search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி தாக்குதல்"

    • குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
    • வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை அருகே தமிழ்செல்வன் என்பவர் அட்சயபாத்திரம் என்ற பெயரில் மதிய வேலையில் கட்டணமின்றி இலவச உணவு வழங்கும் உணவகத்தை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் இரவு நேர காவலாளியாக தோப்புபாளையத்தை சேர்ந்த முருகேசன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் இரவு சாப்பிட்டுவிட்டு கடையில் பணியில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைப்பார்த்த காவலாளி முருகேசன் அவர்களிடம் சென்று ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டார்.

    இதனையடுத்து 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து முருகேசன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ஓட்டல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது காவலாளி முருகேசனை 3 பேர் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது காவலாளியை தாக்கியது மேக்கூர் பகுதியை சேர்ந்த பெருந்துறை பேரூர் தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான் (27), எண்ணவன்னாங்காடு பகுதியை சேர்ந்த வினோத் (25) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அவர்கள் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓட்டல் காவலாளியை தி.மு.க. பிரமுகர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகியோர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×