என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார் ஆளுநர்
- சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
- விழாவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா தரமணியில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை.
கடந்த 2 மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த வந்த நிலையில் இன்றைய விழாவில் அமைச்சர் துரைமுருகனும் புறக்கணித்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் 38 பேர் ஆராய்ச்சி படிப்புக்கான முனைவர் பட்டம் பெற்றனர். 86 பேருக்கு நேரில் பட்டங்களை ஆளுநர் வழங்கினார். 16,571 பேருக்கு அந்தந்த கல்லூரிகளில் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
விழாவில் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் நீதிபதி பாரதிதாசன், உறுப்பினர்கள் சார்ஜ் அலெக்சாண்டர், ஓம். பிரகாஷ் மற்றும் பதிவாளர் கவுரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






