search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி"

    • மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் விஜயகுமார் சிங் சிவகங்கைக்கு வந்தார்.
    • அங்குள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மத்திய மந்திரி மரியாதை செலுத்தினார்.

    திருப்பத்தூர்

    மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் விஜயகுமார் சிங் சிவகங்கைக்கு வந்தார். அவர் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள் மணிமண்டபத்திற்கு சென்று அங்குள்ள அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், ஒன்றிய தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி, மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

    • ஊரக மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
    • அரசு திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்று சேரவேண்டும். பிரதமர் மோடியின் இந்த எண்ணத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் மனதில் கொள்ளவேண்டும்.

    எந்த ஒரு அரசு திட்டங்களுக்காகவும், நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியுடன் இருக்கிறது. கடந்த எட்டு வருடங்களில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், தேவையான பயனாளிகளுக்கு சென்றடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
    • இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு பல்வேறு வாய்ப்புகளை அரசு உருவாக்கியுள்ளது.

    கஜ்ரவுலா:

    உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரவுலா நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற் கொண்டுள்ள தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

    இந்திய இளைஞர்களை ஒட்டு மொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும், உலகத்திற்கான வளர்ச்சி இயந்திரமாகவும் அவர்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியா எதிர்காலத்தை மையமாகக் கொண்டது, அது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. 


    கடந்த காலங்களில் நாட்டில் நிலையற்ற கூட்டணி அரசுகள் பதவி வகித்தன. இது போன்ற நிலையற்ற தன்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. 2014-ஆம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்தனர். அது கொள்கைகளில் நிலைத் தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியது.

    தற்போதைய மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 80,000-ஐ கடந்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5000 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், ட்ரோன் தொழில்நுட்பம், தொலை மருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐடிஐ-களில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    போர்ட் பிளேர்:

    அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரும் புகழே வெற்றிக்கு காரணம்.
    • 2024 மக்களவைத் தேர்தலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    மாநில தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி, குஜராத் பாஜக கோட்டையாக இருந்தது, இனி எப்போதும் இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. இந்த முடிவு மற்ற மாநில தேர்தல்களிலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். பிரதமர் மோடிக்கு நாட்டிலும், குஜராத்திலும் கிடைத்த பெரும் புகழே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம்.

    இந்த தேர்தலில் புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன, வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்களை அளித்தன, ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவற்றை காணவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜிப்மருக்கு இந்த ஆண்டு ரூ.1340 கோடி நிதி ஒதுக்கீடு.
    • இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    • நாடு முழுவதும் 23 புதிய மருத்துவமனைகளை அமைக்கப்படுகிறது.
    • 2000 மருத்துவர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு.

    சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

    ஊழியர் காப்பீட்டு கழகம், மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான இளம் மருத்துவர்களை ஆதரிப்பதிலும் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடர்புடைய பணியை மேற்கொள்ள உள்ளனர். நமது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும்.


    நாட்டின் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவை எளிதாக கிடைக்க அதன் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலை மாறி, இப்போது தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் இஎஸ்ஐ சென்று சேவை புரிந்து வருகிறது.

    பீடி மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஊழியர் காப்பீட்டு கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. 60 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • படகுகளை நிறுத்த வசதி போன்றவை செய்து தர மீனவர்கள் கோரிக்கை.
    • மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

    துர்காபூர்:

    அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளுக்கு பயணம் மேற் கொண்ட மத்திய மீனவளத்துறை இணை மந்திரி எல்.முருகன், மத்திய அந்தமான் மாவட்டத்திற்கு உட்பட்ட துர்காபூர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிட்டார். அப்பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது மீன்பிடித் தளத்தில் தங்களுக்கு சுத்தமானக் குடிநீர், தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வளாகம், சாலை வசதி, படகுகளை நிறுத்துவதற்கான வசதி போன்றவை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். 


    அண்டை நாட்டு மீனவர்கள் நம் கடல் எல்லைப் பகுதியில் வந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதைக் கேட்டறிந்த மந்திரி முருகன், மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர் கூறியுள்ளதாவது: நாட்டிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் மத்சய சம்படா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்வளம், மீன்பிடித் தளம் மற்றும் மீன்பிடி இறங்கு தளம், துறைமுகம் மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன‌.


    நீலப் புரட்சி திட்டத்திற்கு 5,000 கோடி, துறைமுகங்களை மேம்படுத்தி நவீனப்படுத்த 7,000 கோடி, பிரதமரின் மத்சய சம்படா திட்டத்திற்கு 20,000 கோடி என மொத்தம் 32,000 கோடி நிதி, மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    பாரம்பரிய மீன்பிடித் தொழிலை மேம்படுத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக 2022-23 ஆம் நிதியாண்டில் அந்தமானுக்கு ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.
    • அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன. கேலோ இந்தியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் வெளிப்படையான தேர்வு மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இது குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 விளையாட்டுப் பிரிவுகளில் 2,841 வீரர்கள் இந்திய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 


    இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த அறிவுரை
    • முக கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்.

    சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்திக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
    • கடலோரக் காற்றாலைத் திட்டத்திற்காக டென்மார்க்குடன் ஒப்பந்தம்.

    நாட்டில் சூரிய சக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி ஆர் கே சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து மின்சார உற்பத்தி செய்வதற்கு உரிய பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்திக்கான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு பல்வேறு ஊடகங்கள் மூலம் பொது மக்களின் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாட்டில் காற்றாலை எரிசக்தியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காற்றாலை மின்சக்தியை பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் டென்மார்க்குடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

    கடலோரக் காற்றாலைத் திட்டத்திற்காக உயர்தர காற்று டர்பைன்கள்,.உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது, கடலோர கரைப்பகுதி காற்று சக்திக்கான முன்னறிவிப்புகள் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இந்த உடன்படிக்கை வகை செய்கிறது. 

    ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மத்திய எரிசக்தி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தேசிய வேதியல் ஆய்வகத்தின் மூலம் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    ஹைட்ரஜனின் வேதியல் ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதற்கு எரிசக்திக் கலன்களை உருவாக்கி அவற்றின் வழியாக வாகனங்களை இயக்க இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தும் நடைமுறை இந்தியாவில் வணிக ரீதியில் இன்னும் சோதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ×