search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில்"

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.
    • தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.

    முதல்நாளான இன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை நேரடி பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 105 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 3 தேர்வு மையங்கள் என மொத்தம் மாவட்ட–த்தில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    வினாத்தாள்கள் 7 கட்டு காப்பு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இன்று காலை மாணவ- மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர். இதனை அடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.

    தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இது தவிர 150 பேர் கொண்ட 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்கள் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் 250 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது.

    விடைத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்ப–ட்டுள்ளது. விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து பிளஸ்-1 பொதுத் தேர்வு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தத் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகளும், 496 தனி தேர்வர்களும் என மொத்தம் 22,442 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்காக 105 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக மூன்று தேர்வு மையங்கள் என மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    • 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
    • வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத் தேர்வு வரும் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 105 மையங்களில் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதேப்போல் பிளஸ்-1 பொதுத்தேர்வை 22,442 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தனித் தேர்வர்களுக்கு கூடுதலாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்தடைந்தது.

    இந்த வினாத்தாள்களை ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பணியை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பார்வையிட்டார்.

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பொது தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    மேலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் மற்ற இடங்களில் வைக்கப் பட்டுள்ள வினாத்தா ள்களின் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அனைத்து பாட வினாத்தாள்கள், பிளஸ்-1 தேர்வுக்கான 3 பாட வினாத்தாள்கள் வந்து விட்டதாகவும், மீதமுள்ள பாடத்துக்கான வினாத்தாள்களும்,

    எஸ்.எஸ். எல். சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களும் விரைவில் வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
    • கடந்த ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.

    இதில் கோபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மினி ஐ.சி.யு என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக 2 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது.

    இதேப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி மருத்துவமனையில் தயாராக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48,665 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 57,472 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8,587 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெற்றனர்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 10,839 பேர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ உதவி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10,430 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டு 16,800 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு 108 ஆம்புலன்சில் 41 பிரசவம் நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

    கிராமம், மலை பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதே நகர பகுதியில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது. 

    • எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    ஈரோடு:

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பிறந்த நாள் பொது விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்ப ட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களில் பேசுபவர் விவரம் வருமாறு:

    ஈரோடு மேற்கு தொகுதியில் 19-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், நடிகர் காதல் சுகுமார், கோவை பலகுரல் தாமு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பவானி தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான சி.ஆர். சி.ரங்கநாதன், பி.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    அந்தியூர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஸ்வரி, கோவை அழகு, திருப்பூர் டி.ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 21-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேர்தல் பிரிவு துணைச் செயலா ளருமான இன்பத்துரை, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் சிவசாமி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயரும், மகளிர் அணி மாவட்ட செயலாளருமான மல்லிகா பரமசிவம், சிட்கோ சீனு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பெருந்துறை பகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன் எம். எல். ஏ, ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜே.கே. என்கிற எஸ்.ஜெயக்குமார், புதூர் மணி, என். கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பண்ணாரி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்திலும் இன்று 37 தியேட்டர்களில் அஜித்-விஜய் நடித்த துணிவு-வாரிசு படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் , அஜித். 2 பேருக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

    இவர்கள் நடித்த படம் ரிலீஸ் ஆகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் விழாக்கோலம் பூண்டு படத்தை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்-அஜித் நடித்த வாரிசு, துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனால் தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இன்று அஜித்-விஜய் நடித்த துணிவு-வாரிசு படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 37 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. ஈரோடு மாநகர பகுதியில் 11 தியேட்டர்களும் இதில் அடங்கும்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீ பிடிக்கக்கூடிய வெடி பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூ டாது. குடிபோதையில் திரைப் படம் பார்க்க வரக்கூடாது. மேடையில் ஏறி ஆடக்கூடாது.

    நாற்காலி மற்றும் திரை துணி ஆகியவை சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களே உரிய இழப்பீடு தர வேண்டும். பொதுமக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.

    திரைப்படம் பார்க்க வரும் பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. ரசிகர் மன்ற காட்சி திரையிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு. ட்ரம் செட், பேண்ட் ஆகியவை கொண்டு வரக்கூடாது என பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்தனர்.

    ஈரோட்டில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் இன்று அதிகாலை முதலே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.

    விஜய், அஜித் படங்களை கையில் வைத்துக்கொண்டு நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

    மேலும் பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். சில ரசிகர்கள் அஜித் -விஜய் பட டீ சர்ட் அணிந்து வந்திருந்தனர். சில ரசிகர்கள் உற்சாகமாக கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் ஒன்றாக தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளதால் தியேட்ட ர்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளையும் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.
    • ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    ஈரோடு:

    இந்த மாதம் 1-ந் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு வசதியாக கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

    அன்றைய தினமே ஈரோடு மாவட்ட த்திலும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

    அதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன .அதற்கான சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன.

    வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி முடிவடைந்தன.

    இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி கடந்த 5.1.2022 ஆண்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 ஆகும். இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் 29,240 பேர் சேர்க்கப்பட்டனர். 30 ஆயிரத்து 908 பேர் பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று 5-ந் தேதி நாளை கணக்கிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 தொகுதிகளையும் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,222 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 23 பேர் உள்ளனர்.

    ஈரோடு மேற்கு தொகுதியில் மொத்தம் 302 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 258 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஈரோடு மேற்கு தொகுதி தான் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ளது. மற்றவர்கள் 40 பேர் உள்ளனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 277 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 13 பேர் உள்ளனர்.

