என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
- பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.
தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.
இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார்.
- அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
திருத்தணி:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரி. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நிர்வகிக்க உரிமை கோரும் அதிகாரத்தை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு வழங்க ராமேஸ்வரி முடிவு செய்தார்.
இதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்காக அனைத்து சான்றுகளும் பதிவேற்றப்பட்ட நிலையில், காயத்ரிக்கு வழங்கும் அதிகாரம் கோரும் பத்திரத்தை அதிகாரிகள் வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார். அதிகார பத்திரம் குறித்து கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழுது காரணமாக அவருக்கு உரிய அதிகார பத்திரம் வழங்க முடியவில்லை என்றனர்.
- இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
- தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
மதுரை:
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.
கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.

அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.
கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்
தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.

ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.
எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
- நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னையில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. ரூ.1300-க்கு விற்பனையான 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.1400-க்கு விற்பனையாகிறது.
இதேபோன்று அரிசியின் தரத்தை பொறுத்து அனைத்து மூட்டைகளும் 100 முதல் 200 ரூபாய் வரையில் உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அறுவடை காலம் ஆகும். இந்த நேரத்தில் அரிசியின் விலை சற்று குறைந்திருக்கும். ஆனால் தற்போது விலை ஏறி உள்ளது என்று கூறியிருக்கும் வியாபாரிகள் மிச்சாங் புயலும் இதற்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அரிசி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும். மிச்சாங் புயல் பாதிப்பால் அறுவடை நேரத்தில் காற்று அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 30 மூட்டைகள் விளையும் இடத்தில் புயல் பாதிப்பு காரணமாக 18 மூட்டை நெல்லே உற்பத்தியாகி உள்ளது. இதனால் நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
அறுவடை நேரத்தில் காற்று அதிகமாக வீசியதன் மூலம் நெற்பயிரில் பால் சிதறி தரமும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அரிசியின் விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.4 வரையிலும் விலை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.
ஓசூர்:
ஓசூர் வனக்கோட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில், 200-க்கும் மேற்பட்ட பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உட்பட மொத்தம் 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மேலும், தொலைநோக்கு கருவிகள், கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, சிறிய காட்டு ஆந்தை, செந்நாரை, மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.

குறிப்பாக ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நீர்நிலையில் மஞ்சள் மூக்கு நாரை பறவை கண்டறியப்பட்டது. இந்த பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த நீர்நிலையில் தங்கி பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து பராமரித்து அங்கிருந்து செல்வது வழக்கம்.
டி.வி.எஸ்., வளாகத்திலுள்ள ஏரியில், மரங்கள் மற்றும் புதர் செடிகள் அதிகளவில் காணப்படுவதாலும், சீதோஷ்ண நிலை இப்பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருப்பதாலும், கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
- வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
ராயபுரம்:
சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 2-வது தளத்தில் 9 வயது மகனுடன் குடியிருந்த இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
நேற்று காலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை பெண் பார்த்துள்ளார். அதில் கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
இதையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
அப்போது அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல வீடியோக்களும் பதிவாகி இருந்தன.
இதையடுத்து ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.
அப்போது வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இப்ராகிம் மருத்துவ மாணவர் என்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டு படித்து வரும் இவர், வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
- திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சந்தை பகுதிகளில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க கூடாது எனவும், இதனை கண்டித்தும் இன்று அதிகாலை 4மணி முதல் உழவர் சந்தையின் கேட்டை மூடிவிட்டு தென்னம்பாளையம் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தென்னம்பாளையம் உழவர் சந்தையில் முறையாக பதிவு செய்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
சாலையோரம் இருக்கும் கடைகளில் காய்கறி வாங்கி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது 2 நாட்கள் கடைகள் அமைக்காமல் இருக்கிறார்கள். இதன் பின்னர் மீண்டும் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலையோர வியாபாரிகள் கூறுகையில், உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
- ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு காசிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையைச் சேர்ந்த கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரான நிலையில் இருவரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு அவர்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து கிளை மேலாளார் அவர்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து கிளை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இருவரிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது அதிகாலை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் எங்கள் மீது அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கே வழிவகுக்கும்.
இது நாங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் ஏறும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இத்தகைய போக்கை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது.
- மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது. யானைகள் சில சமயம் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகிறது. இந்நிலையில் ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து சாலையில் நடுவில் நின்றது.
இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. யானை கூட்டத்தை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- திரைமறைவில் நடந்துள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.
தி.மு.க.-காங்கிரஸ் ஒரு அணியாக களம் காண உள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அந்த கட்சி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
அதே நேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள அ.தி.மு.க.வை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவலும் வெளியாகி இருக்கின்றன.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிகள் பா.ம.க. வலுவாக உள்ள தொகுதிகளாகும்.
இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியையும் கேட்டு பெற்று விடலாம் என்று பா.ம.க. கணக்கு போட்டுள்ளது.
இதன்காரணமாகவே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று அந்த கட்சி முடிவு எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதைய சூழலில் பா.ம.க. கேட்கும் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சிக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டு வரும் விரிசலும் பா.ம.க.வை யோசிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களாலேயே பா.ஜனதா கூட்டணியில் சேரும் முடிவை பா.ம.க. எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதே போன்று தே.மு.தி.க.வுடனும் தொகுதி பங்கீடு தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தையை பா.ஜனதா கட்சி நடத்தி முடித்திருப்பதாகவும், கூட்டணியில் 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு தொகுதி எது என்பது இன்னும் முடிவாகவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை கேட்டு பெற வேண்டும் என்பதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதுவும் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி, விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.வினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை வளர்ப்பதற்கு அது உதவும் என்றும் தே.மு.தி.க.வினர் நம்புகிறார்கள்.
இது போன்ற காரணங்களால் தே.மு.தி.க.வும், பா.ஜனதா கூட்டணியில் சேரும் முடிவை எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வும் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. திருச்சி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளன.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று தெரிகிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இருவருக்கும் எடப்பாடி பழனிசாமியே தற்போது பொது எதிரியாவார்.
பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட போவதாக இருவரும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதே இவர்களின் கணக்காக உள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா கூட்டணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இருவருமே உறுதியாக உள்ளனர்.
ஜி.கே.வாசனின் த.மா.கா., பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கும் தலா ஒரு இடங்களை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியும், ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர் தொகுதியும், ஜி.கே.வாசனுக்கு தஞ்சை தொகுதியும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இப்படி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியது போக மீதமுள்ள 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதோடு அ.தி.மு.க. பக்கம் எந்த கட்சிகளும் சேரவிடாமல் செய்துவிடலாம் என்பதே பாரதிய ஜனதா கட்சி போடும் திட்டமாக உள்ளது.
திரைமறைவில் நடந்துள்ள இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதுபோன்ற ஒருநிலை எட்டப்பட்டுவிட்டால் அடுத்த மாதம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட பிரசாரத்தை தொடங்கவும் பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது.
அடுத்த மாதம் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.
இதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற அதிரடியாக களம் இறங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
- அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது.
- பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம். வேலம்பட்டியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.
திருப்பத்தூர், வாணியம்பாடி, கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது. விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டது.
இதில் வீரர்கள் காளைகளை விரட்டி பிடிக்க முயறன்றனர். நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டன. பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எருதாட்ட விழாவை காண குவிந்தனர்.
விழாவிற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற காளையின் சொந்த காரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
விழுப்புரம்:
கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தி என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.
* கோயம்பேட்டில் வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்.
* பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
* கூட்டணி குறித்து பா.ம.க. நிறுவனர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.






