search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்: நீதிபதி காட்டம்
    X

    நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்: நீதிபதி காட்டம்

    • அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
    • நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவில் கூறியிருந்ததாவது:-

    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருத்துவ செலவு சுமார் ரூ.9 லட்சத்தை காப்பீட்டுத் தொகையில் தனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழங்க வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகையை எனக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால் இதுவரை எனக்கு வர வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறன் நேரில் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    அப்பொழுது நீதிபதி அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போல் ஒரு நடத்துனர் தனது பயண டிக்கெட் பண்டலை தொலைத்து விட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் மருத்துவத்துறையில் ஒரு உயர் அதிகாரி ஆவணங்களை தொலைத்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளை ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது.

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சொன்னால் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறுகின்றனர்.

    எனவே ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

    Next Story
    ×