என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahabalipuram"

    • மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
    • தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றலாபயணிகள் இங்கு உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தின் அருகே கடல்சார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அங்குள்ள பழங்காலத்து நங்கூரம், மிதவை விளக்கு, கப்பல் மாலுமி தளம், பைனாகுலர், உள்ளிட்ட கடல்சார் அறிவியல் கருவிகள் விபரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தி ஆவலுடன் பார்த்து வந்தனர்.

    இது அறிவியல் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளநிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமானோர் கடல்சார் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்று நினைத்து செல்லும் போது அதன் கதவுகள் மூடப்பட்டு கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே கடல்சார் அருங்காட்சியத்தில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
    • தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னக் குழுவும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    மத்திய அரசின் தொல்லியல்துறை (ASI) கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி டிக்கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் எட்டியுள்ளது.

    2019-20 நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன.

    2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னங்களும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    2023-24 நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. 

    • வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
    • பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும்.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறை தினத்தையொட்டி பொழுதை கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மாமல்லபுரம் வந்ததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

    புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.

    குடும்பம், குடும்பமாக வந்த பல பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை போன்ற சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் பயணித்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும். அரையாண்டு விடுமுறை தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

    இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதிகளை இன்று மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு படை, கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    • 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • மாணவர்களின் வருகையால் குறு, சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, அதன் 1300 ஆண்டு, வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடம் பிடித்த டெல்லி தாஜ்மஹாலை, மாமல்லபுரம் மிஞ்சியது. அதேபோல் தற்போது கல்வி சுற்றுலா என்றதும் பள்ளி மாணவ-மாணவிகளிடம் முதல் இடம் பிடிப்பது மாமல்லபுரமாக மாறி வருகிறது.

    ஏற்கனவே சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்பு, செஸ் ஒலிம்பியாட், காத்தாடி திருவிழா, ஜி-20, சவுண்ட் ராக்கெட் என பிரபலமான மாமல்லபுரம் தற்போது கல்வி சுற்றுலாவிலும் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது., பள்ளி மாணவர்கள் அதிகளவில் வருவதால் புராதன சின்னங்கள் அருகே கடை வைத்திருக்கும் குறு, சிறு வியாபாரிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    • நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 வசூலிக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.

    உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்டமணமும் இன்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

    குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது.
    • ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று கோடை விடுமுறையின் ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும் சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து இருந்ததை காண முடிந்தது.

    கடற்கரை கோவில் ஐந்தரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. அங்குள்ள பாறை சிற்பங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததை காண முடிந்தது.

    ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது. மாமல்லபுரம் நகர பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் சாலவான்குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை புராதன சின்னத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    வடக்கு மாமல்லபுரம் கிராம பொதுக் கோவிலான, கங்கையம்மன், ஊத்துக்காட்டு அம்மன் கோயிலில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னிதி விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    70ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தைகான தேவநேரி, வெண்புருஷம், பட்டிபுலம், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, பெருமாளேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    கோவிலின் தர்மகர்த்தா ராமலிங்கம், செயலாளர் லோகநாதன், பொருளாளர் பழனிவேல், கிட்டு, கேசவன், அன்பு, ரங்கநாதன், ஜெயராமன், கவாஸ்கர், மகேஷ் மற்றும் வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் வந்தபோது, இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வண்ணம், அலங்கார மின்விளக்கு அமைக்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரங்களில் அவை நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே புராதன சின்னங்களை பார்வையிட ஜி-20 மாநாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்த போது அவர்கள் ரசிக்க மின் விளக்குகள் பழுது நீக்கி கூடுதல் விளக்குகள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து புராதன சின்னங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரம் வரை அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் இரவு நேரத்தில் மின்னொளியில் பார்த்து ரசிக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த தொல்லியல்துறை சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான மின் கட்டண விபரம், கூடுதல் காவலாளி நியமனம், தொடர் பாதுகாப்பு, நுழைவு கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டரிந்து சென்றார். எனவே விரைவில் இரவிலும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை தினமும் அல்லது விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.

    மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
    • ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில், 75-வது சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு அதை இந்தியா முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 புராதன சின்னங்களில் டிஜிட்டல் முறையில் புரொஜக்டர் மூலம் சிற்பங்களில் ஒளி அமைக்கப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரத்தில் நேற்று இரவு வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதியில் பகுதியில் இரவு 9 மணி வரை, ஓளி அலங்காரத்துடன் டிஜிட்டல் லோகோ ஒளி அமைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், வரும் நாட்களில் கடற்கரை கோவில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது

    ×