search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைக்கல் வளாகத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளை காணலாம்.

    அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
    • பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும்.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறை தினத்தையொட்டி பொழுதை கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மாமல்லபுரம் வந்ததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

    புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.

    குடும்பம், குடும்பமாக வந்த பல பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை போன்ற சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் பயணித்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும். அரையாண்டு விடுமுறை தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×