search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk alliance"

    • அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது.
    • அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை பங்கீடு செய்துவிட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது. ஆனாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

    பா.ம.க.வை தனது பக்கம் இழுக்க அ.தி.மு.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பா.ம.க.வுடன் ரகசியமாக பேசி வருகின்றனர்.

    அதே வேளையில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்க ஒருபுறம் பேச்சு நடத்தி வருகிறது.

    இந்த நிலையல் அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது. ஒருவேளை பா.ம.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால் தே.மு.தி.க.வை அழைத்து பேசி தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய அ.தி.மு.க. தயாராகி விட்டது.


    பா.ம.க.வுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்தி விட்டு தொகுதி பங்கீட்டை முடிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. பா.ம.க.வுடன் பா.ஜனதா இன்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட அ.தி.மு.க.வும் தொடர்ந்து அக்கட்சியை இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையில் தே.மு.தி.க.வுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நாளை (வியாழக்கிழமை) நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பா.ம.க.வுடன் ரகசிய பேச்சு நடத்திய அ.தி.மு.க. அதில் முடிவு எட்டாததால் தே.மு.தி.க.வை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் நாளை மாலை அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்திக்க உள்ளனர். அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை எம்.பி.யும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அ.தி.மு.க. 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன் வருவதாக தெரிவித்தது. மேல்சபை எம்.பி. கொடுக்க இயலாது என்று தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது. அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு நாளை சுமூகமாக நடைபெற்று இறுதியாகக் கூடிய சூழல் நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த அ.தி.மு.க. விலகியது அந்த கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வை விமர்சித்ததும் அண்ணா பற்றி கூறிய கருத்தும் அ.தி.மு.க. தலைமைக்கு பிடிக்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கான காரணம்.

    அண்ணாமலையின் செயல்பாட்டில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் நேரிலேயே டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகினார்கள். இனிமேல் பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டனர்.

    ஆனால் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது. இந்த தேர்தலில் போடும் அடித்தளம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கைகொடுக்கும் என்று கருதுகிறார்.

    அண்ணாமலையின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் ஆதரவும் இருக்கிறது. அதேநேரம் பலமான கூட்டணி அமைத்தால் தான் சில தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என்று மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

    3-வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் டெல்லி தலைவர்கள் அண்ணாமலையின் அக்னி பரீட்சைக்கு சம்மதிப்பார்களா? அல்லது கூட்டணிக்கான முயற்சியை முன்னெடுக்க வலியுறுத்துவார்களா? என்று தெரியவில்லை.

    இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி முறிவுக்கான காரணங்களை விளக்குவார் என்று கூறப்படுகிறது.

    அடுத்த கட்டமாக தமிழகத்தில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமித்ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 3-ந் தேதி (செவ்வாய்) மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரை அய்யாவு மகாலில் நடக்கிறது. அன்று மாலையில் கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    டெல்லியின் முடிவுகளை கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.
    • சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது:-

    எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.

    தமிழகத்திற்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு பத்திரிக்கையின் வாயிலாக அறிவொளி இயக்கம் நடத்துவதைப் போல் படிக்காத பாமரரையும் படிக்க வைத்த மிகப்பெரிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவர் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும் என்றார்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா?

    ப: சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை. தேசிய தலைமை முடிவெடுத்த பின் முடிவு சொல்லப்படும்.

    கே: கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் கூட்டணி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனரா?

    ப: கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சி சார்பில் முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
    • ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி விட்டன.

    அ.தி.மு.க. கட்சிக்குள் சட்ட ரீதியாக சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதும் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது.

    அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

    சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும்.

    பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

    இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம்.

    எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது.

    இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

    பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #ministermrvijayabaskar #admk #TNElections2019

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வடிவேல்நகர் அரசு உயர் நிலைபள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 130-வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் தம்பிதுரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது.

    கரூர் பாராளுமன்ற தொகுதி பதற்றமான தொகுதி கிடையாது. அமைதியான தொகுதிதான். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் பொது விடுமுறையையடுத்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரங்களில் 3, 4 நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணி நாள் என்பதால் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இதனால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாதது. சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு சிரமம் இருக்காது. அதற்கேற்றாற் போல் . பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #admk #TNElections2019 

    அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். #PMK #PongalurManikandan
    கோவை:

    பா.ம.க.வின் மாநில துணை தலைவராக இருந்தவர் பொங்கலூர் மணிகண்டன். இவர் இன்று பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கோவையில் நிருபர்களிடம் கூறும் போது, அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. மக்களுக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை. அதனால் பா.ம.க.வில் இருந்து விலகுகிறேன். காடு வெட்டி குரு பா.ம.க.விற்காக பாடுபட்டார். ஆனால் அவரது கடனை அடைக்க அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.


