கள் உடன் 4 பேரை அழைத்து செல்வது போல தான் தி.மு.க. கூட்டணி உள்ளது. அந்த கட்சிகளுக்குள்ளேயே கொள்கை முரண்பாடு இருக்கிறது. கேரளாவில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். மத்தியில் தேசிய கட்சிகள் பெரும்பான்மை பெறாது. எனவே தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #TTVDhinakaran #PMModi #Jayalalithaa
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்து தகவல் கொடுத்துள்ளது.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடந்த தீவிரமான வாகன சோதனையில் ரூ.250 கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பற்றிய தகவல்களை சிலர் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியமாக சொல்லி விடுகிறார்கள். அதன்பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.
காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் இருந்து சோதனை நடத்தி ரூ. 11 கோடியை பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் இயக்க நிர்வாகிகள் சென்ற காரில் சோதனை நடத்தி ரூ.2 கோடியை பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பஸ்சில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி ரூ. 3 கோடியே 47 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் தர்மபுரி எம்.பி. தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உறவினர்கள் வீடுகளில் நேற்று நள்ளிரவு பறக்கும் படைமற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த காடுசெட்டிப்பட்டி அருகே உள்ள எக்காண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பொல்லியப்பன். இவர் துணை தாசில்தாராகவும், தாலுகா வினியோக அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது வீட்டுக்கு நேற்று இரவு 9 மணிக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்த ரூ. 25 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தான் ஓய்வு பெற்று அதன் மூலம் கிடைத்த பணமும், தனது மகன்கள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொடுத்த பணமும் இதுவாகும் என்று அவர் கூறினார். அந்த பணத்துக்கு ஆவணங்களை காட்டி வாங்கி செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.
பொல்லியப்பனின் உறவினரான நடராஜன் என்பவர் வீடு கும்முலூரில் உள்ளது. அவரது வீட்டிலும் நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. அவரது வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் குறித்து அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நடராஜன் தனது மகன் சீட்டு நடத்துவதாகவும், அந்த சீட்டு மூலம் வசூலித்த பணம் என்றும் கூறி அந்த சீட்டு மற்றும் நோட்டை எடுத்து காண்பித்தார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த ரூ. 2 லட்சத்தை அவரிடமே கொடுத்துவிட்டு சென்று விட்டனர். நடராஜனின் தம்பி மற்றும் உறவினர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல அயிசாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள செல்லப்பன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் ரூ. 70 ஆயிரம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அவர் பாங்கி பாஸ் புத்தகத்தை காட்டி பாங்கியில் இருந்து ரூ. 70 ஆயிரம் எடுத்து வந்ததற்கான ஆதாரத்தை காட்டினார். இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டு சென்று விட்டனர்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு ஆதரவாக புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா பிரசாரம் செய்து வருகிறார். இவரது பிரசார வாகனத்தை நேற்று 3 இடங்களில் மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. #LokSabhaElections2019
நாகப்பட்டினம்:
நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் திறந்த வேனில் நின்று பேசியதாவது:-
டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதித்த மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடிய மக்களின் தலையில் இடி விழுகிற மாதிரி பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருக்கிறார் மோடி. நாகையில் 20, கடலூரில் 25 என மொத்தம் 45 இடங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு தாரை வார்த்து கொடுத்து இருக்கிறது.
கார்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழக அரசு மாறி விட்டது. கார்பரேட் கம்பெனிகளுக்கு மோடி அரசு ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கி இருக்கிறது. ரூ.8.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் கல்விக்கடனையும், பயிர் கடனையும் மோடி அரசு ரத்து செய்யவில்லை.
மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க கூடிய நெஞ்சுரம் இல்லாத அரசு, நீட் தேர்வை எதிர்க்க முதுகெலும்பில்லாத அரசு தமிழக அரசு. தற்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.
18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று தி.மு.க.வின் ஆட்சி மலரப்போகிறது. கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் சின்னாபின்னமானபோது மோடி நேரில் பார்வையிடவில்லை. டெல்டா மாவட்ட மக்கள் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவாரூர் பழைய பஸ் நிலைய பகுதியில் திருவாருர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட் பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் .நாகை பாராளுமன்ற வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.
அப்போது வைகோ பேசியதாவது:- திமுக சுட்டிக் காட்டிய அனைத்து அம்சங்களையும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது விவசாய கடன் தள்ளுபடி, 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72,000 போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது சாத்தியமற்றது என பலரும் கூறுகின்றனர்.
ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தினால் சாத்தியப் படும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூறியிருக்கிறாரா? 89 பேர் பலியானார்கள். அவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறினாரா? இவை வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி தாய் நாட்டிற்கு வர முடியாதா
இவ்வாறு வைகோ பேசினார். #vaiko #dmk






