என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 60 சதவீத பத்திரங்களை மோடி கட்சிதான் பெற்றிருக்கிறது.
    • குஜராத்தில் போதை பொருளை தடுத்து நிறுத்தினால் இந்தியா முழுவதும் தடுக்கப்பட்டுவிடும்.

    விருதுநகர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தேதியை தீர்மானிப்பது யார்? தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தீர்மானிக்க வேண்டும். பிரதமரின் பிரசார வசதிக்கேற்ப தேர்தல் தேதி தீர்மானிக்கப்படுகிறது. சுதந்திரமான செயல்பாட்டை அது இழந்து விட்டது. உத்தரவுக்காக காத்திருந்து உத்தரவை அமல்படுத்துகிற அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது.


    ஏப்ரல் 19-ந்தேதி தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வாக்கு பெட்டியை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஆட்களை நியமிக்க வேண்டி இருக்கிறது. எட்டு மணி நேரத்திற்கு ஒரு ஆள் என்றால் ஒரு நாளைக்கு 3 பேர் வரை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்கு ஆகும் செலவை தேர்தல் ஆணையம் தான் ஏற்க வேண்டும் என்றார்.

    பின்னர் முத்தரசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: ஒரு மாநில கட்சியான தி.மு.க. தேர்தல் பத்திரத்தில் இவ்வளவு நிதி எப்படி என அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

    பதில்: அண்ணாமலை, மல்லாந்து படுத்துக்கொண்டு காரி துப்புகிறார். ஒரு கம்பெனி தொடர்ந்து 3 வருடங்கள் லாபத்தில் இயங்கினால் அதில் ஏழு சதவீதம் மட்டும் தான் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்ற விதியை மாற்றியது மோடியா? மு.க ஸ்டாலினா? ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை வாங்கலாம் என திருத்தம் கொண்டு வந்தது மோடியா, மு.க.ஸ்டாலினா? ரகசியமாக தேர்தல் பத்திரம் வழங்க ஏற்பாடு செய்தது யார்? மோடியா மு.க.ஸ்டாலினா? இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து வித்திட்டவர் மோடி.


    அவகாசம் கேட்ட ஸ்டேட் வங்கி, உச்சநீதி மன்றம் எச்சரிக்கை விடுத்ததும் உடனடியாக தேர்தல் பத்திர விவரங்களை வழங்கியது எப்படி? 60 சதவீத பத்திரங்களை மோடி கட்சிதான் பெற்றிருக்கிறது. அதை சட்டரீதியாக கொண்டு வந்ததும் மோடி கட்சி தான். ஏழைகளுக்கு வரி மேல் வரி விதிக்கிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைக்கப்பட்டது. இந்த சலுகைக்கான கைமாறாக பெற்றது தான் தேர்தல் பத்திரங்கள். தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றிருந்தனர். ஆனால், வட்டியும் செலுத்தவில்லை. அசலையும் செலுத்த வில்லை. பின்பு, வராக்கடன் எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள்.

    கேள்வி: போதை பொருள் பிரச்சினையால் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?

    பதில்: எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குஜராத்திற்கு தான் பிரச்சினை வரும். குஜராத்தில் உள்ள அதானியின் துறைமுகம் மூலமாகத்தான் இந்தியா முழுவதும் போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. யாரோ ஒருவர் ஜாபர் சாதிக் மாட்டிக் கொண்டார். அவர் சில காலம் தி.மு.க.வுடன் இருந்தார் என்பதாலேயே மட்டுமே தி.மு.க. மீது பழி போட முடியாது.

    2013-ல் இதே ஜாபர் சாதிக்கை பிடித்தனர், அப்போது இருந்தது யார் ஆட்சி? பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியா நடைபெற்றது, ஏன் அவரை அப்பொழுது விட்டார்கள்?

    குஜராத்தில் போதை பொருளை தடுத்து நிறுத்தினால் இந்தியா முழுவதும் தடுக்கப்பட்டுவிடும். அமலாக்கதுறையை வைத்து மிரட்டி மற்றவர்களை களங்கப்படுத்தி அதன் மூலம் பலன் பெற மோடி நினைக்கிறார்.

    பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுவார்கள்.

    கேள்வி: சமையல் எரி வாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு பற்றி?

    பதில்: வீட்டில் உபயோகிக்க கூடிய சிலிண்டரின் விலை 2014-ல் நானூறு ரூபாயாக இருந்தது. அது 1200 வரை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை ஏறும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது எனக் கூறினார். ஆனால் தற்பொழுது விலையை குறைக்க உத்தரவிட்டதாக கூறுகின்றனர். விலை ஏறியதற்கு சம்பந்தமில்லை எனக் கூறும் இவர்கள், தற்பொழுது மட்டும் விலையை குறைக்க உத்தரவிட்டதாக கூறுவது எப்படி?

