என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல்"

    • அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல்.
    • வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை வழங்குவோம்.

    பாட்னா:

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.

    சீதாமர்ஹி பகுதியில் இன்று நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    வாக்காளர் உரிமைக்கான இந்தப் பயணத்தில் நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்தியுள்ளீர்கள். சிறு குழந்தைகள் வருகிறார்கள், அவர்கள் என் காதில் நரேந்திர மோடி வாக்குகளை திருடுகிறார் என்று சொல்கிறார்கள்.

    பீகாரில் தேர்தலை திருட முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்குள்ள மக்கள் புத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள். பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டார்கள் என்பதை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அறிந்து கொள்ள, வாக்காளர் உரிமை யாத்திரையை இங்கு தொடங்கியுள்ளோம்.

    உங்கள் குரலை அடக்க விரும்புவதால் ஏழைகளின் வாக்குகளை திருடுகிறார்கள், இந்த மேடையில் இருந்து நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவர்களால் உங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல். அது நமது நாட்டின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை கொண்டது.

    அரசியலமைப்பு தலித்துகள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. இந்த உரிமையை உங்களிடம் இருந்து பறிக்க விரும்புகிறது.

    பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்குகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழை மக்களின் பெயர்கள் அடங்கும். பணக்காரர்கள் பெயர்கள் அல்ல.

    கர்நாடகாவில், பா.ஜ.க. 'வாக்கு திருட்டு' செய்திருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கு முன்பு பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. பா.ஜ.க.வினர் கவனமாகக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டசபைக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்கியுள்ளோம்.

    வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் 'வாக்கு திருட்டு'க்கான ஆதாரத்தை வழங்குவோம். வாக்குகளை திருடுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளது.
    • ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

    கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி ஆவணங்களையும் வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. தனது குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

    ஆனால், குற்றச்சாட்டுகளை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய ராகுல் மறுத்துவிட்டார். இதையடுத்து பா.ஜ.க. உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
    • வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.

    புதுக்கோட்டை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த போது 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபை சீட்டு தருவதாக அ.தி.மு.க. ஒப்புக்கொண்டது. அதன்படி தற்பொழுது எங்களுக்கு அ.தி.மு.க. ராஜ்ய சபை சீட்டு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தே.மு.தி.க.வுக்கு மேல்-சபை எம்.பி. பதவி கொடுக்கவேண்டியது அ.தி.மு.க.வின் கடமை.

    பொறுத்தார் பூமி ஆள்வார், என்பதற்கிணங்க பதட்டமோ, அவசரமோ இல்லாமல் தே.மு.தி.க. உள்ளது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். உறுதி அளித்தபடி மேல் சபை எம்.பி. சீட் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று தே.மு.தி.க. பிறகு பார்த்துக்கொள்ளும்.

    தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. வரும் ஜனவரிக்குள் எல்லாம் முடிவு செய்யப்படும். 234 தொகுதிகளுக்கும் பூத் வாரியாக கமிட்டி நியமித்து 2 நாளில் தெரிவிக்கப்பட உள்ளது. தே.மு.தி.க. வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கொடுப்பதும் இல்லை, யாரிடமும் அட்வைஸ் பெறுவதும் இல்லை.

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.

    தமிழர்களுக்கு அன்னை தமிழ் மொழி தான். அந்தந்த மாநிலத்திற்கு அவர் அவர்களின் மொழிகள் தாய்மொழி. நமக்கு ஆதி மொழி தமிழ் மொழி. அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையில் ஞானசேகரன் தண்டனை கொடுத்தது வரவேற்கத்தக்கது.

    இருப்பினும் ஞானசேகரன் பின்னணியில் யார்? யார்? உடந்தையாக இருந்தார்களோ, அவர்களுக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடிகர் ராஜேஷ் காலமானார் என்று செய்தி வேதனை அளிக்கிறது. விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் ராஜேஷ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாகிர் உள்பட பலர் இருந்தனர்.

    • 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.
    • தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது.

    கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.

    மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர். இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியானது. இதில் 161 தொகுதிகளில் லிபரல் கட்சி முன்னிலையில் இருந்தது. கன்சர் வேட்டிவ் கட்சி 150 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றன.

    இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, லிபரல் கட்சி 167 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங்கின் தேசிய ஜன நாயக கட்சி இந்த தேர்தலில் 343 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் பெற்றது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி 24 இடங்களை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.

    இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.

    சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.
    • பிரதமர் மோடி மாபெரும் தலைவர்.

    புதுடெல்லி :

    பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா ரனாவத், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    எனது சொந்த மாநிலத்தின் மக்களின் முன்னேற்றத்துக்காக நான் உழைக்கிற வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பெருமை.

