search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sinus problem"

    • ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
    • சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.

    நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.

    சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.

    எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.

     சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்

    சளி வந்தால் செய்ய வேண்டியவை:

    * சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

    சளியுடன் வரும் இருமலுக்கு:

    * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.

    * அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.

    சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:

    * திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.

    * தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

    மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:

    * தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.

    பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.

    கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.

    மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:

    * நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.

    * படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.

    சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:

    * சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.

    * அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.

    * கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.

    * தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.

    • சைனஸ் என்பது மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும்.
    • அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

    சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.

     மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சினை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.

    நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    செய்முறை:

    முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.

    பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாசில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.

     இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். நிச்சயமாக சைனஸ் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    • எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
    • அதிமதுரம் ஒரு `நிதானமான’ மலமிளக்கி.

    * அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

    * அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் ரத்தம் நிற்கும்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

    * அதிமதுர வேர் பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்துவர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

    * குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை `அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்' எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

    * அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத்தொடங்கியிருக்கின்றன.

    * சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

    * சைனஸ் பிரச்சினை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தை சிறிதளவு சேர்க்கலாம்.

    * அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது.

    * பொதுவாக அதிமதுரம் ஒரு `நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.  ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

    * அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

    * அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

    * வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கடந்த காலங்களை விட தற்போது சுற்றுப்புறச் சூழல், பொருந்தாத உணவுகள், உடல் உழைப்பற்ற வாழ்வு போன்றவற்றால் ஏற்படும் வாழ்க்கை முறை சார்ந்த பாதிப்புகளால் வரும் நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதில் சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் என்பது முக எலும்புகளில் இருக்கும் காற்று குழியறைகளில் உருவாகும் பாதிப்பாகும். சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து மதுரை செல்லூர் பழனியாண்டவர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கண்ணப்பன் விளக்குகிறார்.

    சைனஸ்

    சைனஸ் என்பது முகத்தின் எலும்பு அமைப்பில் இருக்கும் வெற்றிடமான குழியறைகள் ஆகும். முகத்தில் இரண்டு பக்கங்களிலும் தலா இரண்டு குழியறையாக நான்கு சைனஸ் குழியறைகள் உள்ளன. இந்த குழியறைகளை மூக்குடன் இணையும் வகையில் பாதை அமைப்பு உள்ளது. மூக்கு மற்றும் சைனஸ் குழியறைகளுக்கு காற்றும், மியூகஸ் எனப்படும் சளி, திரவம் போல் காணப்படும். இந்த பாதையில் ஒரு மெல்லிய சவ்வுப்படலம் காணப்படுகிறது.

    மூக்குப்பகுதியை பாதிக்கும் எந்த ஒரு நோய்த் தொற்றும் இந்த சவ்வுப் படலத்தை தாக்கி, சைனஸ் பகுதியை தாக்குகிறது. நோய்க்கிருமிகள் தாக்கும்போது சைனஸ் குழியறைகளில் ஏராளமான சளி உருவாகி அந்த குழியறையை காற்று சென்று வெளியேற வழியின்றி அடைத்துக்கொள்கிறது. இந்த நிலையில், சைனஸ் குழிகளின் சுவற்றில் ஏற்படும் அழுத்தத்தால் வீக்கம் ஏற்படும், அப்போது அது முகம் சார்ந்த பகுதிகளில் கடுமையான வலியை உருவாக்கும். பொதுவாக, இது போல் சைனஸ் குழியறைகளில் ஏற்படும் நோய்த் தொற்று மற்றும் வலியை “சைனஸ் பாதிப்பு“ என்கிறோம்.

