search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு மருத்துவம்"

    • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
    • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

    பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

     முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

     கரும்புள்ளிகள் மறைய:

    வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

     முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

    முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

    இயற்கை அழகு சிகிச்கை:

    ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

    வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.
    • வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

    அறிகுறிகள்:

    · பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

    · வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

    · வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    · சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

    · வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

    · இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

    · பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

    · ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

    · அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    · தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

    · சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

    · அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

    · அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

    வெள்ளைபடுதலை தவிர்க்க

    · உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    · பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    · உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

    · நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வீட்டுமருத்துவம்

    * கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    * அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

    வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து

    நன்னாரி வேர் - 10 கிராம்

    அதிமதுரம் - 5 கிராம்

    காய்ந்த திராட்சை - 5 கிராம்

    மணத்தக்காளி விதை - 5 கிராம்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    காய்ந்த செம்பருத்திப் பூ - 5 கிராம்

    காய்ந்த ரோஜா இதழ் - 5 கிராம்

    சின்ன வெங்காயம் - 3

    நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.

    · சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.

    · மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப்போக்கை சரி செய்யும்.

    · ரத்தத்தை சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றி உள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.

    · உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    · மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.

    சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப்பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.

    உணவு முறை

    · அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.

    · உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    · உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    · தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * துயிலிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * சாணாக்கிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

    மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளைப்படுதல்  பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

    • கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது.
    • கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் உபயோகித்த ஆயுர்வேத பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை விரட்டி அடிக்கலாம்.

     துளசி:

    ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி, காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. அதன் சாறை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், சுவாசக் கோளாறுகளை போக்கவும் துணை புரியும். மேலும் மனஅழுத்தம், பதற்றம் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

     இஞ்சி:

    இஞ்சியில் நுண்ணுயிர் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை புண்ணுக்கு தீர்வு காண உதவும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது. இஞ்சி, தேன், துளசி இவை மூன்றையும் சேர்த்து கசாயம் தயாரித்தும் சாப்பிடலாம்.

     நெல்லிக்காய்

    இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களும் நெல்லிக்காயில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

     ஜிலோய்:

    ஆங்கிலத்தில் `ஜிலோய்', தமிழில் `அமிர்தவல்லி' என்று அழைக்கப்படும் இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் இது உதவும். சளி மற்றும் இருமலுக்கும் நிவாரணம் தரும். ஜிலோய் தண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பருகி வரலாம்.

     மஞ்சள்:

    இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகலாம். அது ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகை செய்யும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.

     அஸ்வகந்தா:

    தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவும், மன அழுத்தத்தை போக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் மூட்டு சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும். அஸ்வகந்தா மாத்திரைகள், பொடியை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். அதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

    • மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாகும்.
    • மூட்டுகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்க செய்யும்.

    எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். பொதுவாக வயதான பிறகு தான் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது வயதானவர்களை காட்டிலும் இளம் வயதினரையும் மூட்டு வலி பிரச்சினை விட்டுவைக்கவில்லை. தலைவலி வந்தால் மாத்திரை போட்டுக்கொள்வது போல் மூட்டு வலிக்கு அவ்வப்போது வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வதால் தற்காலிகமாக வலி குறையும். ஆனால் மூட்டு எலும்புகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்கச் செய்யும்.

    நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும் படிகளில் ஏறும் போதும் ஒருவித சத்தம் கேட்கும். இவைதான் தொடக்க கால மூட்டுவலியின் அறிகுறிகள். இதற்கு முன்னோர்கள் மூலிகை எண்ணெய் தைலத்தை காய்ச்சி பயன்படுத்துவார்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் தேய்த்து வந்தால் வலி குறைந்து மூட்டுகளின் உள் இருக்கும் ஜவ்வு பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்.