    பெருந்துறை தொகுதியில் மொத்தம் 264 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன.பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 105 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 8 பேர் உள்ளனர்.

    பவானி தொகுதியில் மொத்தம் 289 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. பவானி தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 17 பேர் உள்ளனர்.

    அந்தியூர் தொகுதியில் மொத்தம் 261 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 703 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 17 பேர் உள்ளனர்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 296 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 154 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 9 பேர் உள்ளனர்.

    பவானிசாகர் தொகுதியில் மொத்தம் 295 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 455 வாக்காளர்கள் உள்ளனர்.

    மற்றவர்கள் 21 பேர் உள்ளனர். 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 44 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.

    இதேபோல் பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 99 ஆயிரத்து 105 பேர் உள்ளனர். வழக்கப்போல் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 148 திருநங்கைகள் உள்ளனர்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர்.
    • போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி கடந்த ஆண்டு காட்டிலும் கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர்.

    குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் விளைவாக கடந்த ஆண்டு 40 கொலைகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு 21 கொலைகள் மட்டுமே பதிவானது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவாகும்.

    இந்த ஆண்டு பதிவான அனைத்து கொலைகளிலும் 100 சதவீதம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

    குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனி படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடி க்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 101 வாகனங்கள் மற்றும் 228 பவுன் நகைகள் உள்பட ரூ.2 கோடியே 24,87,957 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 5,142 நபர்கள் மீது உரிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 315 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தீவிர கஞ்சா தடுப்பு வேட்டை மூலம் 244 கஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 396 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 23 லட்சத்து 93 ஆயிரத்து 948 மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3,008 போதை மாத்திரைகள் மற்றும் 196 போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. 79 கஞ்சா குற்றவாளிகள் வாங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.

    தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 465 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12,017 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    அரசு மதுபானங்கள் வெளிநாட்டு மதுபானங்கள் கள்ள சந்தையில் பதுக்கியும் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 4,281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,368 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 48 ஆயிரம் மது பாட்டில்கள், 52 லிட்டர் சாராயம் மற்றும் 745 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 107 லிட்டர் கள்ளும், 562 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை உரிய முறையில் அழிக்கப்பட்டன.

    மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 138 இருக்கரவாகனம், 3 மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ.63,5,744 தொகை பெறப்பட்டு அது அரசுடைமை ஆக்கப்பட்டது.

    மேலும் 14 மணல் திருட்டு வழக்குகளில் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 34 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 115 சூதாட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 667 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.14,41,275 பறிமுதல் செய்ய ப்பட்டு நீதிமன்ற ங்களில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் காவல்துறை மூலம் 3,509 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு காரணமாக 90 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 169 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு நீதிம ன்றத்தில் விசாரிக்கப்பட்ட 25 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 190 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் அனைத்து கிராமங்களும் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகுவதை தடுக்க பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது.

    போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதோடு, அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் மேற்கு மண்டலத்தில் ஐ.ஜி.சுதாகர் உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,562 கிராமங்களில் 250 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 190 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போலீசார் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடைகள், குடோன்களில் அவ்வப்போது சோதனை நடத்தி போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1562 கிராமங்களில் முதல்கட்டமாக 250 கிராமங்களை தேர்வு செய்து அதில் இதுவரை 190 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அனைத்து கிராமங்களும் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றப்படும்.

    ஈரோடு புதுமைக் காலனியில் கடந்தாண்டு வரை கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது. போலீ சாரின் நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர்களிடம் கற்றலில் இடைவெளி ஏற்பட்டதை குறைக்க ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,189 பள்ளிகளை சேர்ந்த 37,718 மாணவ,மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அவல்பூந்துறை தொடக்க பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் செயல்படும் மாதிரி வகுப்புகளை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    கொரோனா தொற்றின்போது 19 மாதம் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் செயல்படாமல் இருந்தது.

    இதனால் மாணவர்களிடம் கற்றலில் இடைவெளி ஏற்பட்டதை குறைக்க 'எண்ணும் எழுத்தும்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1-ம் முதல் 3-ம் வகுப்பு மாணவர்கள் உரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை.

    இதற்கான பயிற்சி நூல் வழியாகவும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு மூலமும் பாட வாரியாக பயிற்சி வழங்கப்படுகிறது.

    குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டு, புதிர்கள், கலைகள், கைவினை பொருட்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.

    இதேபோன்ற பயிற்சி வரும் 2025 வரை வழங்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் பிழையின்றி படிக்க, எழுத, செயல்பட எழுத்தறிவு, எண்ணறிவு பெறுவர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள், மாதிரி பள்ளிகள், கே.ஜி.பி.வி. பள்ளிகள் என 1,189 பள்ளிகளை சேர்ந்த 37,718 மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்பறையில் கணினியில் பயில அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கூடுதல் செயல்பாட்டை பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அவல்பூந்துறை பஞ்சாயத்து தலைவர் சித்ரா, தாசில்தார் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் ரமேஷ், பி.டி.ஓ.க்கள் சக்திவேல், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
    • தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டு ள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

    கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்திய மங்கலம் போன்ற பகுதிகளி லும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரி பள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.

    • அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
    • ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்று வருகின்றது. 92 பதவிகளு க்கான இந்த எழுத்து தேர்வை எழுத ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 115 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

    தேர்வு கண்காணிக்கும் பணியில் 9 பறக்கும் படைகள், 7 நடமாடும் குழுக்கள், 34 ஒளிப்பதி வாளர்கள், 33 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

    தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

    ×