என் மலர்
இந்தியா
- வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம்.
- வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் 6-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பூஜ்ய நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-
தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுவை, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகை களில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.
பல மாநிலங்களில் அவர்கள் சார்ந்த தாய் மொழி எழுத்துக்களில்தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர், தமிழ் பயன்படுத்த வேண்டும் என்றும், பிற மொழிகளுக்கான அளவு 5:3:2 என இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடைகளில் வைக்கப்படும் பெயர் பலகையில், தமிழ் மொழி பெரிய அளவிலும், ஆங்கிலம் மொழி சிறிய அளவிலும் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த விதியை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. இந்த விதியை பின்பற்றாத கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் கவிஞர்கள் மற்றும் பெரும்புலவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருகிறது. பிற மொழிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும், எழுத வேண்டும்.
வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும். அது நமது உணர்வு. இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல சிவாஜி மறு அவதாரம் எடுத்துள்ளார்
- பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முந்தைய பிறவியில் புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று என்று பாஜக எம்.பி. பிரதீப் புரோகித் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதீப் புரோகித், "பிரதமர் மோடி அவரது முந்தைய பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று ஒரு துறவி என்னிடம் கூறினார். பிரதமர் மோடி உண்மையிலேயே சத்ரபதி சிவாஜி தான் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அவர் மறு அவதாரம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டார் என்று பாஜக எம்.பி.க்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- 2026 தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அதிரடி வியூகம்
- திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் 32 ஆண்டுகாலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலதா ஆகியோரது அயராத பணியால் அ.தி.மு.க. என்ற ஆலமரம் ஆயிரம் காலத்து பயிராக மலர்ந்து உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை இன்றைக்கு வலிமையோடும், பொலிவோடும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். எடப்பாடயார் சாமானிய தொண்டனும் உச்ச பதவி அடையலாம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியை சுமார் நாலரை ஆண்டு காலம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடியார்.
வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களான அரசு பள்ளிகளில் படித்த மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித உள் இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஒரே ஆண்டில் 13 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைத்தும் சாதனை படைத்தார். நீர் மேலாண்மை பாதுகாக்க குடிமராமத்து உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தந்தவர் தான் எடப்பாடியார்.
ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரும்பும் திட்டமான தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மகளிருக்கு இருசக்கர வாகன திட்டம், கால்நடை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் .
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க மறுத்ததுடன், தி.மு.க. அரசு மக்களாட்சி தத்துவத்தையும் மறந்து மன்னர் ஆட்சியாக தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சியை செய்து வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், போலீசார் என்று யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் அத்துமீறல்கள், வழிப்பறி கொள்ளைகள், ஆதாய கொலைகள், போதை பொருள் நடமாட்டம் என்று அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.
எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசா ரம் நடந்து வருகிறது. இது வரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள்.
வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டுப் பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வார மும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்ச டிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கி வழங்கப்படுகிறது.
வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்று வார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும்.
வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
- ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.
சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.
ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.
இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.
பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-
எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.
- வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
- காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.
காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
- ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.
இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
- அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
- அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.
ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.
ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஆலங்குடி அருகே 2-வது நாளாக பதட்டம் நீடிப்பு.
- சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக மீண்டும் மோதல்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த லோகநாயகி அம்பாள் உடனுறை பாலபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்துவது சம்பந்தமாக 2 சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை அம்பாள் திருவீதி உலா நடைபெற இருந்த நிலையில் சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதனை தடுக்க சென்ற ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த இன்ஸ்பெக்டரை பார்த்து நலம் விசாரித்தனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோவிலூரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதல் காரணமாக இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கோவிலில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
- மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.
இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.
இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.
2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.
எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
- பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.
அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.
இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
- இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் சமீபகாலமாக அ.தி.மு.க. கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதேபோல் இன்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையில் கலந்து கொள்ளவில்லை.
நான்கு நாட்கள் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன், சட்டசபையின் 4-வது நாள் அமர்வில் பங்கேற்றுள்ளார்.
நேற்றைய தினம் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது. மேலும், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.






