search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம் உயர்வு"

    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பெரியார் திடலில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையிலும் புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மு. பரஞ்சோதி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான்.
    • தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை.

    வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு.

    32 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், நன்மைகளும் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க.தான்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஏரியில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து அவர்களுக்கு உதவியது அ.தி.மு.க.

    ஈசூர், வள்ளிபுரம், வாயலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரத்தில் தடுப்பணை கட்டி உள்ளோம்.

    அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் பாசனம் அமைத்து கொடுத்து உள்ளோம்.

    தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகளை மூடியவர்தான் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருந்தது என்று அதை வாங்கிய மக்களுக்கு தெரியும். ஒழுகிய வெல்லமும், இலவம் பஞ்சு கொட்டையும்தான் பொங்கல் தொகுப்பில் இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லி மக்களையும், மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்றியது.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். இன்றைக்கும் நீட் தேர்வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 569 மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். போதைப் பொருள் புழக்கத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தி.மு.க. அரசு தடுக்க தவறி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான் நடக்கிறது. போதைப் பொருளை தடுக்காமல் தமிழக காவல் துறை தூங்குகிறதா? போதைப் பொருளை விற்பனை செய்வதே தி.மு.க.வினர் என்பதால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

    ஆன்லைன் ரம்மியை சட்ட ரீதியாக தடை செய்தது அ.தி.மு.க. அரசுதான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய 15 மாதங்களாக குழு மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய யாராவது மக்களிடம் கருத்து கேட்பார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அேமாகமாக நடக்கிறது.

    தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து உதவியது அ.தி.மு.க. ஆனால் முதியோர் உதவித்தொகையை தடுத்து அவர்களை திமு.க. வஞ்சித்து வருகிறது. 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும் தமிழகத்தில் குறைக்காதது ஏன்?

    அ.தி.மு.க. நன்றாக இருக்கிறது. யாரும் அறிவுரை கூற தேவை இல்லை. தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விவசாயி நான். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சி, கட்சியை அம்மா வழியில் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு கிழக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக பிரமாண்ட மேடை போடப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதாசம்பத், தண்டரை மனோகரன், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குமரவேலு, நகர செயலாளர் ரவிக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கட்சி மாவட்டங்கள் 9 உள்ளன. இதன்படி 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என். ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கமலக்கண்ணன், சாமிநாதன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சேக்கலி, சைதை சுகுமார் மற்றும் வெற்றிவேல், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வைகுண்டராஜன், இனியன், மாவட்ட, வட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நிர்வாகிகள் கணேசன், சீனிவாச பாலாஜி, நித்யானந்தம், வியாசை இளங்கோ, பாஸ்கர், ஜனார்த்தனன், சேவியர், லயன் ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் செம்பியம் மின்சார அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமங்கலம் மோகன், கோகுல், சாரதி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். ராயபுரம் மனோ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் துறைமுகம் எம். பயாஸ், ஆவின் அருள் வேல், எம். கண்ணன், எம்.சரவணன், எம்.பத்மநாபன், கே. பாலசுப்பிரமணியம், வெற்றிலை மாரிமுத்து, சந்தான கிருஷ்ணன், அருள்வேல், கண்ணன், சரவணன், சுரேஷ்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் தி.நகரில் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா கலந்து கொண்டார்.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், எம்.கே.சிவா, புஷ்பா நகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் பட்டாளத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூரில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் போரூர் காரம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    திருப்பூரில் குமரன் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் இன்று காலை முதலே மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    நீலாம்பூர்:

    கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர்.

    இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர்.

    மேலும் தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு, குறு தொழில் பிரிவிலிருந்து விசைத்தறியை தனியாக பிரித்து தனி வகைப்படுத்தப்பட்டு மின் கட்டணம் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் இன்று காலை முதலே மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தால் அதில் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது நேரடியான முதலாளிகளாக அல்லாமல் பாவு நூலை பெற்று அதனை கூலிக்கு மட்டுமே நெய்து தரக்கூடிய வகையில் விசைத்தறியாளர்கள் செயல்பட்டு வருகிறோம்.

