search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wrote the Plus-2 examination"

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.
    • தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.

    முதல்நாளான இன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை நேரடி பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 105 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 3 தேர்வு மையங்கள் என மொத்தம் மாவட்ட–த்தில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    வினாத்தாள்கள் 7 கட்டு காப்பு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இன்று காலை மாணவ- மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர். இதனை அடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.

    தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இது தவிர 150 பேர் கொண்ட 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்கள் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் 250 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது.

    விடைத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்ப–ட்டுள்ளது. விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து பிளஸ்-1 பொதுத் தேர்வு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தத் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகளும், 496 தனி தேர்வர்களும் என மொத்தம் 22,442 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்காக 105 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக மூன்று தேர்வு மையங்கள் என மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    ×