search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதை"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார்.
    • ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார். பின்னர் அவர் காந்திஜி ரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    காந்திஜி ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோடு என்பதால் அந்தப் பெண் நடுரோட்டில் அமர்ந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

    ஆனால் அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பொது மக்களும் கூடி விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் தானாக அங்கிருந்து நடந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ் முன்பு அந்தப் பெண் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்களும், போலீசார் உடன் இணைந்து அங்கிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.

    இதையடுத்து ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அங்கலட்சுமி என்பதும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    பின்னர் அவருக்கு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் போலீசார் இனி இவ்வாறு பொது இடங்களில் நடந்து கொள்ளக் கூடாது என அங்கலட்சுமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவயது.

    • மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி, பெருமாள்நகர்,10-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்றுமாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பலத்த வெட்டுக்காயத்துடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக கொலையுண்ட வெங்கடேசனின் நண்பர்களான, பெருமாள் நகரை சேர்ந்த நரேஷ் குமார், தினேஷ் ஆகிய2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது நண்பர்கள் அனைவரும் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும்இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
    • வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை அருகே தமிழ்செல்வன் என்பவர் அட்சயபாத்திரம் என்ற பெயரில் மதிய வேலையில் கட்டணமின்றி இலவச உணவு வழங்கும் உணவகத்தை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் இரவு நேர காவலாளியாக தோப்புபாளையத்தை சேர்ந்த முருகேசன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் இரவு சாப்பிட்டுவிட்டு கடையில் பணியில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைப்பார்த்த காவலாளி முருகேசன் அவர்களிடம் சென்று ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டார்.

    இதனையடுத்து 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து முருகேசன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ஓட்டல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது காவலாளி முருகேசனை 3 பேர் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது காவலாளியை தாக்கியது மேக்கூர் பகுதியை சேர்ந்த பெருந்துறை பேரூர் தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான் (27), எண்ணவன்னாங்காடு பகுதியை சேர்ந்த வினோத் (25) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அவர்கள் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓட்டல் காவலாளியை தி.மு.க. பிரமுகர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகியோர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அந்த பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த கும்பல் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து குடிபோதையில் சரமாரியாக தாக்கினார்கள்.

    அப்போது இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் பாலமுருகன், தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 16 வினாடிகள் கொண்ட வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.

    சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கி, இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • சுமார் 35 வயதுள்ள பெண் குடிபோதையில் அரை நிர்வாண கோலத்தில் படுத்துக்கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

     மங்கலம்:

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு இடுவாய்பாரதிபுரத்தை சேர்ந்த சுமார் 35 வயதுள்ள பெண் குடிபோதையில் அரை நிர்வாண கோலத்தில் படுத்துக்கிடந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார் குடி போதையில் அரைநிர்வாண கோலத்தில் படுத்துக்கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நிரவி கிராமத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீமதி 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.
    • நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்திவேல் புடவையில் வீட்டின் வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு காணப்பட்டார்