    கேள்வி: கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறதே?

    பதில்: கருத்துக்கணிப்புகள், கிளி சோசியம் சொல்பவர், கைரேகை பார்ப்பவர், ஜாதகம் பார்ப்போர் என அனைவரும் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் எது சரி? எது தவறு? எனத தேர்தல் தீர்மானிக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது உண்மை தெரியும். மக்கள் மோடியின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கி றார்கள். மோடிக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, தேசியக்குழு உறுப்பினர் டி.ராமசாமி, மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டி, நகர செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர்.

    • அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
    • வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக புல்வெளிகள், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

    பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் மற்றும் செடிகளை நாசம் செய்தது.

    இது குறித்து அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது வெப்ப தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத் தீ பற்றி வருகிறது.

    அன்றாட நிகழ்வு போல் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவை இனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.
    • ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வலை பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களையும கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று அந்த பதிவின் மூலம் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.




    • விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
    • கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ந்தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் செல்வாக்கு பெற்ற இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த விஜயதரணி.

    இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினமா செய்தார். இதனை தொடர்ந்தே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் இங்கு யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி உறுதி என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மாவட்டத்தின் முக்கிய தலைவர்கள் டெல்லி மற்றும் சென்னையில் முகாமிட்டு முக்கிய தலைவர்களின் ஆதரவை பெற முயன்று வருகின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், ஜவகர்பால் மஞ்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் சீட் பெறுவதில் முனைப்பு காட்டி வரு கின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த தொகுதியில் மகளிர் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.

    எனவே விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருமான சர்மிளா ஏஞ்சல் உள்ளிட்ட பலரும் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளும் உள்ளதால் விளவங்கோடு தொகுதியில் வெற்றி உறுதி என்பதால், காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதியை பெறுவதில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. பாரதிய ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஜெயசீலனே மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் டொமினிக் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    கூடலூர்:

    தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

    தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி முடிந்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு 711 கன அடியில் இருந்து இன்று 105 கன அடியாக குறைக்கப்பட்டது.


    பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 83 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.35 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 417 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1202 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
    • திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்று உடன்பாடு காண்பதில் இன்று வரை இழுபறி நிலை நீடிக்கிறது.

    இதில் காங்கிரசுக்கு புதுச்சேரி ஒதுக்கப்பட்டுவிட்டது. கடந்த முறை போல் திருச்சி, விருதுநகர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் முதலில் கேட்டு இருந்தது.

    ஆனால் திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது. ஆனால் இதற்கு காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆனாலும் தி.மு.க. புதிதாக 2 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியது. அந்த புதிய தொகுதியில் சம்பந்தப்பட்ட எம்.பி.யை போட்டியிட சொல்லுங்கள் என்று கூறியிருந்தனர்.

    இதற்கு அந்த முக்கிய பிரமுகர் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் டெல்லியில் மேலிட தலைவர்களிடம் முறையிட்டுள்ளார். இந்த விஷயம் இப்போது ராகுல் காந்தி வரை சென்றுவிட்டது.

    இந்த நிலையில் இன்று மும்பை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை சந்திக்கும் போது திருச்சி, விருதுநகர் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பேசி முடிவு செய்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் அறிவாலயத்தில் நாளை காலை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என தெரிகிறது.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழு வதும் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது.


    ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வியாபாரி சசிகுமார் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு வெட்டுக்காடு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 3 லட்சம் பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் இன்று காலை பறக்கும் படையினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார்.


    அவரை நிறுத்தி சோதனை செய்தபோது 89 பட்டு புடவைகள், 6 சுடிதார், ஒரு நைட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.

    அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கஜேந்திர ராவ் என்பதும், திருமண வீட்டிற்க்காக ஈரோட்டிற்கு வந்து புடவைகள் வாங்கி சென்று மீண்டும் கர்நாடகா செல்வதற்காக ரெயிலில் ஏற வந்ததாக கூறினார்.

    ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரது புடவைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், புடவைகளை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் உதவி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
    • மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பை தாராவி வழியாக சென்று அம்பேத்கர் சமாதியான சைத்ய பூமியில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

    இன்று காலையில் ராகுல் காந்தி மும்பையில் நியாய சங்கல்ப் பாதயாத்ரா என்ற பெயரில் மணிபவன் முதல் ஆகஸ்டுகிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.


    இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.


    இதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார், கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

    • சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆனந்தா பிரிஜ் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 23). இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சஞ்சய் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×