    எல்4, எல்-5, எஸ்-1 முதுகு தண்டுவட பாதிப்பு, டிஸ்க் பஞ்ச் ஆகிவிட்டது, முதுகு தண்டுவடப்பகுதியில் வலி அதிகமாக உள்ளது, என்னால் பாத்ரூம் கூட செல்ல முடியவில்லை என்று பலரும் புலம்புவார்கள். அவர்களுக்கு இந்த விராலி இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயாரிக்க முடியும். எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    விராலி இலை- ஒரு கைப்பிடி

    நல்லெண்ணெய்- 250 கிராம்

    செய்முறை:

    ஒரு இரும்பு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் இதில் ஒரு கைப்பிடி விராலி இலைகளை கழுவி விட்டு உலர்ந்த பிறகு அந்த எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக இலை காய்ந்து பிரவுன் கலர் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகப்படுத்த வேண்டும்.

    மூட்டுவலி இருக்கும் போது லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து வந்தால் வலி குறையும். தொடர்ந்து 10 நாட்கள் தேய்த்துவந்தாலே அதன் பலனை நன்றாக உணர முடியும்.

    • ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம்.
    • உதட்டுக்கு மேல் முடி முளைப்பது முக அழகையே கெடுத்து விடும்.

    உதட்டுக்கு மேல் முடி முளைப்பது பெண்களின் முக அழகையே கெடுத்து விடும். மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது இந்த முடியை நீக்க வேண்டுமென்று ரேசர் பயன்படுத்துவது, ஹேர் ரிமூவல் க்ரீம்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்வார்கள். ஆனால் ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம். அதோடு முடி வளர்ச்சியும் வேகமாகத் தூண்டப்படும். ஆனால் கீழ்வரும் சில இயற்கையான வழிமுறைகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உதட்டுக்கு மேலே உள்ள முடிகளை நீக்க முடியும்.

    வசம்பு

    அரை ஸ்பூன் வசம்பு பொடியை எடுத்து தண்ணீரில் திக்காக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்தும் போது உதட்டுக்கு மேலுள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும்.

    மஞ்சள்

    ஒரு ஸ்பூன் மஞ்சளை காய்ச்சாத பால் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி உதட்டுக்கு மேலே முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். அது நன்கு உலர்ந்ததும் தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் நிரந்தரமாக வளராமல் தடுக்க முடியும். இதற்கு சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் இரண்டுமே பயன்படுத்தலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.

    படிகாரம்

    படிகாரம் என்பது ஒருவகையான உப்புக்கல். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த படிகாரம் சருமத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும். ஆண்களும் ஷேவிங் செய்யும்போது இதை பயன்படுத்தலாம். ரேசர் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது.

    கல்போன்று கடினமாக இருக்கும் இந்த படிகாரத்தை இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவு படிகாரத்துடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேலே முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முதல்முறையிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்துவர வேகமாக உதட்டுக்கு மேலே உள்ள முடி நிரந்தரமாக உதிர ஆரம்பிக்கும்.

    சர்க்கரை

    சர்க்கரை ஸ்கிரப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிரந்தரமாக உதடு மற்றும் சருமத்தில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்க முடியும். ஆனால் சர்க்கரையை லேசாக நுணுக்கி பயன்படுத்துங்கள். பெரிய பெரிய துகள்களாக இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

    ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டின்மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு மெதுவாக விரல்களால் ஸ்கிரப் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் உதட்டுக்கு மேலே உள்ள மெல்லிய முடிகள் உதிர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வரும்போது நிரந்தரமான முடிகள் நீங்கும்.

    ஜெலட்டின்

    ஜெலட்டின் பீல் ஆஃப் மாஸ்க் போல செயல்படும். இதை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமம் நெகிழ்வுத் தன்மையோடு இருக்கும். அதோடு சருமத்திலுள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து சருமம் மென்மையாக மாறும். காசு கொடுத்து விலையுயர்ந்த மாஸ்க்குகள் வாங்கிப் பயன்படுத்துவதை காட்டிலும் இது சிறந்தது.

    ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு பழத்தின் சாறையும் சேர்த்து கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதை உதட்டின் மேற்பகுதியில் முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். சருமத்தில் அது நன்கு இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். பீல் ஆஃப் மாஸ்க் மாதிரி மெதுவாக பிரித்து எடுக்க அந்த ஜெலட்டின் மாஸ்க்கோடு சேர்த்து சின்ன சின்ன முடிகளும் வருவதை பார்க்க முடியும். இதை அடிக்கடி பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள முடிகள் நிரந்தரமான நீங்கும்.

    முட்டை

    சருமத்திலுள்ள முடிகளை நீக்குவதற்கும் சருமத்துக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கவும் முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது. இதை தொடர்ந்து மாஸ்க்காக சருமத்தில் அப்ளை செய்து வர மேல் உதட்டுக்கு மேலுள்ள முடி மற்றும் கன்னங்கள் என முகத்திலுள்ள மென்மையான முடிகள் நீங்கும்.

    ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை மேல் உதட்டின்மீது உள்ள முடிகளையும் முகத்திலுள்ள வேறு மெல்லிய முடிகளும் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் மென்மையாக விரல்களால் தேய்த்து ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

    • பருவநிலை மாறுவதால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.

    பருவநிலை மாறுவதால் பொதுவாக உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினசரி ஏற்படும் வானிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சி செய்தல், சரியான தூக்கம் ஆகியன உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகின்றன. சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த முடியும். மூலிகைகள், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராட உதவுகிறது.

    மழையும், வெயிலும் மாறி மாறி இருக்கும் இந்த சீசனுக்கு சளி, இருமல் வந்து அவதிப்படுகிறீர்களா? இதை செய்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை-1

    ஏலக்காய்-1

    மிளகு-5

    கிராம்பு-1

    தேன்- ஒரு ஸ்பூன்

    செய்முறை

    ஒரு இளம் வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையின் காம்பு பகுதி மட்டும், வால் பகுதியை கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதன் நடுப்பகுதியில் ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பீடா மாதிரி மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

    முதலில் சாப்பிடும் போது இனிப்பாக இருக்கும். சாப்பிட்டு முடிக்கும் போது தான் அதன் காட்டம் தெரியும். ஒரு நாளைக்கு ஒருதடவை என்று மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட நிச்சயம் சளி, இருமல் குணமாகும். வறட்டு இருமலாக இருந்தாலும், சளி இருமலாக இருந்தாலும் குணமாகும்.

    • சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்று.
    • தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும்.

    சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களால் உண்டாகும். குறிப்பாக வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும்போது அவை முதலில் பாதிப்பது சுவாச மண்டலத்தை தான். சுவாச மண்டலங்களில் தொற்றுக்கள் ஏற்படும் போதுதான் தீராத சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொற்று ஏற்பட்ட பிறகு மருந்து எடுத்துக் கொள்வதை விட ஆரம்பத்திலேயே உணவுகளின் வழியாக, இயற்கையான முறையில் சரிசெய்து கொள்ள முயற்சி செய்வது தான் நல்லது.

    * துளசியை இஞ்சியுடன் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து பின்னர் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர சளி, இருமல் தொல்லை சரியாகும்.

    * தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.

    * ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை, இரவு என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வர சளி, இருமல் கட்டுக்குள் வரும்

    * லவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. லவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் பலப்படும்.

    * லவங்கப்பட்டையின் பொடியுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டாலும் சளி, இருமல் பிரச்சினை குறையும்.

    * லவங்கப்பட்டை பொடியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளராக சுண்டவிட்டு டீயாக எடுத்துக் கொள்ளும்போது சளி, இருமல், காய்ச்சல் தீருவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * சீந்தில் பல நூறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த சீந்தில் கொடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல். வைரஸ் தொற்றுக்கள் பருவ கால தொற்று நோய்களை தீர்க்க முடியும்.

    * சீந்தில் கொடியின் சாறை உட்கொள்வதன் மூலம் பருவ கால தொற்றுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.

    ×