    என்ன நிலைமை என்றாலும், அரசு எனது பங்களிப்பை விரும்பினால், எல்லா விதத்திலும் நான் பங்கேற்பதற்கு தயாராக திறந்த மனதுடன் இருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் இருந்து நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பி, பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.

    இமாசலபிரதேச மக்கள், அவர்களுக்கு சேவை ஆற்றுகிற வாய்ப்பினை எனக்கு தந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே நிச்சயமாக அது எனது அதிர்ஷ்டம்தான்.

    ஆம் ஆத்மியின் போலியான வாக்குறுதிகளுக்கு இமாசலபிரதேச மாநிலம் இரையாகாது. இந்த மாநில மக்கள் தங்கள் சொந்த சூரிய மின்சக்தியை கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தமாக காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள்.

    எனவே இலவச திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

    பிரதமர் மோடி மாபெரும் தலைவர். ஆனால் அவரும், ராகுல் காந்தியும் போட்டியாளர்கள் என்பது வருத்தம் அளிக்கும் விஷயம்.

    மீண்டும் டுவிட்டர் சமூக ஊடகத்துக்கு வருவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் அதில் ஓராண்டு காலம் இருந்தேன். டுவிட்டரால் அந்த ஓராண்டு காலம்கூட என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராமில் சேர்ந்து ஓராண்டாகி விட்டது. நான் ஏற்கனவே 3 எச்சரிக்கைகளை பெற்றிருக்கிறேன். எனவே நான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த மாட்டேன் என்று கூறினேன். இந்த பிரச்சினையை எனது குழு கையாண்டது. இப்போது எல்லாமே சரியாகி விட்டது.

    நான் மீண்டும் டுவிட்டருக்கு வந்தால், மக்களின் வாழ்க்கை சுவாரசியமாகி விடும். என் வாழ்க்கையோ பிரச்சினைக்குள்ளாகி விடும். நான் டுவிட்டரில் இல்லாததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கணக்குக்கு புத்துயிரூட்டினால், நிச்சயமாக உங்களுக்கு நிறைய 'மசாலா' கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன.
    • பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.

    * நடைபயணம் சென்று கொண்டி ருக்கும் ராகுல்...

    * பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்....

    * தேர்தல் போர் களத்தில் இரண்டு முறை மோதியும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜனதா....

    இந்த சூழ்நிலையில் 2024 பாராளு மன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல் லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசம், தெலுங்கானா, பீகார், மராட்டியம் மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தன.

    அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னை வீழ்த்த முடியாத சக்தியாக பாரதீய ஜனதா நிரூபித்து இருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    உ.பி.யின் கோலாலோகரநாத், அரியானாவின் ஆதம்பூர், பீகாரின் கோபால்கஞ்ச், மொகமா, ஒடிசாவின் தாம்நகர், தெலுங்கானாவின் முனு கோடு, மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு ஆகிய 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

    பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்து வரும் பொது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நாடி பிடித்து கணிப்பதாகவே இருக்கும்.

    அதன்படி இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு தொடர் எழுச்சி, காங்கிரசுக்கு தொடர் வீழ்ச்சி, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி என்ற வகை யிலேயே அமைந்துள்ளது.

    உ.பி.யின் கோலாலோகரநாத் தொகுதியில் பா.ஜனதா 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது தொகுதியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    அரியானாவின் ஆதம்பூர் காங்கிரஸ் தொகுதி. இந்த தொகுதியில் பா.ஜனதா 16 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வென்றுள்ளது.

    பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதி யில் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வென்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.

    இதே போல் அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான மொகமாவில் ஆர்.ஜே.டி. கட்சி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

    ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் பா.ஜனதா வென்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.

    தெலுங்கானா முனுகோடு தொகுதி காங்கிரஸ் தொகுதி. இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றுள்ளது.

    மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா வென்று உள்ளது. இங்கு பா.ஜனதா போட்டி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 7 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு பின்னடைவையே கொடுத்துள்ளது. அரியானாவின் ஆதம்பூர் தொகுதியை பா.ஜனதாவிடமும், தெலுங்கானாவின் முனுகோடு தொகுதியை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியிடமும் பறி கொடுத்துள்ளது.

    பறி கொடுத்தது மட்டுமல்ல காங்கி ரஸ் 23,384 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையே பிடித்துள்ளது. 2-வது இடத்தை பிடித்த பா.ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 63 ஆயிரத்து 384 என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாநிலத்திலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இல்லாத ஒரு அணியை உருவாக்குவதில் சந்திர சேகரராவ் தீவிரமாக இருக்கிறார்.

    செல்வாக்குடன் இருந்த காங்கிரசின் செல்வாக்கு மிகவும் சரிந்துள்ளதால் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி யுடன் மல்லுகட்ட பா.ஜனதா தயாராகி விட்டதாகவே பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கையின் போதும் இந்த இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தது. கடைசியில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றது.

