search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்ற மதுரை கிளை"

    • விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
    • இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த நாகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது.

    பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் பாரம்பரியமாக கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது என்பது நடந்து வருகிறது.

    தற்போது இது பெண்கள், குழந்தைகள் மீது ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது.

    எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

    மேலும் கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    எனவே இந்த விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமானது அல்ல. இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.
    • பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

    பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதில், பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    மேலும், பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.
    • வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்காக பசும்பொன் சென்றவர்கள், அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

    அப்போது பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் என்ற கிராமத்தில் உள்ளே சென்ற வேனை, சிலர் வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் வேன் டிரைவர் சிவக்குமார், வீரமணி மற்றும் மலைகண்ணன் ஆகிய 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் பலர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டனர். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் சாட்சிகள் கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்வதில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த வழக்கில் பல அரசு தரப்பு சாட்சிகள் சாட்சிகளை ஒழுங்காக பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கூட குற்றவாளிகளுக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறி விட்டனர்.

    எனவே இந்த வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் இருந்து வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் இந்த வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.

    எனவே இந்த கொலை வழக்குகளின் விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர்.
    • கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகா பலேஸ்வரர் கோவில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

    ஆனால் இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆவணங்களை நேரடி ஆய்வு செய்தபோது அதிகமான பல்வேறு சொத்துகள் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டும் பட்டா வழங்கப்பட்டும் உள்ளது கண்டறியப்பட்டது.

    அதன் பின் இந்த ஆய்வு அறிக்கை திருச்சி இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என இணை ஆணையர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த கோவில் சொத்துக்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆகும். இந்நிலையில் கோவில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை என்று கூறி தனி நபர்கள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குள் உண்டியல் வைத்து வசூல் செய்வது, ஆன்லைனில் பணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்தும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோவிலில் தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட கோவிலில் அன்னதானம் வழங்க உண்டியல் வைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து அவை அகற்றப்பட்டன. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதி, கோவில்களில் தனி நபர்கள் உண்டியல் வைத்தது சம்பந்தமாக விசாரணை செய்து அது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும் கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    • அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வாசுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி பெற்று, கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரையூர் அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.

    இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது தூரம் தள்ளி வைத்தோம். இதற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் எதிர்தரப்பினர் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர். ஏற்கனவே அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சமூக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேனர் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

    பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    • மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
    • மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    மேலும் மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு உரிய முடிவு எடுத்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

    • எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.
    • தகுதி இல்லாத நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனியார் நிறுவனம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், சாலைகள் அமைக்கும் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகின்றோம். இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்காக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்ட கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு (டெண்டர்) அறிவிப்பானை வெளியிட்டது.

    இந்த டெண்டருக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி டெண்டர் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப ஏல மதிப்பீடு பட்டியல் வெளியிடப்பட்டதில் எனது விண்ணப்பத்தில் நான் கையொப்பமிடாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

    ஆனால் நேரடி டெண்டர் ஆவணங்களின் அனைத்து பக்கங்களிலும் நான் கையொப்பமிட்டு இருந்தேன். அது கருத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.

    சம்மந்தப்பட்ட நிறுவனம் இதுவரை தனியார் பணிகளையே செய்துள்ளனர். தகுதி இல்லாத இந்த நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம். எனவே டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்து புதிய டெண்டர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், புதுக்கோட்டை பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்கு நடத்தப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கில் நகராட்சித் துறை நிர்வாக இயக்குனர், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார்.
    • போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல.

    மதுரை:

    சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 213 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன், அவரது சகோதரர் ரவி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தற்போது குபேந்திரன் தனக்கு ஜாமின் அளிக்கும் படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். போலீசார் உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து உள்ளனர். எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்க முடியாது என்று உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

    மதுரை:

    கோயம்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட அப்சல் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட பலர் ரூ.19 லட்சம் வரை முதலீடு செய்திருந்தோம்.

    ஆனால் அவர்கள் உறுதியளித்த படி நாங்கள் செலுத்திய முதலீட்டு தொகையை வட்டியுடன் திருப்பி தரவில்லை. இது குறித்து புகார் அளித்ததால் 2017-ம் ஆண்டில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    வழக்கின் அடிப்படையில் எங்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்தனர்.

    அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிதி நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில் வேல் இறந்துவிட்டார்.

    ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிதி நிறுவனத்தினர் நிறைவேற்றாமல் 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் இந்த விவகாரத்தில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி விலகிக் கொண்டார். மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் புகார் மனு அனுப்பப்பட்டது.

    நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்சல் நிதிநிறுவனம், அதன் கிளை நிறுவனங்களால் சுமார் 60 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மோசடி செய்தவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் வக்கீல் மாதவன் ஆஜராகி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை மோசடி செய்தவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருப்பது சட்டவிரோதம். உடனடியாக இந்த நிதி மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

    முடிவில், இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
    • அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஏரியின் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.

    இதனால், இந்த ஏரியை நம்பி உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மணமேல் குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியே காணாமல் போய்விடும் என வாதிட்டார்.

    அப்போது அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள், வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு? குருந்தன்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன?

    ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா? ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.
    • போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த நூர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் சையது இஸ்மாயில், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான இவர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த எனது மகன் கடந்த மாதம் விடுமுறையில் மதுரை வந்தார்.

    கடந்த மாதம் 4-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மதுரை மாநகர போலீஸ் சிறப்பு பிரிவில் உள்ள சப்- இன்ஸ்பெக்டர் சிவா, போலீஸ்காரர் காமராஜ் உள்ளிட்ட சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து என் மகனை கைது செய்தனர்.

    எனது செல்போனையும் பறித்து சென்றனர். இதையடுத்து எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்த செயல், மனித உரிமை மீறலாகும்.

    எனவே எனது மகன் உள்ளிட்டவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது தொடர்பான விசாரணைக்காக, மதுரை மாநகர பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கரிமேடு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது அலி ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மகன் உள்ளிட்டவர்களை போலீசார் சட்ட விரோதமாக தாக்கி உள்ளனர். அது சம்பந்தமான சாட்சிகளை விசாரிப்பதற்கு வசதியாக போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் பதிவு அவசியமாகிறது. இதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

    அப்போது நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கூறுகையில், முறையாக சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் இருக்க வேண்டும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு இது போன்று பதிலளிக்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து, மதுரை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படியும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்

    ×