search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம்- மின் கட்டணத்தை உயர்த்த பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம்- மின் கட்டணத்தை உயர்த்த பொதுமக்கள் எதிர்ப்பு

    • அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.

    அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    முதலில் கோவையில் பொது மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.

    சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

    காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மின்சார வழங்குமுறை ஆணைய தலைவர் சந்திர சேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் தொடங்கியது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி மின்கட்டணத்தை உயர்த்த எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கருத்து கேட்பு கூட்டத்தில் தொழில் துறையினர் கூறுகையில்; ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் பழைய நிலையை முழுமையாக அடையவில்லை.

    இந்த நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது மிகப்பெரிய தவறு. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உங்கள் மனதில் இருப்பதை வைத்து மின் கட்டணத்தை உயர்த்தாதீர்கள். மக்களின் கோரிக்கைகளையும் கேளுங்கள்' என்றனர்.

    "குடியிருப்போர் சங்கத்தினர் கூறுகையில், மின்கட்டணத்தை 3 விதமாக பிரிக்க வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என 3 பிரிவாக அவரவர் தகுதிக்கு ஏற்ப மின் கட்டணத்தை அதிகரிக்கலாம். ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தால் பாதிக்காது. இப்போது மொத்தமாக உயர்த்தினால் பாதிக்கும்.

    இனி மாதம்தோறும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என 3 பிரிவாக பிரித்து 15 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தலாம். இல்லாவிட்டால் மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக மாறும்" என்றனர்.

    கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கிராமங்களில் பாதி நேரம் மின்சாரமே இல்லை. மின் கட்டணம் உயர்த்துவதில் நகரத்தை வைத்து மட்டுமே முடிவு செய்யாதீர்கள். கிராமங்களையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறீர்கள். அதை முழுமையாக கொடுத்தால்தான் விவசாயம் செய்ய முடியும். பல கிராமங்களில் போதிய மின் ஊழியர்கள் இல்லை. இதனால் அங்கிருக்கும் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் சாவியை எங்களிடம் கொடுத்து இயக்க சொல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட்டால் எங்கள் மீது வழக்கு போடப்படுகிறது. எனவே, கிராமங்களில் மின் ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்தடை ஏற்பட்டால் நகரங்களில் புகார் செய்ய ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் இல்லை.

    இதனால் கிராமங்களிலும் முழுநேர மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயத்துக்கும் போதிய அளவு மின்சாரம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கூட்டத்தில் பேசிய மின் வாரிய முன்னாள் பொறியாளர் முத்துச்சாமி, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 1988 முதல் 2000-ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கி வந்த மின்சார வாரியம் 2000-ம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தில் இயங்கியது.

    கடந்த வருடத்தில் 6 முறை மட்டுமே மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் 4 முறை மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததற்கு ஒழுங்குமுறை ஆணையமே காரணம். ஆண்டு தோறும் முறையான கணக்கீடு, தணிக்கை செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

    தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×