ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன.
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்திய மங்கலம் போன்ற பகுதிகளி லும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரி பள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.

X

Maalai Malar
www.maalaimalar.com