search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைவைத்தியம்"

    • ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
    • சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.

    நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.

    சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.

    எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.

     சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்

    சளி வந்தால் செய்ய வேண்டியவை:

    * சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

    சளியுடன் வரும் இருமலுக்கு:

    * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.

    * அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.

    சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:

    * திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.

    * தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

    மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:

    * தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.

    பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.

    கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.

    மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:

    * நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.

    * படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.

    சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:

    * சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.

    * அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.

    * கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.

    * தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.

    • கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது.
    • கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் உபயோகித்த ஆயுர்வேத பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை விரட்டி அடிக்கலாம்.

     துளசி:

    ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி, காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. அதன் சாறை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், சுவாசக் கோளாறுகளை போக்கவும் துணை புரியும். மேலும் மனஅழுத்தம், பதற்றம் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

     இஞ்சி:

    இஞ்சியில் நுண்ணுயிர் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை புண்ணுக்கு தீர்வு காண உதவும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது. இஞ்சி, தேன், துளசி இவை மூன்றையும் சேர்த்து கசாயம் தயாரித்தும் சாப்பிடலாம்.

     நெல்லிக்காய்

    இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களும் நெல்லிக்காயில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

     ஜிலோய்:

    ஆங்கிலத்தில் `ஜிலோய்', தமிழில் `அமிர்தவல்லி' என்று அழைக்கப்படும் இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் இது உதவும். சளி மற்றும் இருமலுக்கும் நிவாரணம் தரும். ஜிலோய் தண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பருகி வரலாம்.

     மஞ்சள்:

    இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகலாம். அது ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகை செய்யும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.

     அஸ்வகந்தா:

    தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவும், மன அழுத்தத்தை போக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் மூட்டு சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும். அஸ்வகந்தா மாத்திரைகள், பொடியை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். அதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

    • நம்முடைய முன்னோர்கள் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
    • மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர்.

    தலைவலி, கை, கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக்கூடிய சில உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த பொருட்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும் மருந்துகள் என்று தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்தனர்.

    வயிற்று வலி குணமாக சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.

    தலைவலி நீங்க ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் வைத்துக்கொண்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.

    நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.

    குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நெஞ்சில் சளி சேர்ந்துகொண்டு இருமல் அதிகமாகிவிடும். இந்த நெஞ்சு சளி கரைய சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சில் உறைந்துள்ள சளி கரையத்தொடங்கும்.

    பசி எடுக்க புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.

    வண்டுக்கடியால் ஏற்படு தடிப்புகள் மறைய வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சேர்த்து அரைத்த விழுது ஒரு கைப்பிடி எடுத்து ½ லிட்டர் பசும்பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம், வடு நீங்கும்.

    மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். அஜீரண கோளாறு இருக்கும் சமயங்களில் மிளகை வறுத்து பொடி செய்து தேனில் உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறால் ஏற்படும் சீதபேதி குணமாகும்.

    உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சுண்ணாம்பு இவற்றை உள்ளங்கையில் நன்றாக குழைத்தால் சூடாக இருக்கும். இந்த கலவையை அந்த சூட்டிலேயே தொண்டை பகுதியில் தடவி மறுநாள் காலையில் ஈரத்துணிகொண்டு துடைத்து எடுத்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாகும்.

    அதிமதுரத்தை பொடியாக்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து, இந்த நீரை குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.

    சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்கு காரணம் புரியாது. அதற்கு இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணெய்யை ஒரு பக்கம் தடவி, விளக்கில் லேசாக சூடு செய்து இளம்சூட்டில் குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.

    சிறு குழந்தைகளுக்கு வசம்பை ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்றி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.

    ×