    பா.ஜ.க. கடந்த தேர்தலில் 12,275 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தது. இடைத்தேர்தலில் கடந்த தேர்தலை விட 74 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது.

    தெலுங்கானாவில் ராகுல் நடை பயணத்தில் பெரிய அளவில் கூட்டம் திரண்டது. எனவே தேர்தலில் தெலுங் கானா ராஷ்டீரிய சமிதிக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

    ஆனால் காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு சீனிலேயே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே ராகுல்காந்தி தலைவராக பதவி ஏற்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்த போது காங்கிரஸ் ஆட்சிைய இழந்தது. இப்போது கட்சி சீரமைக்கப் பட்டு புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தன்னி டம் இருந்து 2 தொகுதிகளை இழந்து மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.

    மோடியின் செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    மோடியை வீழ்த்த எதிர்கட்சிகள் எத்தனையோ வியூகங்களை வகுத்தும், அஸ்திரங்களை கையில் எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.

    ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மகா கூட்டணியை உருவாக்கி பா.ஜனதாவை கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் 2-ல் ஒரு தொகுதியை பா.ஜனதா வென்றது. எனவே இந்த மகா கூட்டணி தேசிய அளவில் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று கலக்கம் அடைந்துள்ளார்கள்.

    இதற்கிடையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதி களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தொடர்ந்து 6 முறை இந்த மாநிலத் தின் ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜனதா இந்த தேர்தலிலும் தக்க வைக்க கடுைமயாக போராடும். பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

    பா.ஜனதாைவ எதிர்த்து காங்கிரசும் மல்லு கட்டுகிறது. கியாஸ் சிலிண்டர் ரூ.500, ரூ.10 லட்சம் வரையிலான விவ சாய கடன்கள் தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி களையும் அளித்துள்ளது.

    இந்த முறை கூடுதலாக ஆம் ஆத்மி யும் களம் இறங்கி இருக்கிறது.

    இதே போல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச தேர்த லும் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. கவர்ச்சிகரமான இலவசங்களுடன் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

    காங்கிரசும் மக்களை கவரும் வகை யில் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அதே நேரம் கருத்துக் கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே உள்ளன. பா.ஜனதா 131 முதல் 139 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா 37 முதல் 45 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 21 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளும் இந்த மாநில தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன.
    • இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது.

    சென்னை:

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி விட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசிய அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமையேற்கும் என்பது போன்றே தங்கள் கட்சியின் கருத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தீவிரமாக இப்போதே களம் இறங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பேட்டி அளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை கருத்து தெரிவித்துள்ள தினகரன் தேசிய கட்சி ஒன்றுடன்தான் கூட்டணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    தற்போதைய சூழலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியுடன் அ.ம.மு.க. கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் இடம்பெற தயார் என்று அறிவித்திருப்பதன் மூலம் டி.டி.வி. தினகரன் தனது நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் எதிர்காலத்தில் இணைய போவதையே டி.டி.வி. தினகரன் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து டி.டி.வி. தினகரனை ஓரம் கட்டினர். இதன்பின்னர் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" என்கிற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வரும் தினகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வேட்டு வைத்தார்.

    தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டுமென்றால் அதற்கு டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றே பா.ஜனதா விரும்புகிறது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி உள்ளது. அப்போது டி.டி.வி. தினகரனை சேர்ப்பது தொடர்பாக இப்போதே எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் என்றும் கடைசி நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன. இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க. கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதுதவிர டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜே.கே. கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இடம் மாறி பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதன்படி பார்த்தால் பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று தி.மு.க.வை எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர மேலும் பல அமைப்புகளும் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வியூகத்தை வகுத்துள்ளதாகவும் இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியை நிச்சயம் வீழ்த்தும் என்றும் அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார்.
    • மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.

    அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில் ரோகன்னா, வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால், கலிபோர்னியாவில் அமி பெரரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இதில் ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோர் தொடர்ந்து 4-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.

    • ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் மத்தியில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

    பா.ஜனதா தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்தது. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

    ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த 150 நாள் பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது. இதன்மூலம் ராகுல்காந்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பணிக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கானி, ரந்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி, சுனில்கனு கோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 8 பேர் கொண்ட பணிக்குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.

    இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் பணிக்குழுவுடன் நடைபெற உள்ள முதல் கூட்டம் இதுவாகும்.

    இதில் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், பணிக்குழுவின் பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான திட்டம் ஆகியவை குறித்து மல்லிகார்ஜூன கார்கேயிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    • விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.
    • தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர்.

    சென்னை :

    சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அதிரடி காட்டியவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எதிராக அரசியல் களத்தில் கலக்கிய விஜயகாந்த், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியை ருசித்த நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை அள்ளினார்கள்.

    முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலையும் (2009-ம் ஆண்டில்) தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன.

    இப்படி சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய விஜயகாந்த் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுடன் தான் எனது கூட்டணி என்றே கூறி வந்தார். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்முறையாக விஜயகாந்தும் கூட்டணி அரசியலுக்குள் தன்னை புகுத்திக்கொண்டார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. இப்படி 3 தேர்தல்களில் வெற்றிக் கொடியை நாட்டிய தே.மு.தி.க.வுக்கு 2016-ல் இருந்து இறங்கு முகமே. முதல்- அமைச்சர் ஆசையுடன் மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. கூட்டணியிலேயே விஜயகாந்த் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜயகாந்தின் இந்த முடிவு மீண்டும் அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமைந்தது.

    ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். இந்த தேர்தலில் விஜயகாந்தின் ஓட்டு சதவீதம் 2.4 சதவீதமாக சரிந்தது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் இதுவரை தே.மு.தி.க 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.

    2009-ல் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய நிலையில் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு தோல்வியே கிடைத்தது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தோற்ற தே.மு.தி.க கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோற்றுப்போனது.

    இப்படி தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் மண்ணை கவ்விய தே.மு.தி.க., 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது எம்.பி. கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடனேயே உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக அது தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று தொடர்ந்து மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அடித்து கூறுகிறார் தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர்.

    தற்போதைய சூழலில் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பதே பெரிய விசயமாக உள்ளதே?

    கட்சிக்குள் பழைய உற்சாகம் இல்லையே?

    இப்படி இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்தாலும் வெற்றிபெறுவது சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். இதற்கு பதில் அளித்து அந்த நிர்வாகி கூறியதாவது:-

    தே.மு.தி.க.வில் தற்போதுதான் உள்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். கட்சியை கீழ்மட்டத்தில் வலுப்படுத்தும் எண்ணத்திலேயே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்மூலம் தே.மு.தி.க.வுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளரான பிரேமலதா, கேப்டனையும் கவனித்துக்கொண்டு கட்சியை சரியான திசையில் வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார். இளைய கேப்டன் என்று அழைக்கப்படும் தலைவரின் மகன் விஜய பிரபாகரன் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் விஜய பிரபாகரனும் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    கேப்டன் ஆசைப்பட்டபடி தே.மு.தி.க.வை ஆட்சி கட்டிலில் அமரச் செய்துவிட வேண்டும் என்பதில் பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் உறுதியாக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தே.மு.தி.க. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதே இல்லை.

    வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தீவிரமாக உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெறும். கூட்டணி பலத்துடன் தே.மு.தி.க. வெற்றிபெற்று பாராளு மன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்துவைக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு நம்பிக்கையுடன் பேசிய தே.மு.தி.க. நிர்வாகி, விஜயகாந்தின் உடல்நிலையை தேர்தலுக்குள் சரிசெய்து அவரை பிரசார களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது சாத்தியமா? என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.

    விஜயகாந்துக்கு பேச்சு சரியாக வரவில்லை. நிற்பதற்கும் முடியவில்லை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் தேர்தலுக்குள் சரிசெய்துவிட முடியும் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். தே.மு.தி.க. தொண்டர்களும் அந்த நாளுக்காகவே காத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெறப்போகும் வெற்றி எங்கள் கட்சிக்கு 2-வது வெற்றி இன்னிங்சாக இருக்கும் என்றே தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில் அரசியல் நோக்கர்களோ... தே.மு.தி.க. இனி தேறுமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சரியாக இல்லாத நிலையில் அந்த கட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதே தெரியவில்லை. திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போலவே அந்த கட்சி உள்ளது. அது கரை சேருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

    தொடர் தோல்விகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களம் மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது என்பதும் அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

    காமெடி நடிகர் விவேக் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையிலேயே தே.மு.தி.க. உள்ளது என்பதே தற்போதைய சூழலில் மறுக்க முடியாத உண்மையாகும்.

    • 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சிரீதியில் அமைந்துள்ள 117 மாவட்டங்களின் செயலாளர்களும் பங்கேற்றனர். கட்சியின் துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகள், கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.

    குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டாக வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். கடந்த முறை தேர்தல்களின்போது செய்த தவறுகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் செய்யக்கூடாது' என்று கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.

    இதுதவிர அந்தந்த மாவட்டங்களில் நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களையும் மாவட்ட ரீதியாக கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு வெளியே வந்த கமல்ஹாசனிடம், "பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசப்பட்டதா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினோம். விவாதித்தோம். ஆனால் அதை இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் விவாதித்தோம்'' என்று பதில் அளித்தார்.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறாத நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் இப்போதே ஆயத்த பணிகளில் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×