என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மகா திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
    • கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.

    பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடைவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா திருவிழாவைக் காணத் தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

     

    இந்த கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஜான்சி ராணி உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் தாயார் தமிழ்செல்வி வசந்தகுமார், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண், மண்டைக்காடு பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் சுந்தர், வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.
    • பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.

    மாசி மாதத்திற்கான பவுர்ணமி நாளை மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    இந்த நேரம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
    • பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.

    இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.

    ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம்பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் நமது இலக்கை அடைவதற்கான வாகனம் அருகே வந்து விட்டது என கூறி இருந்தார்.

    மேலும் பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று ராமதாஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று தைலாபுரம் வந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. யாருடன் கூட்டணி என முடிவெடுக்கவில்லை என்றார்.

    இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் காலை 10 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    இதனால் ஈரான், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களும் இந்தியாவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள்.

    இதையடுத்து சவூதி அரேபியா, குவைத் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

    • நேற்று அதிரடியாக காலை, மாலை என இருவேளைகளில் தங்கம் விலை உயர்ந்தது.
    • பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த 23-ந்தேதியில் இருந்து தங்கம் ஓரளவு உயர்ந்து விற்பனையான நிலையில் நேற்று அதிரடியாக காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து தங்கம் கிராமுக்கு 650 ரூபாயும் சவரனுக்கு 5200 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் 1,24,400-க்கு விற்பனையாது.

    இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலே என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் போர் பதற்றம் நீளும் வரை தங்கம் விலை உயரலாம் என கருதப்படுகிறது.

    அந்த வகையில், பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையானாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி வாரவிடுமுறையான இன்று தங்கம் கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும் சவரனுக்கு 1800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் விற்பனையாகிறது.

    அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ.325-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-02-2026- ஒரு கிராம் ரூ.320

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

    பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 



    • நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.
    • சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

    கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்

    மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலனும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்களை சூழ வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதன்பின் மெரினா கடற்கரையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.கஸ்டாலினுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அதன்பின், அண்ணா அறிவாலயம் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். 

    • நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது;
    • நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!

    அவற்றைக் காப்பது நம் கடமை!

    உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.

    தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.

    அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

    உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.

    கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!

    தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!

    நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!

    சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.

    இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!

    தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக! என்று கூறியுள்ளார். 



    • எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
    • மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 50 ரூபாய் உயர்ந்த நிலையில் இம்மாதமும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

    • புதுடெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்படுகிறது.
    • தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்-இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.

    போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.

    தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp)

    அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

    இந்தியாவிற்குள் - 1800 309 3793 வெளிநாடு - +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு - +91 80 6900 9901 என உதவி எண்களை பதிவிட்டுள்ளார்.

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
    • அதில், வளைகுடா வாழ் இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக, விஜய் வசந்த் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

    சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் மோசமடைந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்து எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




     சமீபத்திய தகவல்களின்படி, ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. இதனால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்த திடீர் பதற்ற நிலை, அங்கு வாழ்ந்து வேலை செய்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும், அதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சில பகுதிகளில் குண்டு சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சூழ்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் உடனடி மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்:

    பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், இந்திய தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட உதவி எண்களை செயல்படுத்தி, விரைவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்றத்திற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களை தயார் செய்தல், இந்தியர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உறுதிசெய்ய அந்த நாடுகளுடன் தூதரக மட்டத்தில் தொடர்பை ஏற்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த அவசரமான சூழ்நிலையில், இந்திய குடிமக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி தலையீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்திய அரசு விரைவாகவும், உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×