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி முக்கூட்டு ஆலமரம் பகுதியைச்சேர்ந்தவர் சக்திவேல் (வயது31). சக்திவேல் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், தாய் காளியம்மாளுடன் வசித்துவந்தார். கொத்தனார் வேலை செய்துவரும் இவர் கடந்த 6 மாதத்திற்கு முன், நிரவி கிராமத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீமதி 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.  சக்திவேலுக்கு குடிபழக்கம் உண்டு. மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தாயுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் பலமுறை எடுத்துகூறியும், சக்திவேல் தொடர்ந்து குடித்துவிட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீமதி, கணவர் மற்றும் மாமியாரிடம் கூறாமல், நிரவியில் உள்ள அவரது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சக்திவேல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தாய் காளியம்மாள் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்திவேல் புடவையில் வீட்டின் வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு காணப்பட்டார். இது குறித்து, காளியம்மாள் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கண்டமங்கலத்தில் குடிபோதையில் ரகளை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (26). இவர் உள்பட 6 பேர் கண்டமங்கலத்தில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டனர். கையில் உருட்டுக் கட்டையை வைத்து கொண்டு அந்த வழியாக சென்றவர்களை தாக்கினார்கள். மேலும் கடைகளை அடைக்க சொல்லியும் ரகளை செய்தனர். ரகளையில் ஈடுபட்ட கும்பல் தாக்கியதில் சங்கர் மற்றும் ஒரு வாலிபர் காயம் அடைந்தனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ரகளையில் ஈடுபட்ட மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஆடுகளை விற்று மது குடித்ததால் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கினோம் என்று பெற்றோர் உள்பட 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி என்ற தவிடன் (வயது 55). இவருக்கு காளியம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் சங்கன் (30) என்பவருக்கு திருமணம் நடந்தது. 2-வது மகன் சரவணன் (27). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த சரவணன் மது பழக்கத்துக்கு அடிமையா னதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணனை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் சங்கன் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதில் இறந்தார். இதையடுத்து தவிடன், காளியம்மாள், சங்கன் ஆகிய 3 பேரும் மறவப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மூத்த மகனுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தனிக்குடித் தனம் சென்று விட்டார். நான், எனது மனைவி மற்றும் 2-வது மகன் சரவணனுடன் வசித்து வந்தோம். போதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்து வந்தார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் மது குடித்தார். இதனை கண்டித்ததால் சரவணன் கம்பால் எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தான். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்தான். பணம் தராத நேரத்தில் செம்மறி ஆடுகளை விற்று மது குடித்து வந்தான். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் பிரச்சினை ஏற்பட்டது.

    கடந்த 5-ந்தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், தரக்குறைவாக பேசியதோடு எங்களை சரமாரியாக தாக்கினான். அப்போது அங்கு வந்த சங்கனையும் தரக்குறைவான வார்த்தை களால் பேசினான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இரும்பு கம்பியால் சரவணனை தாக்கினோம். இதில் அவன் மயங்கி விழுந்தான். குடிபோதையில் சரவணன் தூங்கி இருக்கலாம் என்று சென்று விட்டோம். காலையில் பார்த்தபோது சரவணன் இறந்தது தெரிய வந்தது.

    இவ்வாறு அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    • குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு, கருப்பையா தோப்பை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (60). இவர் நேற்று மதியம் பேரன் ஆகாசுடன்(13) மேல அண்ணா தோப்பு, டீச்சர்ஸ் காலனி அருகே நடந்து சென்றார். அங்கு வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புலட்சுமி, ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    வேகமாக சென்ற கார் மேலும் 2 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களில் மதுரை கீழ அண்ணா தோப்பு கருப்பையா மகன் பிரபாகரன் (13) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    படுகாயம் அடைந்த இன்னொரு சிறுவன் முத்து (14) என்பது தெரியவந்தது. இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

    அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (43) குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
    • இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். (வயது 54). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டார். ஆனால் இரவுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்ணாமலைநகர் டாஸ்மாக் கடை அருகே கிருஷ்ணராஜ் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல்அறிந்த அண்ணா மலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்ேபாது கிருஷ்ணராஜ் பிணமாக கிடந்தார். அவர் குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்
    • பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பாறசாலை இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரென்ஜித் ( வயது 40).

    இவரது நண்பர்கள் விபின், றிஜூ , ரெஜி. நேற்று காலை நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமணவீட்டிற்கு சென்றனர். திருமணம் முடிந்து நண்பர்கள் சேர்ந்து மது விருந்து நடத்தினர். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்தனர்.

    இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ரென்ஜித் மது போதையில் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர்களான விபின், றிஜூ , ரெஜி ஆகியோர் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.

    மது போதையில் ரென்ஜித் வீட்டிற்கு சென்று 3 பேரும் சேர்ந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ரென்ஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரென்ஜித்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேரும் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ரென்ஜித் தலையில் தாக்கியதோடு, அவரது கழுத்திலும் குத்தினர். இதில் ரென்ஜித் படுகாயமடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த உடன் 3 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது படுகாயமடைந்த ரென்ஜித் இறந்த நிலையில் காணப்பட்டார். மேலும் போலீசார் ரென்ஜித் உடலை மீட்டுஉடல் கூறு ஆய்விற்கு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

    மேலும் நண்பர்கள் இடையே மாறி மாறி தாக்கியதில் விபின் தலையிலும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர் பாறசாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜூ, றஜி யை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×