    இதன் காரணமாக பெரிய அளவில் வருமானம் இல்லாத சூழலில் தொழில் செய்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு என்பது கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலும் நிலவுகிறது. எனவே அரசு விதித்துள்ள 30 சதவீத மின்கட்டணத்தையும், ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வையும் முழுமையாக திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதி மக்களிடம் மட்டுமே தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தியது.
    • அக்கூட்டத்தல் 90 சதவீத மக்கள் மின் கட்டண உயர்வு குறித்து கடுமையாக எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எண்ணங்களை, கோரிக்கைகளை புறக்கணித்து மின் கட்டண உயர்வை அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதி மக்களிடம் மட்டுமே தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தல் 90 சதவீத மக்கள் மின் கட்டண உயர்வு குறித்து கடுமையாக எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    இருந்த பொழுதிலும் சம்பிரதாயத்திற்காக கருத்து கேட்பு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, மின் நுகர்வோர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி, தற்பொழுது கட்டண உயர்வு அறிவிப்பை அறிவித்து இருக்கிறது. அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த மக்களுக்கு இச்செயல் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    வாக்குறுதிகளை அளித்து வெற்றிப்பெற்று, அவற்றை நிறைவேற்றாமல் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசையும், தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தையும் கண்டித்து, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக, மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி எனது தலைமையில் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

    தமிழ் மாநில காங்கிரஸ், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், இயக்க நண்பர்கள், பொது நல இயக்கங்கள் மற்றும் தொழில் நிறுவனத்தை சார்ந்தவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம்.
    • சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர்.

    சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.

    இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

    எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.

    உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். இது வழக்கமான நடைமுறை தான். கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை.

    2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும்.

    உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • மின் கட்டண உயர்வு விவகாரத்தில் யாரேனும் மேல்முறையீடு மனு செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
    • தமிழக நூற் பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து நேற்று முன்தினம் அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும்' என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை தனி நீதிபதி அமர்வு, ''தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு செய்யக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்'' என உத்தரவிட்டிருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை பிறப்பித்தது.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான குமணன் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'தமிழக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்' என தெரிவித்துள்ளார். இதே போல் தமிழக நூற் பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்பட உள்ளது.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒரு முனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக கூடுதலாக ரூ.5,200 வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும்.

    வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண உயர்வு விபரம் வருமாறு:-

    பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு கட்டணம்-ரூ.200 (ரூ.100), இணைப்பு கட்டணம்-ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு-ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம்-ரூ.2,800 (ரூ.1400), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.5050 (ரூ.2800) அதாவது ரூ.2 ஆயிரத்து 250 உயர்த்தப்பட்டுள்ளது.

    மும்முனை மின் இணைப்பு பெறுவதாக இருந்தால் ரூ.6600 செலுத்த வேண்டும். பழைய கட்டணம் ரூ.5,150. அதாவது ஆயிரத்து 450 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒரு முனை மின் இணைப்புக்கு பதிவுகட்டணம் ரூ.200 (ரூ.100), இணைப்பு கட்டணம் ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம் ரூ.7000 (ரூ.5000), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.9,250 செலுத்த வேண்டும். பழைய கட்டணம் ரூ.6,400. அதாவது ரூ.2,850 உயர்த்தப்பட்டு உள்ளது.

    மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.9,600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பழைய கட்டணம் ரூ.6,650 தான். அதாவது 2 ஆயிரத்து 950 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அவ்வாறு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒரு முனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக கூடுதலாக ரூ.5,200 வசூலிக்கப்படும்.

    மும்முனை மின் இணைப்பாக இருந்தால் ரூ.7,100 கூடுதலாக வசூலிக்கப்படும்.

    வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் விநியோக பகுதியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மீட்டர் பழுதானாலோ, எரிந்து போனாலோ மீட்டரை மாற்றும் கட்டணம் ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மும்முனை மின் இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    உயர் அழுத்தப் பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    நல்ல நிலையில் இருக்கும் ஒரு முனை மின் இணைப்பு மீட்டரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி வைப்பதற்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    எரிந்தோ பழுதுபட்டோ போகும் மின் மீட்டர்களை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    தற்காலிகமாக மின் இணைப்பை இடம் மாற்றி வைப்பதற்கான கட்டணமும் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் மின் வாரியம் கையாளும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் கருத்தை பரிசீலித்து வந்த நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். அதேபோல் குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது.

    இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதிய நிலையில் கடந்த ஜூலை மாதம் புதிய மின் கட்டண உயர்வு தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதாவது வீடுகளுக்கான மின்சார கட்டணம் மாதம் ரூ.27.50 முதல் ரூ.565 வரை உயர்த்தப்பட்டது.

    அதன்படி 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50 உயர்த்தப்பட்டது. மொத்த மின் நுகர்வோரில் இந்த பிரிவினர் தான் அதிகம். 63.35 லட்சம் வீடுகளில் 200 யூனிட் வரைதான் மின் பயன்பாடு உள்ளது.

    300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.72.50, 400 யூனிட்டுகள் வரை மாதம் ரூ.147.50, 500 யூனிட்டுகள் வரை மாதம் ரூ.297.50, 600 யூனிட்டுகள் வரை ரூ.155, 700 யூனிட்டுகள் வரை ரூ.275, 800 யூனிட்டுகள் வரை ரூ.395, 900 யூனிட்டுகள் வரை ரூ.565 என்று உயர்த்தி அமைத்தனர்.

    இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    பொதுமக்கள் தரப்பில் கட்டண உயர்வுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஒரேயடியாக 26 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சதவீதத்தை 10 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் சாதாரணமாக 500 யூனிட்டுகள் வரை பயன்பாடு இருக்கும் என்பதால் மாதம் ரூ.297.50 உயர்த்தப்படுவதை பாதியாக குறைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    பொதுமக்களின் கருத்தை பரிசீலித்து வந்த நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். அதேபோல் குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    இனி 2 மாதம் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.27.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.72.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.145 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.147.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.295 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.297.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.595 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    600 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் ரூ.155 வீதம் 2 மாதத்துக்கு ரூ.310 கூடுதல் செலுத்த வேண்டும்.

    700 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.275 வீதம் 2 மாதத்துக்கு ரூ.550 கூடுதலாக வசூலிக்கப்படும்.

    800 யூனிட்டுகள் பயன்படுத்தினால் மாதம் ரூ.395 வீதம் 2 மாதத்துக்கு ரூ.790 கூடுதல் கட்டணம் கட்ட வேண்டும்.

    900 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.565 வீதம் ரூ.1130 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது மற்றும் மின்மானியம் வழங்குவது ஆகியவற்றை விரும்பாதவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய கட்டண உயர்வு அடுத்த 5 ஆண்டுகள் (2026-27) வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


    யூனிட்டுகள்வீடுகள் எண்ணிக்கை
    கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு)
    2௦௦ வரை
    63.35 லட்சம்
    ரூ.55

    3௦௦ வரை

    36. 25 லட்சம்

    ரூ.145
    4௦௦ வரை

    18.82 லட்சம்

    ரூ.295
    5௦௦ வரை
    10.56 லட்சம்

    ரூ.595

    6௦௦ வரை
    3.14 லட்சம்

    ரூ. 310

    7௦௦ வரை
    1.96 லட்சம்

    ரூ.550

    8௦௦ வரை
    1.26 லட்சம்

    ரூ.790

    9௦௦ வரை
    84 ஆயிரம்

    ரூ.1130


    • மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மின் கட்டண உயர்வு குறித்து சிறு,குறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    அந்த கோரிக்கைக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் விரைவில் தகவல் வெளிவரும். மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
    • தமிழக வரலாற்றில் ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். தமிழக வரலாற்றில் ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    மத்திய அரசுக்கு மின் கட்டண நிலுவை தொகை ரூ.70 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசு கொடுக்க வேண்டிய பில் தொகை தாமதம் ஆகும்போது மத்திய அரசு தடை ஏற்படுத்துகிறது.

    ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை பலவற்றில் நிலுவை உள்ளது. அவற்றை எல்லாம் உரிய காலத்தில் கொடுப்பதில்லை.

    மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட அமைப்பு. அதன் அதிகாரங்களை பறிக்க கூடிய செயலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இதற்காகத்தான் பாராளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

    மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம், கபட நாடகம் என்று கூறும் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதும் கபட நாடகமா என்பதை விளக்க வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களின் மின் கட்டணத்தையும், இங்குள்ள மின் கட்டணத்தையும் பார்த்து விட்டு அவர் பேச வேண்டும்.

    இவை குறித்து பலமுறை கேட்டும் அண்ணாமலை பதில் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.

    அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    முதலில் கோவையில் பொது மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.

    சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

    காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மின்சார வழங்குமுறை ஆணைய தலைவர் சந்திர சேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் தொடங்கியது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி மின்கட்டணத்தை உயர்த்த எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கருத்து கேட்பு கூட்டத்தில் தொழில் துறையினர் கூறுகையில்; ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் பழைய நிலையை முழுமையாக அடையவில்லை.

    இந்த நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது மிகப்பெரிய தவறு. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உங்கள் மனதில் இருப்பதை வைத்து மின் கட்டணத்தை உயர்த்தாதீர்கள். மக்களின் கோரிக்கைகளையும் கேளுங்கள்' என்றனர்.

    "குடியிருப்போர் சங்கத்தினர் கூறுகையில், மின்கட்டணத்தை 3 விதமாக பிரிக்க வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என 3 பிரிவாக அவரவர் தகுதிக்கு ஏற்ப மின் கட்டணத்தை அதிகரிக்கலாம். ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தால் பாதிக்காது. இப்போது மொத்தமாக உயர்த்தினால் பாதிக்கும்.

    இனி மாதம்தோறும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என 3 பிரிவாக பிரித்து 15 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தலாம். இல்லாவிட்டால் மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக மாறும்" என்றனர்.

    கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கிராமங்களில் பாதி நேரம் மின்சாரமே இல்லை. மின் கட்டணம் உயர்த்துவதில் நகரத்தை வைத்து மட்டுமே முடிவு செய்யாதீர்கள். கிராமங்களையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறீர்கள். அதை முழுமையாக கொடுத்தால்தான் விவசாயம் செய்ய முடியும். பல கிராமங்களில் போதிய மின் ஊழியர்கள் இல்லை. இதனால் அங்கிருக்கும் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் சாவியை எங்களிடம் கொடுத்து இயக்க சொல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட்டால் எங்கள் மீது வழக்கு போடப்படுகிறது. எனவே, கிராமங்களில் மின் ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்தடை ஏற்பட்டால் நகரங்களில் புகார் செய்ய ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் இல்லை.

    இதனால் கிராமங்களிலும் முழுநேர மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயத்துக்கும் போதிய அளவு மின்சாரம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கூட்டத்தில் பேசிய மின் வாரிய முன்னாள் பொறியாளர் முத்துச்சாமி, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 1988 முதல் 2000-ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கி வந்த மின்சார வாரியம் 2000-ம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தில் இயங்கியது.

    கடந்த வருடத்தில் 6 முறை மட்டுமே மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் 4 முறை மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததற்கு ஒழுங்குமுறை ஆணையமே காரணம். ஆண்டு தோறும் முறையான கணக்கீடு, தணிக்கை செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

    தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    ×