    8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. அமைச்சர் மேல்முறையீடு செய்வேன் என்கிறார். ஆனால் இது குறித்து அன்புமணி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. பா.ம.க.வை விட திராவிட கட்சிகளே மேல். பா.ம.க.வில் இருந்து பலர் விலக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #PongalurManikandan
    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை தென்சென்னை தொகுதியில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பிரசாரத்தை தொடங்கி 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (சனி) திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    31-ந்தேதி (ஞாயிறு) பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியிலும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
    #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை என்று ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தென்மாவட்டத்தில் பா.ம.கவுக்கு முதல்முறையாக வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அறிவித்துள்ள மாதம் ரூ.6000, ஆண்டுக்கு ரூ.72,000 உதவித்தொகை திட்டமானது மாதவருமானம் ரூ.1000-க்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் யாரும் பயன்பெற முடியாது.

    காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை. அதேபோல் 18 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வதாக கூறியுள்ள திட்டங்களை அப்போது ஏன் செயல்படுத்தவில்லை.

    ஊழலில் கூட்டணி அமைத்த காங்கிரஸ், தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. பதவி சுகம், வெற்றிக்கனவு ஆகிய அனைத்தும் தேர்தலுக்கு பின் தி.மு.க மறந்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.

    அந்த ஆசை கருணாநிதியோடு முடிந்துவிட்டது. மு.க.ஸ்டாலினுக்கு கடமையும், கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்தால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு பா.ம.க துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin
    சென்னையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று 24 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று வடசென்னை தொகுதி ராயபுரத்தில் திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார். மத்திய சென்னை தொகுதியில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் பிரசாரத்தை முடித்தார்.

    இன்று மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் மதியம் 2 மணியளவில் பிரசாரத்தை தொடங்கும் அவர் கே.கே.நகரில் முடிக்கிறார்.

    இன்று 24 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    பார்த்தசாரதி கோவில் பாரதியார் வீடு பின்புறம், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில், சூளை போஸ்ட் ஆபீஸ், அயனாவரம், டி.பி. சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி, புஷ்பா நகர், காமராஜர் காலனி நாகவள்ளியப்பன், கோவில், அசோக் நகர் 1-வது தெரு, அயோத்தியா மண்டபம், முத்துரங்கன் சாலை-தி.நகர், கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோவில் மார்க்கெட் அருகில், ரேஸ் கோர்ஸ் சாலை.

    மத்திய கைலாஷ்- குருநானக் கல்லூரி வழியாக காந்தி சாலை, அம்பிகா தெரு, திருவான்மியூர், மேற்கு அவென்யு, அண்ணா தெரு, லட்சுமி காந்தி சாலை, சாஸ்திரிநகர் முதல் அவென்யு, ஆர்.கே.மடம், தெற்கு மாட வீதி வழியாக மாங்கொல்லை.

    வடக்குமாட வீதி, லஸ்கார்னர், திருவள்ளூர் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, அரங்கநாதர் சப்வே, கரும்பாடி அம்மன் கோவில், விருகம்பாக்கம் ஏரிக்கரை, தசரதபுரம் சாலை சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர், பாரதிநகர், பச்சையம்மன் கோவில் ஏரிக்கரை, ஆற்காடு சாலை, கே.கே.நகர் சாலை சந்திப்பு.  #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    அதிமுக கூட்டணி தலைவர்களை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #ADMK

    பொன்னேரி:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்தியில் நிலையான, வலுவான மோடியின் ஆட்சி மீண்டும் அமைய அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் வருவதில்லை என்று பொய்யான தகவலை மு.க. ஸ்டாலின் பரப்பி வருகிறார்.

    தமிழக நலனுக்காக அ.தி.மு.க. அமைத்த மெகா கூட்டணியில் விருப்பப்பட்டு பா.ம.க., தே.மு.தி.க. தா.மா.க. போன்ற கட்சிகள் சேர்ந்துள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்களை தரமற்ற முறையில் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இந்த திமிர் பேச்சை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை முத்தானது. ஆனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொய்யானவை. ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    முன்னதாக எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

    புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்தால் எப்படி கூட்டணி அமைப்பாரோ அது போல ஒருமித்த கருத்துடைய கூட்டணியை அமைத்து இருக்கிறோம். நம்முடைய மெகா கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொறாமை படுகிறார். கூட்டணி வைப்பது கட்சிகளுடைய விருப்பம். ஓவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கின்றது. அந்தந்த கட்சியின் விருப்பத்தின்படிதான் கூட்டணி வைப்பார்கள். தி.மு.க.வுடனா கூட்டணி வைப்பார்கள்?

    கூட்டணி வைப்பதை எல்லாம் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    தி.மு.க கூட்டணி வெத்து வேட்டு கூட்டணி. மக்கள் பலமில்லாத கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத கூட்டணி. எனவே நம்மை பற்றி விமர்சனம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி. எங்களை பற்றி எந்த விமர்சனமும் செய்திட தி.மு.க. தலைவருக்கு எந்த தகுதியும் இல்லை.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswami #ADMK

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27-ந்தேதி திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப். 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அப்போது உடல் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.


    இதனால் அவரது மனைவி பிரேமலதா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க., பா.ம.க. , பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அவர் வருகிற 27-ந்தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இதுகுறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27.03.2019 (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-


    மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது.  அ.தி.மு.க. எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.  
    அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.  அ.தி.மு.க. தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.   #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls #Deepa
    ×