என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆக்க கூடாது- குஷ்பு
- காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.
- இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்து விடும்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நடிகையும் பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தயாராக தான் உள்ளது. நாளை மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் தமிழ்நாடு வருவது தேர்தலுக்காக மட்டுமில்லை. எத்தனையோ முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்து சென்று உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமருக்கு அன்பு, பாசம் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம் குறித்து ஆரம்ப காலத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை இதனால் அவர் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். அவருக்கு லாபம் கிடைக்கும் இடத்தில் அவர் போய் உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறித்து தெரியவரும்.
விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை அரசியல் ஆக்கக்கூடாது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சனைகளை நாம் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர்களுக்கு அந்த தைரியமும் கிடையாது. அவர்கள் தி.மு.க.விடவுமும் பேரம் பேசுகிறார்கள். விஜய்யிடமும் பேரம் பேசுகிறார்கள். அவர்களுக்கு யாரிடம் இருந்து லாபம் அதிகமாக வருகிறதோ அவர்களிடம் சென்று சேர்ந்து விடுவார்கள்.
இனி மத்தியில் காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் இருக்கிறது. தற்போது தான் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஆட்சியில் பங்கு தர மாட்டோம் எனக் கூறி உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்து விடும். காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் இந்த ஒரு தேர்தலில் தனியாக நின்று பாருங்கள். ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற தகுதி இருக்கிறதா என தெரிந்து விடும்.
பா.ஜ.க.வை தயவுசெய்து காங்கிரசுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். பா.ஜ.க.விற்கு உள்ள தைரியம் இங்கு எவருக்கும் வராது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் குஷ்பு போட்டியிடுகிறாரா? இல்லையா? என்பது முக்கியம் கிடையாது. எங்கள் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி மக்களிடத்தில் சேவை செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம் என்றார்.