    அறிகுறிகள்

    சைனஸ் பகுதியில் ஏற்படும் திடீர் பாதிப்பை “அக்யூட் பாக்டீரியல் ரைனோசைனசைட்டிஸ்“ என்றும் நீண்ட நாட்களாக காணப்படும் பாதிப்பை “க்ரோனிக் ரைனோசைனசைட்டிஸ்“ என்றும் பிரிக்கிறோம். இதில், திடீர் சைனஸ் பாதிப்பு 4 வாரங்கள் வரை நீடிக்கும். நாள்பட்ட பாதிப்பில் முகத்தில் வலி, கண் எரிச்சல், சைனஸ் அறை இருக்கும் முகத்தின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தம், மூக்கடைப்பு, சளி ஒழுகுதல், காதுவலி, காதுகளில் அழுத்தம் உள்பட சில அறிகுறிகள் காணப்படும். இந்த நிலையானது 12 வாரங்கள் வரை நீடிக்கலாம். சிலருக்கு நாள்பட்ட சைனஸ் பாதிப்பில் நோய் மங்கியது போல் காணப்படும். ஆனால், தலைபாரம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு வாயில் துர்நாற்றம், தொண்டையில் தொடர்ந்து சளி இறங்குதல் போன்றவையும் காணப்படுகின்றன.

    சிகிச்சை முறை

    ஒருவருக்கு சைனஸ் பாதிப்பு அக்யூட் ரைனோசைனசைட்டிஸ் என்ற திடீர் சைனஸ் பாதிப்பில் காணப்படும் தலைவலி, மூக்கடைப்பு, கண்ணைச் சுற்றி வலி போன்ற அறிகுறிகளுக்கு நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து மாத்திரைகள் மற்றும் மூக்கடைப்பை நீக்கும் ஸ்பிரே ஆகியவை தரப்பட்டு நோயின் தீவிரம் தணிக்கப்படுகிறது.



    இதுவே, க்ரானிக் ரைனோசைனசைட்டிஸ் என்ற நாள்பட்ட சைனஸ் பிரச்சினைக்கு சைனஸ் அறைகளை அடைத்துள்ள சளியை நீக்கி சுத்தப்படுத்த எளிய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சைனஸ் பாதிப்பை பொறுத்தமட்டில் நோய்க்கிருமிகள் எந்த அளவு மூக்கு மற்றும் சைனஸ் பகுதியை பாதித்துள்ளன என்பதை கண்டறிய டயாக்னாஸ்டிக் நாசல் என்டாஸ்கோபி பரிசோதனையும், சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டு சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.

    நோய் தீவிரம்

    பொதுவாக, சைனஸ் பாதிப்பை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மூக்கில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனை “நாசல் பாலிப்ஸ்“ என்கிறோம். இந்த சதை வளர்ச்சி தொடர்ந்து மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். மூக்கின் மேல் பகுதியில் ஏற்படும் இந்த சதை வளர்ச்சியால் நாளடைவில் இங்கு காணப்படும் நோய்த்தொற்றுகள் மூளைக்கு பரவி அங்கு சீழ் பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    இதேபோல், கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய திரைப்படலம் மட்டுமே காணப்படுகிறது. இந்த நோய்க்கிருமிகள் தீவிரமடையும் போது இந்த திரையையும் தாண்டி நோய்க்கிருமிகள் கண்ணை பாதிக்கிறது. இதனால் மூக்கும் கண்களும் இணையும் இடத்தை ஒட்டிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு கண்களை ஒட்டிய பகுதிகளில் சீழ் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், நாள்பட்ட சைனஸ் பாதிப்பால் மூக்கு மற்றும் கண்களுக்கு இடையில் காணப்படும் சிறிய மெல்லிய எலும்பையும் தாக்கி அரிமானத்தை ஏற்படுத்துகிறது.

    தடுப்பு முறை

    இன்றைக்கு குழந்தைகளிடத்தில் கூட சைனஸ் பாதிப்பு அறிகுறிகளை காண முடிகிறது. சைனஸ் பாதிப்பில் கிருமிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். சத்தான மற்றும் பருவ நிலைக்கு தகுந்த உணவுகள், உடற்பயிற்சி, உணர்ச்சி வசப்படாத மனநிலை, சுத்தமான சுற்றுப்புறம் ஆகியவை உடலை செம்மையாக வைத்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் சிறிய பாதிப்புகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது பல சிக்கலான பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்க்கும்.

    கண்ணப்பன்
    ×