search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
    • சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2 மாதம் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு தற்போது கோடை மழை ஆறுதலாக உள்ளது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    அதிகபட்ச வெப்பம் நிலை இயல்பைவிட குறைவாகவே உள்ளது. இதனால் உஷ்ணம் மற்றும் புழுக்கத்தில் இருந்து மக்கள் தற்போது சற்று விடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் 22-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரண மாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    அதன் படி இன்று (18-ந் தேதி) அநேக இடங்களில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும் தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை (19-ந் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராம நாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை

    சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் இப்பகுதிக ளுக்கு மீனவர்கள் 21-ந் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

    வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளனர்.

    அதன்படி தலா 30 வீரர்கள் கொண்ட தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டத்துக்கு ஒரு குழு அனுப்பப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 300 வீரர்களை கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் அனைத்து மீட்பு உபகர ணங்களுடன் தயார் நிலை யில் நிறுப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் கோரிக் கையின்படி அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலை யில் உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் கனமழை யாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்படும் நிலையில் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரையிலும் நீடித்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 5.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. பிரதான அணையான பாபநாசத்தில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கன்னடியன் கால்வாய் பகுதிகளிலும் பலத்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளுக்கு நீர் வரத்து பெரிய அளவில் இல்லை என்றாலும் கோடை மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தலையணை அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    களக்காட்டில் அதிக பட்சமாக 22.6 மில்லி மீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 29 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் அம்பையில் கனமழை பொழிந்தது. வி.கே.புரம், பாபநாசம், அகஸ்தியர்பட்டி, சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.அம்பையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பில் வருகிற 22-ந்தேதி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க செல்லவேண்டாம் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நீடித்து வரும் நிலையில், இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று மாவட்டத்தில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வரை பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடனே சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேறிய நிலையில் வெள்ளம் திடீரென அருவியின் படிக்கட்டு பகுதிகளிலும் நிரம்பி ஓடியது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

    தீயணைப்பு துறையினர் அவரது உடலை சுமார் 500 அடி தூரத்தில் பாறை இடுக்கில் மீட்டனர். தகவல் அறிந்து அங்கு கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விரைந்து வந்தனர். தொடர்ந்து பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு கலெக்டர் தடை விதித்தார்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கரைக்கு வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே மேற்கொண்டு அசம்பாவி தங்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றாலம் அருவியின் அருகே இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அணைகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கருப்பாநதி, கடனா நதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

    மாலை 3 மணிக்கு பிறகு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இன்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த சூழ்நிலை நிலவியதோடு மூடு பனியும் நிலவியது. இன்று காலையில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி நிலவியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

    • 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
    • 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.
    • தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகும் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், இன்று காலை சற்று சரிந்து 1500 கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • வார இறுதி நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    கோவை:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி மலை அமைந்து உள்ளது.

    இங்குள்ள 7-வது மலையில் சுயம்புவடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பூலோகத்தின் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வேண்டுமெனில், சுமார் 5.5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மலைப்பாதை வழியாக சென்று வழியிலுள்ள வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சனை, கைதட்டி சனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற மலைகளை கடந்தால் 7-வது மலையில் வீற்றிருக்கும் சுயம்புலிங்க பெருமானை தரிசிக்க முடியும். மேலும் இந்த மலைப்பாதை பயணம் என்பது மிகவும் கரடு-முரடானது.

    வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம்வரை அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்து உள்ளது. இதனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    வெள்ளியங்கிரி மலையில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அங்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் சிதலமடைந்து உள்ளன. தொடர்ந்து வெள்ளியங்கிரி மலையில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சென்னை:

    அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,850-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,800-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • 2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
    • தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.

    ஆந்திர மாநிலம், பலமனேறு அருகே உள்ள கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி கவுனிதிம்மேபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிய வகையை சேர்ந்த முதுகு தங்கம் போல் மின்னும் தவளையை கண்டு பிடித்தனர்.

    2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளது. இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் என்பதாகும்.

    இந்திய துணை கண்டத்தில் இதுவரை 19 வகையான தங்க முதுகு தவளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் வாழ விழைகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் பருவமழையை எதிர்பார்த்து பொதுமக்கள், விவசாயிகள் காத்து உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 822 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    மேலும் அணையின் நீர்மட்டம் 49.79 அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    • பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
    • பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை-பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும்-அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

    பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

    உத்தரபிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.

    மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை-பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

    உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.

    பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக் கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.

    பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.

    பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
    • கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக இங்குள்ளன. தற்போது அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதனால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள மிகப்பெரிய ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் அங்கிருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    செந்நிறத்தில் ஓடும் இந்த தண்ணீரின் அழகை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் கொல்லிமலை மற்றும் அடிவாரம் புளியஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கவனமாக செயல்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் அபாய எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாறைகளிலும், எச்சரிக்கை, கற்கள் நிறைந்த பகுதி, பாறையின் மேல் ஏறி குதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் கடந்தவாரம் புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்துள்ளார் அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில் வனச்சரகர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து புளியஞ்சோலை வனப்பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ×