search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்ற மதுரை கிளை"

    • கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள்.
    • வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெயஆனந்த் என்ற கர்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் கட்டிடம் குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துக்களை நான் பதிவு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சம்பந்தமாக என்னிடம் முறையான விளக்கம் கேட்கப்படவில்லை.

    எனது வாழ்வாதாரமே கோவிலில் அர்ச்சகர் பணியை வைத்து தான் உள்ளது. என்னுடைய சமூக வலைதள கருத்துக்கள் தவறு என்று நான் பதிவிட்டும் அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் ஒன்றும் நீங்கள் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது. கோவில் குறித்த இந்த மாதிரி பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்கும்.

    கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள். அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பியதோடு, கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பின்னர் மனுதாரரை இந்து சமய அறநிலையத்துறையின் இடைக்கால பணி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    • பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் சினிமா படங்களின் சிறப்பு காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை.
    • தியேட்டருக்குள் மற்ற பார்வையாளர்களை சினிமா பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பிரபலமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் புதிய சினிமா படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

    இவற்றில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த சினிமா படங்கள் வெளிவரும்போது அவர்களின் ரசிகர்கள் அந்த நாளை திருவிழா போல கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் ஷோ, சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது.

    இந்த காட்சிகளின் போது தியேட்டர்கள் முன்பு 24 மணி நேரமும் ரசிகர்கள் பெரும் கூட்டமாக நின்று கொண்டு சாலையில் பட்டாசுகள் வெடிப்பது, பேனர், கட்அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதே போல தியேட்டருக்குள் மற்ற பார்வையாளர்களை சினிமா பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அங்குள்ள இருக்கைகள், திரைச்சீலை உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் இளம் சமுதாயம் எதிர்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் அவலம் ஏற்படும்.

    பல ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற ரசிகர்கள் என்ற போர்வையில் தங்களது உடல் நலத்தை கெடுத்து, பெற்றோருக்கு பல கஷ்டங்களை கொடுக்கின்றனர். பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் சினிமா படங்களின் சிறப்பு காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை.

    ரசிகர் மன்றம் சார்பில் ஒரு டிக்கெட்டுக்கு 1000 ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சில ரசிகர்கள் பறவை காவடி, பூ மழை, கிரேன் வாகனத்தில் காவடி என ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பலர் உயிரை இழக்கின்றனர்.


    சமீபத்தில் யூ-டியூபர் டி.டி.எப் வாசனின் செயலை கடுமையாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது. காரணம் அவரது நடவடிக்கை இளம் தலைமுறையினரை கெடுத்து, அவர்களின் உயிருக்கு ஆபத்து அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

    இதேபோல்தான் பிரபல சினிமா கதாநாயகர்களின் இளம் ரசிகர்களின் நடவடிக்கையும் உள்ளது. இது அவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடும்.

    எனவே முன்னனி கதாநாயகர்கள் நடித்த சினிமா வெளியிடப்படும் போதும், டிரெய்லர் வெளியிடும் போது ரசிகர்கள் காட்சி, சிறப்பு காட்சிகளின் போது தியேட்டர்கள் முன்பாக ரசிகர்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    • கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:-

    நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். மீனவ மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன்.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. சுமார் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    இதனால் மீனவ குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பலன் அடைவார்கள்.

    எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, கடந்த மாதம் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார்.

    அரசு வக்கீலின் தகவலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.
    • மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    மதுரை:

    வருகிற 23-ந்தேதி அன்று ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை உள்ளிட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

    இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து பங்கேற்கவும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள வழித்தடத்தில் பேரணியாக செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    • தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.

    மதுரை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திருஉருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

    குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.

    எனவே வருகிற 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.
    • வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஆதீனங்களில் மிகவும் பிரபலமான பிரசித்தி பெற்ற ஆதீன மடமாக மதுரை ஆதீனமடம் இருந்து வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் தரை வாடகைக்கு பயன்படுத்தும் விதமாக 10 வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. இதற்கு மாத வாடகையாக ரூ.2 ஆயிரத்து 500 என்றும், அதில் கட்டிடங்கள் கட்டினால் 10 வருட பயன்பாட்டிற்கு பின் அது ஆதீனத்திற்கு சொந்தமானது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி 2013-ம் ஆண்டு மதுரை ஆதீனம் மற்றும் மாநகராட்சி உரிய அனுமதி இல்லாமல் பகவர்லால் பெரிய கட்டிடம் கட்டியது மட்டுமில்லாமல் வாடகையும் செலுத்துவதில்லை.

    எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு எதிராக தமிழ்நாடு புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் பகவர்லால் மனு தாக்கல் செய்து உள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டம் (2017) பொருந்தாது. எனவே வருவாய் கோட்டாட்சியரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, ஆதீன மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78-ன்படி கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகை செலுத்தாதவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்தோம். அதை விசாரணை செய்த இணை இயக்குனர் ஆக்கிரமிப்பாளரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பகவர்லால் ஆணையரிடம் முறையீடு செய்தார். அது நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸ் சட்ட விரோதமானது. கோவில் மற்றும் மடங்களுக்கு இது பொருந்தாது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும். மேலும் வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம். அதேபோல தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கோவில் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
    • சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது அங்கு கூடிய கூட்டத்தினர், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அவர்களுக்கு ஜாமின் அளித்தும், சிலருக்கு முன்ஜாமின் அளித்தும் கரூர் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஜாமின், முன்ஜாமினை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து, அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆஜரானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    தற்போது அவர்களில் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் கோர்ட்டு மீண்டும் ஜாமின் அளித்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அந்த ஜாமினை ரத்து செய்யக்கோரியும் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
    • நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவில் கூறியிருந்ததாவது:-

    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருத்துவ செலவு சுமார் ரூ.9 லட்சத்தை காப்பீட்டுத் தொகையில் தனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழங்க வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகையை எனக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால் இதுவரை எனக்கு வர வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறன் நேரில் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    அப்பொழுது நீதிபதி அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போல் ஒரு நடத்துனர் தனது பயண டிக்கெட் பண்டலை தொலைத்து விட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் மருத்துவத்துறையில் ஒரு உயர் அதிகாரி ஆவணங்களை தொலைத்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளை ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது.

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சொன்னால் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறுகின்றனர்.

    எனவே ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

    • அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது.
    • தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஏற்கனவே தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

    இதற்கிடையே புதிதாக நியமனம் என்பது தேவையற்றது. மேலும் அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும். மேலும் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு கோவில் நிதியிலிருந்து ரூ.8 ஆயிரம் மாத ஊதியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு அரசின் அரசாணை சட்டவிரோதமானது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதி மொழிக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் முன்பாக விசாரணை நடைபெறும் காலங்களில் இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

    பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகநாதன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த அர்ச்சகர் பயிற்சி என்பது பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு அனுபவ பயிற்சிதான். இது தொடர்பான விரிவான விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர்.

    அரசு தரப்பு வாதத்திற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஆட்சேபம் தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் இந்த அரசாணை அமல்படுத்தும் வேலையை அரசு நிறைவேற்றி விடும் என்பதால் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்கக்கூடாது என தெரிவித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

    • கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    மதுரை:

    பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    • மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் கோர்ட்டை நாடலாம்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டில் போலி டாக்டர் ராஜலட்சுமி என்பவருக்கு உதவியதாக என் மீது தொண்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் என் மீது பழி வாங்கும் நோக்கத்தில், டி.எஸ்.பி. தூண்டுதலின்படி போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    எனவே டி.எஸ்.பி. புகழேந்தி, தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி திருவாடானை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு எனது புகாரினை விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    ஆனால் அந்த உத்தரவை தொண்டி போலீசார் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே திருவாடானை கோர்ட்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரரின் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கீழ் கோர்ட் பிறப்பித்த உத்தரவை போலீசார் பின்பற்றவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபடும் போலீசார் மீதான புகார்கள் குறித்து மாவட்ட நீதிபதியே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் மனித உரிமை விதிகளும் தெரிவிக்கின்றன.

    சிறை குறிப்பை பார்க்கும் போது காவல்துறைக்கு எதிராக குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் மனுதாரர் புகாரை விசாரித்ததில் உண்மை தன்மை இல்லை என கூறி முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் இந்த கோர்ட்டை நாடலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    • கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
    • காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, எம்.வேப்பங்குளம் கிராமத்தில் ஊர் பொது சாவடியின் முன்பாக இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு உள்ள மந்தைக்கு செல்லும் தெருவின் இரு புறங்களிலும் பல வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலமானது பொது பாதையாகவும், அறுவடை காலங்களில் பயிர்களை தூற்றும் களமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிலர் கோவில் கமிட்டி என்கிற பெயரில் தன்னிச்சையாக செயல்பட்டு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி ஏதும் பெறாமலும், திட்ட அங்கீகாரம் ஏதுமின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கனவே ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கோவில் கட்டுமான பணி நடைபெறாது என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் புதிய கோவில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே கோவில் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கட்டுமான பணிகள் நடைபெறாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எப்படி மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கியது? இதற்கு யார் அனுமதி வழங்கியது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் விசாரணையின் முடிவில், கோவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், யாரிடம் அனுமதி பெற்று கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    ×