search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவமதிப்பு வழக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்கவில்லை.
    • ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் "சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கும். பொருட்கள் மூலமாக மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்துவது மட்டுமே நிறுவனத்தின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

    • கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    மதுரை:

    பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

    • சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார்.
    • ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சப்-கலெக்டர் விஷ்ணுராஜ் எதிர்கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில மறுவகைப்படுத்துதல் வழக்குகள் அதிகம் என்பதால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இருப்பதால் கோர்ட்டு விதிக்கும் காலக்கொடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்த முடியாததால் சப்-கலெக்டர் இத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
    • மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, லலித் மோடியின் சார்பில் ஆஜராகி வாதாடினார்

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி மீது ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார். இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் லலித் மோடி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பதிவுகளில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி தனது வாதத்தை முன்வைத்தார்.

    அப்போது, லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக லலித் மோடி சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய நிளிதழ்ளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    லலித் மோடி சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் மிகவும் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பதிவுகள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    ×