search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்குதல்"

    • ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.
    • கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது42). ரமணய்யா (38). தொழிலாளர்கள். ரமேஷ் மரங்களை வெட்டி அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இன்று காலை ரமேஷ் வேலைக்காக ரமணய்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சின்ன புலியூர் அருகே உள்ள ஒரு தைலம் மர தோட்டத்திற்கு மரத்தைப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது ஏற்கனவே அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து கிடந்தது.

    இதனை அறியாமல் சென்றபோது ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், கவரப்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காற்றுடன் மழை பெய்து இருக்கிறது.

    இந்த நிலையில் அதிகாலை மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து விழுந்து உள்ளது. இதனை கவனிக்காமல் சென்றபோது அதில் சிக்கி ரமேசும், ரமணய்யாவும் பலியாகி விட்டனர்.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்களில் உள்ள வயர்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதனை சரிபார்த்து மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் 3 பேரும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம், தோப்பு விளையில் வசித்து வரும் டெம்போ ஓட்டுநர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள் ஆதிரா (23) மற்றும் மகன் அஸ்வின் (19) ஆகிய மூவரும் நேற்று வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    தனது குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (47). இவர் நேற்று மாலை வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொாண்டிருந்தார்.

    அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுவிட்ச் ஆப் செய்ய சென்ற வசந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதை தொடர்ந்து கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன்-வசந்தி தம்பதிக்கு யுவஸ்ரீ(20) என்ற மகளும், விக்னேஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.

    • அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.
    • வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்களாபட்டி பெரியார்காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 34). இவர் பெரியகுளம் நகராட்சி கழிவுநீர் நீருந்து பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமாவதி (30). இவர்களுக்கு லக்ஷன் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

    அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். நேற்று இப்பகுதியில் பலத்த மழை பெய்தநிலையில் வயல் பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஹேமாவதி வயலில் தேங்கிய தண்ணீரை அகற்ற சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதை பார்த்த அவரது கணவர் தனது மனைவியை காப்பாற்ற சென்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வேலம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (44). இவர் அவல்பூந்துறை உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ஓயர்மேனாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவல் பூந்துறை-ஈரோடு சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் நிற்காததால் வந்த புகாரை தொடர்ந்து குணசேகரன் அங்கு பழுதினை சரி செய்ய அவருடன் பணியாற்றும் கம்பியாளரான பழனிசாமி என்பவருடன் சென்றார். குணசேகரன் சோளிபாளையம் பெட்ரோல் பங்க் அருகே 30 அடி உயரமுள்ள இரும்பு மின் கம்பத்தில் ஏறிய பழுதினை சரி செய்து கொண்டார்.

    அப்போது குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி குணசேகரன் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த பழனிசாமி உதவி செயற்பொறியாளர் சென்னிகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குணசேகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதிமூலம் குளித்துவிட்டு மின்விசிறியை போடுவதற்காக சுவிட்சை போட்ட பொழுது மின்சாரம் தாக்கியது.
    • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது58) கொத்தனார். இவர் தண்டையார்பேட்டை விநாயகபுரம் 9-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் 2 ஆண்டுகளாக மனைவி, மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஆதிமூலம் குளித்துவிட்டு மின்விசிறியை போடுவதற்காக சுவிட்சை போட்ட பொழுது மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார். வீட்டில் இருந்த அவரது மகள் அவரை உடனடியாக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆதிமூலம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது பற்றி காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர்.
    • சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். அந்த சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.

    இதற்கிடையே அந்த சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் திணித்து குழந்தை விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கியது. இதில் சானித்யா பரிதாபமாக உயிரிழந்தாள்.

    • டெம்போவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது மின் வயர் விழுந்தது.
    • மின்வயர் அறுந்து விழுந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரியில் இருந்து வடசேரி நோக்கி டெம்போ ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. வடசேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டெம்போவின் மேல் பகுதி அந்த வழியாக சென்ற மின் வயர் மீது உரசியது.

    இதில் மின் வயர் அறுந்தது. டெம்போவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது மின் வயர் விழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கூச்சலிட்டனர்.

    மின்வயர் அறுந்து விழுந்தபோது தீப்பொறியும் கிளம்பியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த தாய்-மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்தனர். அவர்களது இருசக்கர வாகனம் அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையின் மீது விழுந்தது. அறுந்து விழுந்த மின்வயரில் தொடர்ந்து மின்சாரம் வந்து கொண்டிருந்தது.

    இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரோட்டில் மின் வயர் அறுந்து கிடந்ததையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் ஏராளமான பொது மக்களும் திரண்டனர்.

    மின்வயர் அறுந்து விழுந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.

    பின்னர் போக்குவரத்து சீரானது. அறுந்து விழுந்த மின் வயரை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்வயரை அறுத்துவிட்டு நிற்காமல் சென்ற டெம்போவை போலீசார் தேடி வருகிறார்கள். மின்வயர் மேலே அறுந்து விழுந்ததும் தாய்-மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் வடசேரியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாதவன் குரோம்பேட்டை பகுதியில் தங்கியுள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக வந்து அங்கு தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.
    • நேற்று மாலை காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு அவர் சென்றனர்.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (23). இவர் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை, குரோம்பேட்டை பகுதியில் தங்கியுள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக வந்து அங்கு தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு அவர் சென்றனர். அப்போது அவரது பனியன் வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பியில் விழுந்திருந்தது அதை எடுப்பதற்காக மாதவன் 5 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    • பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
    • பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் முகேஷ், ரூபேஷ் (வயது15). இவர்களில் ரூபேஷ் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரூபேஷ், வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை அறியாமல் ரூபேஷ் மின்கம்பத்தை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரூபேஷ் இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான ரூபேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மீஞ்சூர் -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்கம்பம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்‌ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி அகுஜா (வயது 34). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் சண்டிகர் செல்வதற்காக புதுடெல்லி ரெயில் நிலையம் வந்தார்.

    டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்ததன் காரணமாக பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. ரெயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெயில் நிலையம் வந்த சாக்ஷி அகுஜா மழை நீரில் மிதிக்காமல் இருக்க அதன் அருகே உள்ள மின்கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில் பலியான சாக்ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் ஜோப்ரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களில் போதிய வசதி இல்லை. ஆனால் வந்தே பாரத் ரெயில்கள் விடுவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் எனது மகளுக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. எந்த ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவர்களோ, போலீசாரோ அங்கு இல்லை. 40 நிமிடங்கள் கழித்தே ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எனது மகள் இறந்து விட்டாள். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நமது அமைப்புகள் எதுவும் மேம்படவில்லை. ஆனால் வந்தே பாரத் போன்ற உயர்தர ரெயில்களை உருவாக்கி வருகிறோம். அதே நேரம் ரெயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இதற்காக சட்டப் போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×