search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முளைப்பாரி"

    • தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
    • ஆடி மாதம் மிக சிறப்பானது.

    பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது

    அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன

    வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்

    பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்

    ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்

    முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை

    மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது

    முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.

    • விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. 8-ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து 9-ம் நாளில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. 10-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டி விழா நிறைவு பெற்றது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள்.
    • ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள்.

    நம்மூர் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றால் திருவிழாக்களில் பெண்கள் முளைப்பாரி சுமந்து வலம் வருவதை பார்த்திருப்போம். பெரும்பாலும், நவதானிய விதைகளை கொண்டு தான் முளைப்பாரி அமைப்பார்கள்.

    கன்னிப்பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி தூக்கினால் நல்ல கணவன் கிடைக்கும், குடும்பத்தில் செல்வம் பெருகும், அம்மன் அருளால் கொடிய நோய்கள் நீங்கும் என்று பலதரப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் ஊர்புற வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    இந்த முளைப்பாரி எடுக்கும் சடங்கிற்கு உண்மையான காரணமே வேறு. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

    விவசாயத்திற்கு பயிரிடும் விதைகளை நேரடியாக விளை நிலத்தில் விதைக்காமல் தனியாக வீட்டிலேயே ஒரு கூடையில் மட்கிய குப்பைகளோயிட்டு இளம்வெயில் படும்படி வைப்பார்கள். பத்து நாட்கள் தண்ணீர் தெளித்து விதையின் வளர்ச்சியை பார்த்தனர்.

    இவ்வாறு முன்கூட்டியே விதைகளின் முளைப்புத்திறன், வளர்ச்சித்திறன் ஆகியவற்றை பரிசோதனை செய்து பிறகு நிலத்தில் விதைக்கும் வழக்கம் கொண்டார்கள். அதனால், ஏக்கர் கணக்கில் விதைத்து நஷ்டமடையாமல் காத்துக்கொள்ள முடிந்தது.

    இதுவே பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள். அதில் ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டின் மகசூலை தோராயமாக கணித்தார்கள்.

    இப்படி ஒரு நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது தான் இந்த முளைப்பாரி. இன்று அது முழுக்க முழுக்க வழிபாடு சம்பந்தபட்டதாகி விட்டது.

    • நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு.
    • அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.

    நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம். அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.

    • பக்தர்கள் முக்கிய வீதி வழியாக கரகம் காவடி பால்குடம் கோவிலை வந்தடைந்தனர்.
    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு தீராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் (மே) 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை யொட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மாலையில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் வீதிஉலா தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள்பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து செய்திருந்தனர்.


    • ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    • இதில் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் பச்சமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல குழந்தைகள், பெண் கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்க கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பொட்டல்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    • காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
    • 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடந்தது. இதில் 300-க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் பாட்டு பாடி, கும்மி அடித்தனர். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.

    • தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • தேங்காய் உடைத்து பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மறவர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல்வேறு வகையான போட்டியிலும் நடைபெற்றது.

    மேலும் செல்லியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடலாடி ரோட்டில் உள்ள முலைக்கொட்டும் திண்ணையில் இருந்து காந்தி சிலை பஸ் நிலையம் வழியாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் கோவிலுக்கு முளைப்பாரியுடன் வந்தனர்.

    பின்பு செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால் பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முளைப்பாரியை சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை கடலாடி ரோட்டில் உள்ள வசிக்கும் மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு முளைப்பாரி விதை போட்டு வளர்த்து வந்தனர். தினமும் கோவில் முன்பு பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். இந்த நிகழ்ச்சி 9 நாட்களும் தொடர்ந்து நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா நடந்தது. கோவிலில் இருந்து கிளம்பிய முளைப்பாரி ஊர்வலம் மேலரதவீதி, வடக்கு ரதவீதி, சிவன் கோவில், வீரபத்திரர்கோவில், கோரக்கநாதர் கோவில் வழியாக மாரியம்மன் கோவில் சென்றது.

    பின்பு அதே வழியாக வந்து தினசரி மார்க்கெட், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, நரிக்குடி ரோடு வழியாக திருப்புவனம் பழையூர் காமாட்சியம்மன் கோவில் வரை சென்று பின்பு ஊருணியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சமத்துவ முளைப்பாரி விழா நடந்தது.
    • 7 நாட்களும் இரவில் ஒயிலாட்டம், கும்மி பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று 7 நாட்களும் இரவில் ஒயிலாட்டம், கும்மி பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு முளைப்பாரி வளர்க்கும் இடத்தில் இருந்து எடுத்துச் சென்று பெண்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். காலை முதல் இளைஞர்கள் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து நீர் நிலையில் கரைத்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தியாகவன்சேரி அனைத்து சமுதாய தலைவர்கள், இளைஞர்கள், மகளிர் அணியினர் செய்தனர்.

    • வாடிப்பட்டியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    • பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், த.மா.கா வட்டாரத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் வ.உ.சி. 151-வது பிறந்தநாள் விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். யூனியன் ஆபீஸ் பிரிவிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், ஆட்டோ நிறுத்தம் வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த வ.உ.சி. சிலை முன்பு முளைப்பாரி வைத்து வழிபாடு செய்தனர்.

    சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் பொன்னையா, பாபநாச மாரியப்பன், நாகமுத்து ராஜா, விக்கி ராம்மோகன் முன்னிலை வைத்தனர். செயலாளர் செந்தில் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்தி, த.மா.கா வட்டாரத் தலைவர் பாலசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சந்தனபாண்டி நன்றி கூறினார்.

    • மானாமதுரை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்த முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசளை கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல்திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழவும் முத்துமாரி அம்மனை வேண்டி இந்த முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தனர் . இதனைத் தொடர்ந்த கிராம இளைஞர்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட கிடா வெட்டி, சூப்பு தயாரித்து கிராம மக்களுக்கு வழங்கினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×